back to top
HomeTamilசாலமோனின் ஞானம் அதிகாரம் - 18 - திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரம் – 18 – திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1உம் தூயவர்களுக்கோ

பேரொளி இருந்தது.

அவர்களுடைய குரலை

எதிரிகள் கேட்டார்கள்.

ஆனால் அவர்களின்

உருவங்களைக் காணவில்லை.

தங்களைப் போலத் துன்புறாததால்

தூயவர்களைப் பேறுபெற்றோர்

என்று கருதினார்கள்.

2அப்பொழுது உம் தூயவர்கள்

அவர்களுக்குத் தீமை எதுவும்

செய்யாததால், எகிப்தியர்கள்

நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்;

தங்களது பழைய பகைமைக்கு

மன்னிப்புக் கேட்டார்கள்.*

3இருளுக்கு மாறான

ஒளிப்பிழம்பாம் நெருப்புத் தூணை

உம் மக்களுக்குக் கொடுத்தீர்.

முன்பின் அறியாத பாதையில்

அது அவர்களுக்கு

வழி காட்டியாய் விளங்கியது;

மாட்சி பொருந்திய அப்பயணத்தில்

அது வெம்மை தணிந்த

கதிரவனாய் இருந்தது.

4திருச்சட்டத்தின் அழியாத ஒளியை

உலகிற்கு வழங்க வேண்டிய

உம் மக்களை எகிப்தியர்கள்

சிறைப்பிடித்தார்கள்.

இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே

இருளில் அடைக்கப்பட

வேண்டியது பொருத்தமே.

தலைப்பேறுகளின் இறப்பும் இஸ்ரயேலரின் மீட்பும்

5எகிப்தியர்கள் உம் தூயவர்களின்

குழந்தைகளைக் கொல்லத்

திட்டமிட்டிருந்தார்கள்.

அப்பொழுது ஒரு குழந்தை மட்டும்

சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது.

எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக

அவர்களின் பெருந்தொகையான

குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்;

அவர்கள் அனைவரையும்

பெரும் வெள்ளத்தில்

ஒருசேர மூழ்கடித்தீர்.

6தாங்கள் நம்பியிருந்த

வாக்குறுதிகளைத் தெளிவாக

அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி

அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு

முன்னறிவிக்கப்பட்டது.

7நீதிமான்களின் மீட்பையும்

அவர்களுடைய பகைவர்களின்

அழிவையும் உம் மக்கள்

எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

8எங்கள் பகைவர்களை

நீர் தண்டித்த அந்த ஒரே செயலால்

உம்மிடம் எங்களை

அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

9நல்லவர்களின் தூய மக்கள்

மறைவாகப் பலி செலுத்தினார்கள்;

நன்மைகளையும் இடர்களையும்

ஒன்றுபோலப்

பகிர்ந்து கொள்வார்கள்

என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள்

ஒருமித்து உடன்பட்டார்கள்;

மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை

அதே வேளையில்

பாடிக் கொண்டிருந்தார்கள்.

10ஆனால் பகைவர்கள் கதறியழுத

குரல்கள் எதிரொலித்தன;

தங்கள் குழந்தைகளுக்காக

எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.

11அடிமையும் தலைவரும்

ஒரே வகையில்

தண்டிக்கப்பட்டார்கள்;

குடிமகனும் மன்னரும்

ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்;

12எண்ணிலடங்காதோர்

ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி,

எல்லாரும் ஒருமிக்க

மடிந்து கிடந்தனர்.

உயிரோடிருந்தவர்களால்

அவர்களைப் புதைக்கவும்

இயலவில்லை.

அவர்களின் பெருமதிப்பிற்குரிய

வழித் தோன்றல்கள்

ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.

13மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து

அவர்கள் எதையுமே

நம்ப மறுத்துவிட்டாலும்,

தங்கள் தலைப்பேறுகள்

கொல்லப்பட்டபோது,

இம்மக்கள் ‘இறைமக்கள்’

என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

14எல்லாம் அமைதியில்

ஆழ்ந்திருந்தபோது,

நள்ளிரவு கடந்துவிட்ட

வேளையில்,

15எல்லாம் வல்ல உம் சொல்

விண்ணகத்திலுள்ள

அரியணையைவிட்டு எழுந்து,

அஞ்சா நெஞ்சம் கொண்ட

போர்வீரனைப்போல்

அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட

நாட்டின்மீது வந்து பாய்ந்தது.

16உமது தெளிவான

கட்டளையாகிய கூரிய வாளை

ஏந்தியவண்ணம்

அது நின்றுகொண்டு,

எல்லாவற்றையும் சாவினால்

நிரப்பியது;

மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த

போதிலும்,

விண்ணகத்தை தொட்டுக்

கொண்டிருந்தது.

17உடனே அச்சுறுத்தும் கனவுக்

காட்சிகள்

அவர்களைக் கலங்கடித்தன;

எதிர்பாராத பேரச்சம்

அவர்களைத் தாக்கியது.

18அங்கு ஒருவரும்

இங்கு ஒருவருமாக

அவர்கள் குற்றுயிராய்

விழுந்தபோது,

தாங்கள் மடிவதன்

காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.

19ஏனெனில் தாங்கள் பட்ட

துன்பத்தின் காரணத்தை

அவர்கள் தெரிந்து கொள்ளாமல்

சாகாதபடி

அவர்களைத் தொல்லைப்படுத்திய

கனவுகள் அதை

முன்னறிவித்திருந்தன.

20நீதிமான்களும் இறப்பை

நுகர நேர்ந்தது.

பாலைநிலத்தில் இருந்த

மக்கள் கூட்டம்

கொள்ளை நோயால் தாக்குண்டது.

ஆயினும் உமது சினம்

நீண்ட காலம் நீடிக்கவில்லை.

21குற்றமற்றவர் ஒருவர்

அவர்களுக்காகப் பரிந்துபேச

விரைந்தார்;

திருப்பணி என்னும்

தம் படைக்கலம் தாங்கியவராய்,

மன்றாட்டையும் பரிகாரத்திற்கான

நறுமணப்புகையையும்

ஏந்தியவராய்,

உமது சினத்தை எதிர்த்து நின்று

அழிவை முடிவுறச் செய்தார்;

இவ்வாறு, தாம் உம்

அடியார் என்று காட்டினார்.

22உடலின் வலிமையாலோ

படைக்கலங்களின் ஆற்றலாலோ

அவர் உமது சினத்தை

மேற்கொள்ளவில்லை;

ஆனால் எங்கள் மூதாதையர்க்கு

அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும்

உடன்படிக்கையையும் நினைவூட்டி

‘வதைப்போனை’த் தம் சொல்லால்

தோல்வியுறச் செய்தார்.

23செத்தவர்களின் பிணங்கள்

ஒன்றன்மீது ஒன்று விழுந்து

பெரும் குவியலாய்க் கிடந்தன.

அப்போது அவர் குறுக்கிட்டு

உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி,

எஞ்சியிருந்தோரை

அது தாக்காமல் செய்துவிட்டார்.

24அவர் அணிந்திருந்த நீண்ட

ஆடையில் உலகு அனைத்தும்

பொறிக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த

நான்கு கல் வரிசையிலும்

மூதாதையரின் மாட்சிமிகு

பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அவர் தலையில் இருந்த

மணிமுடியில்

உமது மாட்சி வரையப்பட்டிருந்தது.

25“அழிப்போன்” இவற்றைக் கண்டு

பின்வாங்கினான்.

அச்சம் அவனை ஆட்கொண்டது.

உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே

அவனுக்குப் போதுமானது.


18:1-4 விப 13:17-22.
18:5 விப 11:1-6.
18:20-25 எண் 16:41-50.
18:24 விப 28:1-43; சீஞா 45:6-13; 50:11.


18:2 ‘தங்களை விட்டு விலகும்படி கேட்டுக் கொண்டார்கள்.’ என்றும் மொழிபெயர்க்கலாம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks