back to top
HomeTamilசாலமோனின் ஞானம் அதிகாரம் - 4 - திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரம் – 4 – திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும்,

நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது;

நற்பண்பின் நினைவு

என்றும் அழியாதது;

அது கடவுளாலும் மனிதராலும்

கண்டுணரப்படும்.

2அந்நினைவு

பசுமையாய் இருக்கும்பொழுது

மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்;

அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர்.

மாசற்ற பரிசுகளுக்காக

நற்பண்பு போராடி,

வெற்றி வாகை சூடி,

காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.

3இறைப்பற்றில்லாதவர்கள்

எண்ணற்ற பிள்ளைகளை

ஈன்றபோதிலும்

அவர்கள் தளிர்ப்பதில்லை;

மணவாழ்க்கைக்குப்

புறம்பே பிறந்த வழிமரபு

ஆழமாய் வேரூன்றுவதில்லை;

உறுதியாய் நிற்பதுமில்லை.

4சிறிது காலம் அவர்கள்

கிளைவிட்டுச் செழித்தாலும்,

உறுதியற்றவர்களாய்க்

காற்றினால்

அலைக்கழிக்கப்படுவார்கள்;

காற்றின் சீற்றத்தால்

வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.

5அவர்களுடைய கிளைகள்

வளர்ச்சி அடையுமுன்பே

முறிக்கப்படும்.

அவர்களுடைய கனிகள் பயனற்றவை;

உண்பதற்கு ஏற்ற அளவு

பழுக்காமையால்

அவை பாழாய்ப் போகும்.

6முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே

தீர்ப்பு நாளில்

தங்கள் பெற்றோரின்

கூடா ஒழுக்கத்திற்குச்

சாட்சிகளாய் இருப்பார்கள்.

நீதிமான்களின் எதிர்பாராத முடிவு

7நீதிமான்கள்

உரிய காலத்துக்கு முன் இறந்தாலும்,

இளைப்பாற்றி அடைவார்கள்.

8முதுமையின் மதிப்பு

நீடிய வாழ்வினால் வருவதன்று;

ஆண்டுகளின் எண்ணிக்கை

அதற்கு அளவுகோலன்று.

9ஞானமே மனிதர்க்கு

உண்மையான நரைதிரை;

குற்றமற்ற வாழ்க்கையே

உண்மையான பழுத்த முதுமை.

10நீதிமான் ஒருவர்

இறைவனுக்கு ஏற்புடையவராகி,

அவருடைய அன்பைப் பெற்றார்;

பாவிகள் நடுவில்

வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே

அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார்.

11தீமை அவரது அறிவுக்கூர்மையைத்

திசைதிருப்பாமல் இருக்கவும்,

வஞ்சகம் அவரது உள்ளத்தை

மாசுபடுத்தாமல் இருக்கவுமே

அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

12தீமையின் கவர்ச்சி

நன்மையானவற்றை

மறைத்துவிடுகிறது;

அலைக்கழிக்கும் இச்சை

மாசற்ற மனத்தைக்

கெடுத்துவிடுகிறது.

13அந்த நீதிமான் குறுகிய காலத்தில்

நிறைவு எய்தினார்;

நீண்டவாழ்வின் பயனை அடைந்தார்.

14அவரது ஆன்மா ஆண்டவருக்கு

ஏற்புடையதாய் இருந்தது.

தீமை நடுவினின் று

ஆண்டவர் அவரை

விரைவில் எடுத்துக்கொண்டார்.

15மக்கள் இதைப் பார்த்தார்கள்;

ஆனால் புரிந்துகொள்ளவில்லை.

ஆண்டவர்

தாம் தேர்ந்துகொண்டோர்மீது

அருளும் இரக்கமும் காட்டுகின்றார்;

தம் தூயவர்களைச் சந்தித்து

மீட்கிறார் என்பதை

அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.

16இறந்துபோன நீதிமான்கள்

உயிர் வாழ்கின்ற

இறைப்பற்றில்லாதவர்களைக்

கண்டனம் செய்வார்கள்;

விரைவில் பக்குவம் அடைந்த

இளைஞர்கள்

நீண்ட நாள் வாழும்

தீய முதியவர்களைக்

கண்டனம் செய்வார்கள்.

17இறைப்பற்றில்லாதவர்கள்

ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்;

ஆனால், ஆண்டவர் அவர்களுக்காக

எத்தகைய திட்டம்

வகுத்துள்ளார் என்றும்

எந்த நோக்கத்திற்காக

அவர்களுக்குப் பாதுகாப்பு

அளித்துள்ளார் என்றும்

அறிந்துகொள்ளமாட்டார்கள்.

18அவர்கள் ஞானிகளை கண்டு

ஏளனம் செய்வார்கள்.

ஆண்டவரோ அவர்களைப் பார்த்து

எள்ளி நகையாடுவார்.

19ஏனெனில் இனி அவர்கள்

இழிந்த பிணம் ஆவார்கள்;

இறந்தோர் நடுவில் என்றென்றும்

அருவருப்புக்குரியோர் ஆவார்கள்.

ஆண்டவர் அவர்களைப்

பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்;

அடியோடு கலங்கவைப்பார்.

அவர்கள் முழுவதும்

அழித்தொழிக்கப்படுவார்கள்;

ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள்.

அவர்களின் நினைவுகூட

மறைந்துவிடும்.

தீர்ப்புநாளில் நல்லாரும் பொல்லாரும்

20இறைப்பற்றில்லாதவர்களின்

பாவங்களைக் கணக்கிடும்போது,

அவர்கள் நடுங்கிக்கொண்டு

வருவார்கள்;

அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்

அவர்களுக்கு எதிராக நின்று

குற்றம்சாட்டும்.


4:3 சீஞா 23:25.
4:10 தொநூ 5:21-24; சீஞா 44:16; 49:14; எபி 11:5.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks