2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
தாவீதின் வெற்றிப் பாடல்
(திபா 18)
1ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:
2“ஆண்டவர் என் காற்பாறை;
என் கோட்டை; என் மீட்பர்;
3என் கடவுள்; நான் புகலிடம்
தேடும் மலை அவரே; என் கேடயம்;
எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;
என் அரண்; என் தஞ்சம்;
என் மீட்பர். கொடுமையினின்று
என்னை விடுவிப்பவரும் அவரே.
4போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி
நான் மன்றாடினேன்.
என் எதிரிகளிடமிருந்து நான்
மீட்கப்பட்டேன்.
5ஏனெனில், சாவின் அலைகள்
என்னைச் சூழ்ந்து கொண்டன;
அழிவின் சுழல்கள் என்னை
மூழ்கடித்தன.
6பாதாளக் கயிறுகள் எனனைச்
சுற்றி இறுக்கின;
சாவின் கண்ணிகள் என்னைச்
சிக்க வைத்தன.
7என் நெருக்கடி வேளையில் நான்
ஆண்டவரிடம் மன்றாடினேன்;
என் கடவுளை நோக்கிக் கதறினேன்;
தமது கோவிலினின்று அவர்
என்குரலைக் கேட்டார்; என் கதறல்
அவர் செவிகளுக்கு எட்டியது.
8அப்பொழுது, மண்ணுலகம்
அசைந்து அதிர்ந்தது;
வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்
கிடுகிடுத்தன;
அவர்தம் கடுஞ்சினத்தால்
அவை நடுநடுங்கின.
9அவரது நாசியினின்று புகை
கிளம்பிற்று;
அவரது வாயினின்று எரித்தழிக்கும்
தீ மூண்டது;
அவரிடமிருந்து நெருப்புக் கனல்
வெளிப்பட்டது.
10வானைத் தாழ்த்தி அவர்
கீழிறங்கினார்;
கார் முகில் அவரது காலடியில்
இருந்தது.
11கெருபுமீது அவர் ஏறிப்
பறந்து வந்தார்;
காற்றை இறக்கைகளாகக்
கொண்டு விரைந்து வந்தார்.
12காரிருளை அவர் மூடுதிரை
ஆக்கிக் கொண்டார்;
நீர் கொண்ட முகிலைக்
கூடாரமாக்கிக் கொண்டார்.
13அவர் தம் திருமுன்னின் பேரொளியி
னின்று நெருப்புக் கனல் தெறித்தது.
14ஆண்டவர் வானங்களில் இடியென
முழங்கினார்; உன்னதர் தம் குரலை
அதிரச் செய்தார்.
15தம் அம்புகளை எய்து அவர்
அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களால் அவர்களைக்
கலங்கடித்தார்.
16ஆண்டவரின் கடிந்துரையாலும்
அவரது மூச்சுக் காற்றின்
வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு
தென்பட்டது; நிலவுலகின்
அடித்தளம் காணப்பட்டது.
17உயரத்தினின்று அவர் என்னை
எட்டிப் பிடித்துக் கொண்டார்;
வெள்ளப் பெருக்கினின்று
என்னைக் காப்பாற்றினார்.
18என் வலிமைமிகு எதிரியிடமிருந்து
அவர் என்னை விடுவித்தார்.
என்னைவிட வலிமைமிகு
பகைவரிடமிருந்து என்னைப்
பாதுகாத்தார்.
19எனக்கு இடுக்கண் வந்த நாளில்
அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;
ஆண்டவரோ எனக்கு ஊன்று
கோலாய் இருந்தார்.
20நெருக்கடியற்ற இடத்திற்கு அவர்
என்னைக் கொணர்ந்தார்;
நான் அவர் மனத்திற்கு
உகந்தவனாய் இருந்ததால்
அவர் என்னை விடுவித்தார்.
21ஆண்டவர் எனது நேர்மைக்கு
உரிய பயனை எனக்களித்தார்;
என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்
கைம்மாறு செய்தார்.
22ஏனெனில், நான் ஆண்டவர்
காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;
பொல்லாங்குசெய்து என் கடவுளை
விட்டு அகலவில்லை.
23அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்
என் கண்முன் வைத்திருந்தேன்;
அவர்தம் விதிமுறைகளை
நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
24அவர் முன்னிலையில் நான்
மாசற்றவனாய் இருந்தேன்;
தீங்கு செய்யா வண்ணம் என்னைக்
காத்துக் கொண்டேன்.
25ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய
பயனை அளித்தார்;
அவர்தம் பார்வையில் நான்
குற்றமற்றவனாய் இருந்தேன்.
26மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்
மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்
நீர் விளங்குகின்றீர்!
27தூயோர்க்குத் தூயவராகவும்
வஞ்சகர்க்கு விவேகியாகவும்
உம்மை நீர் காட்டுகின்றீர்.
28எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்;
செருக்குற்றோரை ஏளனத்துடன்
நீர் பார்க்கின்றீர்.
29ஆண்டவரே! நீரே என்
ஒளி விளக்கு!
ஆண்டவர் என் இருளை
ஒளிமயமாக்குகின்றார்.
30உம் துணையுடன் நான்
எப்படையையும் நசுக்குவேன்;
என் கடவுளின் துணையால்
எம்மதிலையும் தாண்டுவேன்.
31இந்த இறைவனின் வழி
நிறைவானது; ஆண்டவரின் வாக்கு
நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்
புகும் அனைவர்க்கும் அவரே
கேடயமாய் இருக்கின்றார்.
32ஏனெனில், ஆண்டவரைத் தவிர
வேறு இறைவன் யார்?
நம் கடவுளைத் தவிர நமக்கு
வேறு கற்பாறை ஏது?
33இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு
கோட்டையாய் உள்ளார்;
என் வழியை பாதுகாப்பானதாய்ச்
செய்தவரும் அவரே.
34அவர் என் கால்களை மான்களின்
கால்களைப்போல் ஆக்குகின்றார்;
உயர்ந்த இடத்தில் என்னை
நிலை நிறுத்துகின்றார்.
35போருக்கு என்னை அவர்
பழக்குகின்றார்; எனவே, வெண்கல
வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!
36பாதுகாக்கும் உம் கேடயத்தை
நீர் எனக்கு வழங்கினீர்;
உமது துணையால் என்னைப்
பெருமைப்படுத்தினீர்.
37நான் நடக்கும் வழியை
அகலமாக்கினீர்;
என் கால்கள் தடுமாறவில்லை.
38என் எதிரிகளைத் துரத்திச் சென்று
அழித்தேன்; அவர்களை
அழித்தொழிக்கும் வரை
நான் திரும்பவில்லை.
39நான் அவர்களைக் கொன்று
அழித்தேன்; அவர்கள்
எழுந்திருக்கவில்லை; அவர்கள் என்
காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.
40போரிடும் ஆற்றலை எனக்கு
அரைக் கச்சையாக அளித்தீர்;
என்னை எதிர்த்தவர்களை எனக்கு
அடிப்பணியச் செய்தீர்.
41என் எதிரிகளைப் புறமுதுகிடச்
செய்தீர்: என்னை வெறுத்தோரை
நான் அழித்துவிட்டேன்.
42உதவி வேண்டி அவர்கள்
கதறினார்கள்;
ஆனால், அவர்களுக்கு உதவுவார்
யாருமில்லை;
அவர்கள் ஆண்டவரை நோக்கி
மன்றாடினார்கள்;
ஆனால், அவர்களுக்கு அவர்
பதிலளிக்கவில்லை.
43எனவே, நான் அவர்களை மண்ணின்
புழுதியென நசுக்கினேன்;
அவர்களைத் தெருச் சேறென
மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.
44என் மக்களின் கலகத்தினின்று
என்னை விடுவித்தீர்;
பிற இனங்களுக்கு என்னைத்
தலைவனாக்கினீர்;
முன்பின் அறியாத மக்களும் எனக்குப்
பணிவிடை செய்தனர்.
45வேற்று நாட்டவர் என்னிடம்
கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்
என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்
எனக்குக் கீழ்ப்படிந்தனர்.
46வேற்று நாட்டவர் உள்ளம்
தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து
நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர்.
47ஆண்டவர் உண்மையாகவே
வாழ்கின்றார்; என் கற்பாறையாம்
அவர் போற்றப் பெறுவாராக!
என் மீட்பின் கற்பாறையாம்
கடவுள் மாட்சியுறுவாராக!
48எனக்காகப் பழிவாங்கும் இறைவன்
அவர்; மக்களினங்களை எனக்குக்
கீழ்ப்படுத்தியவரும் அவரே!
49என் பகைவரிடமிருந்து என்னை
அழைத்துவந்தவர் அவரே!
என் எதிரிகளுக்கு மேலாக என்னை
உயர்த்தினீர்! என்னைக்
கொடுமைப்படுத்தியவரிடமிருந்து
நீர் என்னைக் காத்தீர்!
50ஆகவே, ஆண்டவரே!
பிற இனத்தாரிடையே உம்மைப்
போற்றுவேன்; உம் பெயருக்குப்
புகழ் மாலை சாற்றுவேன்.
51தாம் ஏற்படுத்திய அரசருக்கு
மாபெரும் வெற்றியை அவளிப்பவர்
அவர்! தாம் திருப்பொழிவுசெய்த
தாவீதுக்கும் அவர்தம்
மரபினருக்கும் என்றென்றும்
பேரன்பு காட்டுபவரும் அவரே!”