back to top
HomeTamil1 அரசர்கள் அதிகாரம் - 20 - திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரம் – 20 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

சிரியாவுடன் போர்

1சிரியாவின் மன்னன் பெனதாது தன் படை முழுவதையும் திரட்டிக்கொண்டு, முப்பத்திரண்டு மன்னர்களோடு சேர்ந்து, குதிரைகளோடும் தேர்களோடும் சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான்.

2அப்போது நகருக்குள் இருந்த இஸ்ரயேலின் அரசனான ஆகாபிடம் தூதனுப்பி, பெனதாது கூறுவது இதுவே;

3“உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவை. உன் மனைவியரிலும் புதல்வியரிலும் சிறந்தவர் என் உடைமை ஆவர்” என்று சொல்லச் சொன்னான்.

4இஸ்ரயேலின் அரசன், “மன்னரே! என் தலைவரே! உமது வார்த்தையின்படி அடியேனும் என் உடைமைகள் யாவும் உம்முடையவையே” என்று பதிலளித்தான்.

5அத்தூதர்கள் மீண்டும் வந்து, “பெனதாது கூறுவது இதுவே: ‘உன் வெள்ளியையும் பொன்னையும் உன் மனைவியரையும் புதல்வியரையும் என்னிடம் அளித்துவிடு’ என்று நான் முன்பே உனக்குச் சொல்லி அனுப்பினேன்.

6அவ்வாறே, நாளை இந்நேரம் என் அலுவலரை உன்னிடம் அனுப்புவேன். அவர்கள் உன் அரண்மனையையும் உன் அதிகாரிகளின் மாளிகைகளையும் சோதித்து உன் பார்வையில் விலைமதிப்புள்ள அனைத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்வார்கள்” என்று சொன்னார்கள்.

7அப்போது இஸ்ரயேலின் அரசன் நாட்டின் பெரியோர்களை எல்லாம் அழைத்து, “இவன் நமக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்! இவன் என் மனைவியரையும் மைந்தரையும் என் வெள்ளியையும் பொன்னையும் கேட்டான். அவற்றைக் கொடுக்க நான் மறுக்கவில்லையே!” என்று கூறினான்.

8அப்போது பெரியோர் அனைவருமே அவனை நோக்கி, “நீர் அவனுக்குச் செவி கொடுக்கவோ இணங்கவோ வேண்டாம்” என்றனர்.

9அவன் பெனதாதின் தூதரை நோக்கி, “நீங்கள் அரசராகிய என் தலைவரிடம் சென்று, ‘நீர் உம் அடியவனாகிய என்னிடம் முதல் முறை சொல்லியனுப்பியவாறு நான் யாவற்றையும் செய்து தருவேன். ஆனால், இம்முறை நீர் கேட்பவற்றை என்னால் தர முடியாது’ என்று தெரிவியுங்கள்” என்றான். அத்தூதரும் திரும்பிச் சென்று இப்பதிலை அவனுக்குத் தெரிவித்தனர்.

10பெனதாது மீண்டும், “எனக்கடியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் கைக்கு ஒரு பிடி சமாரியாவின் புழுதியை அள்ளாமல் போனால், என் தெய்வங்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொல்லி அனுப்பினான்.

11அதற்கு இஸ்ரயேலின் அரசன் மறுமொழியாக, “போர்க் கவசம் அணிந்தவுடன் போரில் வென்றவன் போல் பிதற்றக்கூடாது என்று அவனிடம் சொல்” என்று பதிலளித்தான்.

12மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனதாது மற்ற மன்னர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவன் தம் அலுவலரை நோக்கி, “போரிடத் தயாராகுங்கள்” என்றான். அவர்களும் நகருக்கு எதிராகப் போரிடத் தயாராயினர்.

13அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசன் ஆகாபை அணுகி, “ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இந்தப் பெரும் படை முழுவதையும் பார்த்தாயா? நானே உன் ஆண்டவர் என்று நீ உணரும்படி, இதோ இன்று அதை உன் கையில் ஒப்புவிக்கிறேன்” என்றார்.

14ஆகாபு அவரைப் பார்த்து, “யார் மூலம் இது நடைபெறும்?” என்று வினவ அவர் “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் மூலம்” என்றார். மறுபடியும் அவன் “போரை யார் தொடங்க வேண்டும்?” என்று கேட்க, அவர் “நீ தான்?” என்றார்.

15மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களைக் கூட்டிச் சேர்க்க, அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர் இருந்தனர். பின்பு, இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்க்க அவர்கள் ஏழாயிரம் பேர் இருந்தனர்.

16இவர்கள் நண்பகல் வேளையில் வெளியே புறப்பட்டனர். பெனதாதும் அவனுக்குத் துணையாக வந்த ஏனைய முப்பத்திரண்டு மன்னர்களும் பாசறையில் குடிவெறியில் இருந்தனர்.

17மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் முதலில் வெளியே வந்தனர். பெனதாது அவர்கள் யாரென்று பார்த்து வர ஆள்களை அனுப்ப, “அவர்கள் சமாரியாவிலிருந்து வந்தவர்கள்” என்று அவனுக்கு அவர்கள் அறிவித்தனர்.

18அப்போது மன்னன், “அவர்கள் சமாதான நோக்கில் வந்திருந்தாலும், போரிடும் நோக்கில் வந்திருந்தாலும், அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.

19மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களும் அவர்கள் பின்வந்த படையினரும் நகரை விட்டு வெளியே வந்ததும்,

20ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சிரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ரயேலர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சிரியாவின் மன்னன் பெனதாது குதிரைமீது ஏறிக் குதிரை வீரரோடு தப்பியோடினான்.

21இஸ்ரயேலரின் அரசன் துரத்திச் சென்று குதிரைகளையும் தேர்களையும் கைப்பற்றி, பலரைக் கொன்று குவித்தான்.

22பின்பு, இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “நீ போய் உன் படைவலிமையை மிகுதியாக்கிக் கொள். அடுத்த இளவேனிற் காலத்தில் சிரியாவின் மன்னன் மீண்டும் உன்னோடு போரிட வருவான். அதற்குள் நீ செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப்பார்!” என்றார்.

சிரியாவின் இரண்டாம் படையெடுப்பு

23மேலும், சிரியாவின் மன்னனுடைய அலுவலர் அவனிடம் கூறியது: “இஸ்ரயேலரின் கடவுள் மலைகளின் கடவுள். எனவே, அவர்கள் நம்மை விட வலிமை மிகுந்தவராயிருந்தனர். ஒருவேளை நாம் அவர்களோடு சமவெளியில் போரிட்டோமானால், அவர்களை விட நாமே வலிமை மிகுந்தவராயிருப்போம்.

24இதற்கு ஏற்ற வழியாதெனில் மன்னர்களைப் படைத் தலைமையினின்று நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நீர் நியமிக்க வேண்டும்.

25நீர் இழந்து விட்ட படைக்குச் சமமான படையை மறுபடியும் திரட்டிக் கொள்ளும். குதிரைக்கு குதிரை, தேருக்குத் தேர், அதே அளவில் திரட்டிக் கொள்ளும். சமவெளியில் அவர்களோடு போரிட்டால், நாமே அவர்களை விட வலிமை மிக்கவராயிருப்போம் என்பது உறுதி” என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.

26இளவேனிற் காலம் வந்ததும் பெனதாது சிரியரைத் திரட்டிக் கொண்டு இஸ்ரயேலரோடு போரிட அபேக்குக்கு வந்தான்.

27இஸ்ரயேல் மக்கள் ஒன்றுதிரண்டு, வேண்டிய உணவோடு அவர்களுக்கு எதிராய்ப் புறப்பட்டுச் சென்று பளையம் இறங்கினர். அவர்களுக்குமுன் இவர்கள் இரு சிறிய ஆட்டு மந்தைகளைப் போல் காணப்பட்டனர். சிரியரோ அங்குள்ள பகுதியையே நிரப்பி விட்.டனர்.

28அப்போது கடவுளின் அடியார் ஒருவர் இஸ்ரயேலின் அரசனை அணுகி, அவனிடம், “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சிரியர், ‘ஆண்டவர் மலைகளின் கடவுள்தான்; பள்ளத்தாக்குகளின் கடவுள் அல்லர்’. என்று நினைக்கின்றனர். எனவே, இந்தப் பெரும் படை முழுவதையும் உன் கையில் ஒப்புவிப்பேன். நானே ஆண்டவர் என்று நீ அறிந்துகொள்வாய்” என்று கூறினார்.

29ஏழு நாள்களாகப் படைகள் நேருக்கு நேர் பாளையம் இறங்கி இருந்தன. ஏழாம் நாளன்று போர் தொடங்கியது. இஸ்ரயேல் மக்கள் ஒரே நாளில் சிரியரது காலாள் படையில் இலட்சம் பேரை வெட்டி வீழ்த்தினர்.

30எஞ்சியவர் அபேக்குக்குள் தப்பி ஓடினர். அங்கே மீதியிருந்த இருபத்தேழாயிரம் பேர் மீது மதில் இடிந்து விழுந்தது. பெனதாது தப்பி ஓடி நகருக்குள் ஓர் உள்ளறையில் ஒளிந்து கொண்டான்.

31அப்போது அவன் பணியாளர் வந்து அவனை நோக்கி, “இஸ்ரயேல் குல அரசர்கள் இரக்கத்தின் மன்னர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் சாக்குத் துணியை இடுப்பிலும், கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேலின் அரசனிடம் போவோம். ஒருவேளை அவர் உமக்காகிலும் உயிர்ப் பிச்சை அளிக்கலாம்” என்று சொன்னார்கள்.

32அவ்விதமே அவர்கள் சாக்குத் துணியை இடுப்பிலும் கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனிடம், “உம் பணியாளர் பெனதாது, ‘எனக்கு உயிர்ப்பிச்சை தாரும்’ என்று உம்மிடம் மன்றாடுகிறார்” என்று கூறினர். அதற்கு அரசன், “அவர் என் சகோதரர்; அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?” என்றார்.

33அந்த ஆள்கள் இச்சொற்களை நல்லதோர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்களிலேயே உடனடியாக “ஆம், உம் சகோதரர் பெனதாது உயிரோடிருக்கின்றார்” என்று பதிலளித்தனர். அப்போது அவன், “நீங்கள் போய் அவரை அழைத்து வாருங்கள்” என்றான். பெனதாது அவனிடம் வந்ததும் ஆகாபு அவனைத் தேரில் ஏற்றிக்கொண்டான்.

34அப்போது பெனதாது அவனைப் பார்த்து, “என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன்” என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.

ஆகாபு கண்டிக்கப்படுதல்

35இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க தம் தோழன் ஒருவனை நோக்கி, “என்னை அடி” என்றார்.

36அவனோ அவரை அடிக்க மறுத்துவிட்டான். அவர் அவனைப் பார்த்து, “நீ ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், நீ என்னைவிட்டு அகன்றவுடன் ஒரு சிங்கம் உன்னை அடித்துக் கொல்லும்” என்றார். அவ்வாறே அவன் அவரை விட்டுச் செல்கையில் ஒரு சிங்கம் அவனைக் கண்டு அடித்துக் கொன்றது.

37அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, “என்னை அடி” என்றார். அம்மனிதனோ அவரைக் காயமுற அடித்தான்.

38அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று தம் கண்ணைக் கட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அரசனுக்காக வழியில் காத்திருந்தார்.

39அவ்வழியே அரசன் வந்தபோது அவர் அரசனை அழைத்து, “உம் அடியான் போர்க்களத்தினுள் நுழைந்தபோது ஒருவன் திரும்பி என்னிடம் ஓர் ஆளைக் கொண்டு வந்து, ‘இம்மனிதனைக் காவல் செய். அவன் தப்பி ஓடினால், அவன் உயிருக்கு ஈடாக உன் உயிரையோ நாற்பது கிலோ நிறையுள்ள வெள்ளியையோ கொடுக்க வேண்டும்” என்றார்.

40உம் அடியான் இங்குமங்கும் வேலையாய் இருந்தபோது, அவனைக் காணவில்லை” என்றார். இஸ்ரயேலின் அரசன் அவரைப் பார்த்து “உன் தீர்ப்பை நீயே உனக்கு அளித்துவிட்டாய்” என்றான்.

41உடனே அவர் தமது கண்கட்டை அவிழ்த்துக் கொள்ளவே, இஸ்ரயேலின் அரசன் அவர் இறைவாக்கினருள் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.

42அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சாவுக்குக் குறிக்கப்பட்டவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும்படி செய்ததால், அவன் உயிருக்குப் பதிலாக உன் உயிரையும் அவன் மக்களுக்கு ஈடாக உன் மக்களையும் எடுத்துக் கொள்வேன்” என்றார்.

43இஸ்ரயேலின் அரசனோ ஆத்திரமும் கோபமும் கொண்டவனாய் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான்.


20:36 1 அர 13:24.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks