back to top
HomeTamil2 சாமுவேல் அதிகாரம் - 22 - திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தாவீதின் வெற்றிப் பாடல்
(திபா 18)

1ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:

2“ஆண்டவர் என் காற்பாறை;

என் கோட்டை; என் மீட்பர்;

3என் கடவுள்; நான் புகலிடம்

தேடும் மலை அவரே; என் கேடயம்;

எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;

என் அரண்; என் தஞ்சம்;

என் மீட்பர். கொடுமையினின்று

என்னை விடுவிப்பவரும் அவரே.

4போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி

நான் மன்றாடினேன்.

என் எதிரிகளிடமிருந்து நான்

மீட்கப்பட்டேன்.

5ஏனெனில், சாவின் அலைகள்

என்னைச் சூழ்ந்து கொண்டன;

அழிவின் சுழல்கள் என்னை

மூழ்கடித்தன.

6பாதாளக் கயிறுகள் எனனைச்

சுற்றி இறுக்கின;

சாவின் கண்ணிகள் என்னைச்

சிக்க வைத்தன.

7என் நெருக்கடி வேளையில் நான்

ஆண்டவரிடம் மன்றாடினேன்;

என் கடவுளை நோக்கிக் கதறினேன்;

தமது கோவிலினின்று அவர்

என்குரலைக் கேட்டார்; என் கதறல்

அவர் செவிகளுக்கு எட்டியது.

8அப்பொழுது, மண்ணுலகம்

அசைந்து அதிர்ந்தது;

வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்

கிடுகிடுத்தன;

அவர்தம் கடுஞ்சினத்தால்

அவை நடுநடுங்கின.

9அவரது நாசியினின்று புகை

கிளம்பிற்று;

அவரது வாயினின்று எரித்தழிக்கும்

தீ மூண்டது;

அவரிடமிருந்து நெருப்புக் கனல்

வெளிப்பட்டது.

10வானைத் தாழ்த்தி அவர்

கீழிறங்கினார்;

கார் முகில் அவரது காலடியில்

இருந்தது.

11கெருபுமீது அவர் ஏறிப்

பறந்து வந்தார்;

காற்றை இறக்கைகளாகக்

கொண்டு விரைந்து வந்தார்.

12காரிருளை அவர் மூடுதிரை

ஆக்கிக் கொண்டார்;

நீர் கொண்ட முகிலைக்

கூடாரமாக்கிக் கொண்டார்.

13அவர் தம் திருமுன்னின் பேரொளியி

னின்று நெருப்புக் கனல் தெறித்தது.

14ஆண்டவர் வானங்களில் இடியென

முழங்கினார்; உன்னதர் தம் குரலை

அதிரச் செய்தார்.

15தம் அம்புகளை எய்து அவர்

அவர்களைச் சிதறடித்தார்;

மின்னல்களால் அவர்களைக்

கலங்கடித்தார்.

16ஆண்டவரின் கடிந்துரையாலும்

அவரது மூச்சுக் காற்றின்

வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு

தென்பட்டது; நிலவுலகின்

அடித்தளம் காணப்பட்டது.

17உயரத்தினின்று அவர் என்னை

எட்டிப் பிடித்துக் கொண்டார்;

வெள்ளப் பெருக்கினின்று

என்னைக் காப்பாற்றினார்.

18என் வலிமைமிகு எதிரியிடமிருந்து

அவர் என்னை விடுவித்தார்.

என்னைவிட வலிமைமிகு

பகைவரிடமிருந்து என்னைப்

பாதுகாத்தார்.

19எனக்கு இடுக்கண் வந்த நாளில்

அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;

ஆண்டவரோ எனக்கு ஊன்று

கோலாய் இருந்தார்.

20நெருக்கடியற்ற இடத்திற்கு அவர்

என்னைக் கொணர்ந்தார்;

நான் அவர் மனத்திற்கு

உகந்தவனாய் இருந்ததால்

அவர் என்னை விடுவித்தார்.

21ஆண்டவர் எனது நேர்மைக்கு

உரிய பயனை எனக்களித்தார்;

என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்

கைம்மாறு செய்தார்.

22ஏனெனில், நான் ஆண்டவர்

காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;

பொல்லாங்குசெய்து என் கடவுளை

விட்டு அகலவில்லை.

23அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்

என் கண்முன் வைத்திருந்தேன்;

அவர்தம் விதிமுறைகளை

நான் ஒதுக்கித் தள்ளவில்லை.

24அவர் முன்னிலையில் நான்

மாசற்றவனாய் இருந்தேன்;

தீங்கு செய்யா வண்ணம் என்னைக்

காத்துக் கொண்டேன்.

25ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய

பயனை அளித்தார்;

அவர்தம் பார்வையில் நான்

குற்றமற்றவனாய் இருந்தேன்.

26மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்

மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்

நீர் விளங்குகின்றீர்!

27தூயோர்க்குத் தூயவராகவும்

வஞ்சகர்க்கு விவேகியாகவும்

உம்மை நீர் காட்டுகின்றீர்.

28எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்;

செருக்குற்றோரை ஏளனத்துடன்

நீர் பார்க்கின்றீர்.

29ஆண்டவரே! நீரே என்

ஒளி விளக்கு!

ஆண்டவர் என் இருளை

ஒளிமயமாக்குகின்றார்.

30உம் துணையுடன் நான்

எப்படையையும் நசுக்குவேன்;

என் கடவுளின் துணையால்

எம்மதிலையும் தாண்டுவேன்.

31இந்த இறைவனின் வழி

நிறைவானது; ஆண்டவரின் வாக்கு

நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்

புகும் அனைவர்க்கும் அவரே

கேடயமாய் இருக்கின்றார்.

32ஏனெனில், ஆண்டவரைத் தவிர

வேறு இறைவன் யார்?

நம் கடவுளைத் தவிர நமக்கு

வேறு கற்பாறை ஏது?

33இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு

கோட்டையாய் உள்ளார்;

என் வழியை பாதுகாப்பானதாய்ச்

செய்தவரும் அவரே.

34அவர் என் கால்களை மான்களின்

கால்களைப்போல் ஆக்குகின்றார்;

உயர்ந்த இடத்தில் என்னை

நிலை நிறுத்துகின்றார்.

35போருக்கு என்னை அவர்

பழக்குகின்றார்; எனவே, வெண்கல

வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!

36பாதுகாக்கும் உம் கேடயத்தை

நீர் எனக்கு வழங்கினீர்;

உமது துணையால் என்னைப்

பெருமைப்படுத்தினீர்.

37நான் நடக்கும் வழியை

அகலமாக்கினீர்;

என் கால்கள் தடுமாறவில்லை.

38என் எதிரிகளைத் துரத்திச் சென்று

அழித்தேன்; அவர்களை

அழித்தொழிக்கும் வரை

நான் திரும்பவில்லை.

39நான் அவர்களைக் கொன்று

அழித்தேன்; அவர்கள்

எழுந்திருக்கவில்லை; அவர்கள் என்

காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.

40போரிடும் ஆற்றலை எனக்கு

அரைக் கச்சையாக அளித்தீர்;

என்னை எதிர்த்தவர்களை எனக்கு

அடிப்பணியச் செய்தீர்.

41என் எதிரிகளைப் புறமுதுகிடச்

செய்தீர்: என்னை வெறுத்தோரை

நான் அழித்துவிட்டேன்.

42உதவி வேண்டி அவர்கள்

கதறினார்கள்;

ஆனால், அவர்களுக்கு உதவுவார்

யாருமில்லை;

அவர்கள் ஆண்டவரை நோக்கி

மன்றாடினார்கள்;

ஆனால், அவர்களுக்கு அவர்

பதிலளிக்கவில்லை.

43எனவே, நான் அவர்களை மண்ணின்

புழுதியென நசுக்கினேன்;

அவர்களைத் தெருச் சேறென

மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.

44என் மக்களின் கலகத்தினின்று

என்னை விடுவித்தீர்;

பிற இனங்களுக்கு என்னைத்

தலைவனாக்கினீர்;

முன்பின் அறியாத மக்களும் எனக்குப்

பணிவிடை செய்தனர்.

45வேற்று நாட்டவர் என்னிடம்

கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்

என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்

எனக்குக் கீழ்ப்படிந்தனர்.

46வேற்று நாட்டவர் உள்ளம்

தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து

நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர்.

47ஆண்டவர் உண்மையாகவே

வாழ்கின்றார்; என் கற்பாறையாம்

அவர் போற்றப் பெறுவாராக!

என் மீட்பின் கற்பாறையாம்

கடவுள் மாட்சியுறுவாராக!

48எனக்காகப் பழிவாங்கும் இறைவன்

அவர்; மக்களினங்களை எனக்குக்

கீழ்ப்படுத்தியவரும் அவரே!

49என் பகைவரிடமிருந்து என்னை

அழைத்துவந்தவர் அவரே!

என் எதிரிகளுக்கு மேலாக என்னை

உயர்த்தினீர்! என்னைக்

கொடுமைப்படுத்தியவரிடமிருந்து

நீர் என்னைக் காத்தீர்!

50ஆகவே, ஆண்டவரே!

பிற இனத்தாரிடையே உம்மைப்

போற்றுவேன்; உம் பெயருக்குப்

புகழ் மாலை சாற்றுவேன்.

51தாம் ஏற்படுத்திய அரசருக்கு

மாபெரும் வெற்றியை அவளிப்பவர்

அவர்! தாம் திருப்பொழிவுசெய்த

தாவீதுக்கும் அவர்தம்

மரபினருக்கும் என்றென்றும்

பேரன்பு காட்டுபவரும் அவரே!”


22:34 அப 3:19.
22:50 உரோ 15:9.


22:46 ‘போர்க்கோலம் பூண்டு’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks