back to top
HomeTamilசாலமோனின் ஞானம் அதிகாரம் - 16 - திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கொடிய விலங்குகளும் காடைகளும்

1எனவே அவர்கள் அவற்றைப்

போன்ற உயிரினங்களால்

தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்;

விலங்குக் கூட்டத்தால்

வதைக்கப்பட்டார்கள்.

2இத்தகைய தண்டனைக்கு மாறாக

நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்;

சுவை மிகுந்த அரிய உணவாகிய

காடைகளை அவர்களுக்கு

உண்ணக் கொடுத்தீர்;

இவ்வாறு,

அவர்களது ஆவலைத் தணித்தீர்.

3எகிப்தியர்கள் உணவு அருந்த

விரும்பியபோதிலும்,

அவர்கள்மீது ஏவப்பட்ட

அருவருக்கத்தக்க

விலங்குகளால் உணவின்மேல்

அவர்களுக்கு இருந்த நாட்டமே

அற்றுப் போயிற்று.

உம் மக்களோ சிறிது காலம்

வறுமையில் வாடியபின்

அருஞ்சுவை உணவை உண்டார்கள்.

4ஏனெனில் கொடுமை செய்தவர்கள்

கடுமையான பற்றாக்குறைக்கு

ஆளாகவேண்டியிருந்தது.

உம் மக்களுக்கோ அவர்களுடைய

பகைவர்கள் எவ்வாறு அல்லல்

படுகிறார்கள் என்று மட்டும்

காட்டவேண்டியிருந்தது.

வெட்டுக்கிளிகளும் வெண்கலப் பாம்புகளும்

5உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள்

கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது,

நெளிந்து வந்த

நச்சுப் பாம்புகளின் கடியால்

அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது,

உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.

6எச்சரிக்கப்பட வேண்டிச்

சிறிது காலம் அவர்கள்

துன்பத்திற்கு உள்ளானார்கள்.

உமது திருச்சட்டத்தின்

கட்டளையை நினைவூட்ட

மீட்பின் அடையாளம்

ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

7அப்போது

அதை நோக்கித் திரும்பியோர்

தாங்கள் பார்த்த பொருளால் அன்று,

அனைவருக்கும் மீட்பரான

உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.

8இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும்

விடுவிப்பவர் நீரே என்று

எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.

9ஏனெனில் அவர்கள்

வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும்

கடியுண்டு மாண்டார்கள்.

அவர்கள் உயிரைக் காப்பதற்கு

மருந்து எதுவும் காணப்படவில்லை.

அவர்கள் இத்தகையவற்றால்

தண்டிக்கப்படத் தக்கவர்கள்.

10ஆனால் நச்சுப் பாம்புகளின்

பற்களால்கூட உம் மக்களை

வீழ்த்த முடியவில்லை.

உமது இரக்கம் அவர்களுக்குத்

துணைநின்று நலம் அளித்தது.

11உம் சொற்களை

அவர்கள் நினைவுகூரும் பொருட்டு

அவர்கள் கடிபட்டார்கள்;

ஆனால் உடனே

நலம் அடைந்தார்கள்.

அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு

உள்ளாகி, உம் பரிவை

உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.

12பச்சிலையோ களிம்போ

அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை;

ஆனால், ஆண்டவரே,

உமது சொல்லே எல்லா மனிதர்க்கும்

நலம் அளிக்கிறது.

13வாழ்வின்மேலும் சாவின்மேலும்

உமக்கு அதிகாரம் உண்டு.

மனிதர்களைப் பாதாளத்தின்

வாயில்வரை கொண்டு செல்கிறீர்;

மீண்டும் அங்கிருந்து

கொண்டு வருகிறீர்.

14மனிதர் தம் தீய பண்பினால்

ஒருவரைக் கொன்று விடுகின்றனர்.

ஆனால் பிரிந்த உயிரை

அவர்களால்

திருப்பிக் கொணர முடியாது.

சிறைப்பட்ட ஆன்மாக்களை

அவர்களால் விடுவிக்கவும் முடியாது.

கல்மழையும் மன்னாவும்

15ஒருவரும் உமது கையினின்று

தப்பமுடியாது.

16உம்மை அறிய மறுத்துவிட்ட

இறைப்பற்றில்லாதவர்கள்

உமது கைவன்மையால்

வதைக்கப்பட்டார்கள்;

பேய் மழையாலும் கல் மழையாலும்

கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு,

தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.

17எல்லாவற்றையும்விட

நம்பமுடியாதது எது என்றால்,

அனைத்தையும் அவிக்கக்கூடிய

தண்ணீரில் அந்த நெருப்பு

இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு

எரிந்ததுதான்!

ஏனெனில் அனைத்துலகும்

நீதிமான்களுக்காகப் போராடுகிறது.

18கடவுளின் தண்டனைத் தீர்ப்பு

தங்களைப் பின்தொடர்கிறது என்பதை

இறைப்பற்றில்லாதவர்கள்

கண்டுணருமாறும்,

அவர்களுக்கு எதிராய்

அனுப்பப்பட்ட உயிரினங்கள்

எரிந்து விடாதவாறும்,

நெருப்பின் அனல் சில வேளைகளில்

மட்டுப்படுத்தப்பட்டது.

19மற்றும் சில வேளைகளில்

நீதியற்ற நாட்டின் விளைச்சலை

அழிக்கவே

தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு

முன்னைவிட மிகக் கடுமையாக

எரிந்தது.

20இவற்றுக்கு மாறாக

உம் மக்களை வானதூதரின்

உணவால் ஊட்டி வளர்த்தீர்;

எல்லா இனிமையும்

பல்சுவையும் கொண்ட உணவை,

அவர்களது உழைப்பு இல்லாமலே

படைக்கப்பட்ட உணவை

வானத்திலிருந்து

அவர்களுக்கு அளித்தீர்.

21நீர் அளித்த உணவூட்டம்

உம் பிள்ளைகள்பால்

நீர் கொண்டிருந்த

இனிய உறவைக் காட்டியது;

ஏனெனில் அந்த உணவு

உண்போரின் சுவையுணர்விற்கு

ஏற்றவாறு மாறி,

அவரவர் விரும்பிய சுவை தந்தது.

22கல்மழையில் கனன்றெரிந்து,

கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே

பகைவர்களுடைய விளைச்சலை

அழித்தது என்று

அவர்கள் அறிந்துகொள்ளுமாறு,

பனியும் பனிக்கட்டியும்

உருகிடாமல்

நெருப்பின் அனலைத் தாங்கின.

23ஆனால் அதே நெருப்பு,

நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி

தனது இயல்பான ஆற்றலை

மீண்டும் மறந்துவிட்டது.

24படைத்தவரான உமக்கு

ஊழியம் புரிகின்ற படைப்பு

நெறிகெட்டோரைத் தண்டிக்க

முனைந்து நிற்கிறது;

உம்மை நம்பினோரின்

நலனை முன்னிட்டு அது

பரிவோடு தணிந்து போகிறது.

25எனவே அந்நேரத்திலேயே

படைப்பு எல்லா வகையிலும்

தன்னை மாற்றியமைத்துக்

கொண்டது;

தேவைப்பட்டவர்களின்

விருப்பத்திற்கு ஏற்ப,

எல்லாரையும் பேணிக் காக்கும்

உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.

26ஆண்டவரே,

மனிதரைப் பேணிக்காப்பது

நிலத்தின் விளைச்சல் அல்ல,

மாறாக, உமது சொல்லே

உம்மை நம்பினோரைக்

காப்பாற்றுகிறது என

நீர் அன்புகூரும் உம் மக்கள்

இதனால் அறிந்து கொள்வார்கள்.

27நெருப்பினால் எரிபடாதது

காலைக் கதிரவனின்

ஒளிக் கீற்றாலேயே வெப்பம்

அடைந்து எளிதில் உருகிற்று.

28கதிரவன் எழுமுன்பே

மக்கள் எழுந்து

உமக்கு நன்றி கூறவும்

வைகறை வேளையில்

உம்மை நோக்கி மன்றாடவும்

வேண்டும் என்று

இதனால் உணர்த்தப்பட்டது.

29ஏனெனில்

நன்றி கொன்றோரின் நம்பிக்கை

குளிர்காலத்து உறைபனிபோல்

உருகிவிடும்;

பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.


16:1 1 விப 8:1-15:3.
16:2 விப 16:11-13; எண் 11:31-32.
16:5 விப 8:16-24; 10:1-20.
16:6-7 எண் 21:6-9; யோவா 3:14-15.
16:16 விப 9:22-26.
16:20 விப 16:13-36.
16:26 இச 8:3; மத் 4:4; லூக் 4:4.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks