back to top
HomeTamilசாலமோனின் ஞானம் அதிகாரம் - 17 - திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இருளும் ஒளியும்

1உம் தீர்ப்புகள் மேன்மையானவை,

விளக்கமுடியாதவை.

எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத

மனிதர்கள் நெறிதவறினார்கள்.

2நெறிகெட்டவர்கள்

உமது தூய மக்களினத்தை

அடிமைப்படுத்த எண்ணியபோது

அவர்களே காரிருளின் அடிமைகளாகவும்

நீண்ட இரவின் கைதிகளாகவும்

தங்கள் வீடுகளுக்குள்ளேயே

அடைபட்டு, உமது முடிவில்லாப்

பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.

3மேலும் மறதி என்னும்

இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால்

தங்கள் மறைவான பாவங்களில்

மறைந்து கொண்டதாக

எண்ணிக் கொண்டிருந்த அவர்கள்

அச்சத்தால் நடுங்கியவர்களாய்

கொடிய காட்சிகளால்

அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.

4அவர்கள் பதுங்கியிருந்த

உள்ளறைகள்கூட அவர்களை

அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை.

அச்சுறுத்தும் பேரொலிகள்

எங்கும் எதிரொலித்தன.

வாடிய முகங்கள் கொண்ட

துயர ஆவிகள் தோன்றின.

5எந்த நெருப்பின் ஆற்றலாலும்

ஒளி கொடுக்க இயலவில்லை;

விண்மீன்களின்

ஒளி மிகுந்த கூடர்களாலும்

இருள் சூழ்ந்த அவ்விரவை

ஒளிர்விக்க முடியவில்லை.

6தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும்

தீயைத் தவிர வேறு எதுவும்

அவர்கள் முன்னால் தோன்றவில்லை.

அவர்களோ நடுக்கமுற்று,

தாங்கள் காணாதவற்றைவிடக்

கண்டவையே தங்களை

அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.

7மந்திரவாதக் கலையின்

மாயங்கள் தாழ்வுற்றன.

அவர்கள்

வீண்பெருமை பாராட்டிய ஞானம்

வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.

8நோயுற்ற உள்ளத்திலிருந்து

அச்சத்தையும் குழப்பத்தையும்

விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே

நகைப்புக்கிடமான அச்சத்தினால்

நோயுற்றார்கள்.

9தொல்லை தரக்கூடிய எதுவும்

அவர்களை அச்சுறுத்தவில்லை

எனினும்,

கடந்து செல்லும் விலங்குகளாலும்

சீறும் பாம்புகளாலும்

அவர்கள் நடுக்கமுற்றார்கள்.

எவ்வகையிலும்

தவிர்க்கமுடியாத காற்றைக்கூட

10ஏறிட்டுப் பார்க்க மறுத்து,

அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.

11கயமை தன்னிலே

கோழைத்தனமானது.

தானே தனக்கு

எதிராகச் சான்று பகர்கிறது;

மனச்சான்றின் உறுத்தலுக்கு

உள்ளாகி இடர்களை

எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.

12அச்சம் என்பது பகுத்தறிவின்

துணையைக் கைவிடுவதே.

13உதவி கிடைக்கும் என்னும்

எதிர்பார்ப்புக் குன்றும்போது,

துன்பத்தின் காரணம் அறியாத

நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.

14உண்மையிலேயே

வலிமை சிறிதும் இல்லாததும்,

ஆற்றலற்ற கீழுலகின்

ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான

இரவு முழுவதும் அவர்கள்

யாவரும் அமைதியற்ற

உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

15சில வேளைகளில்

மாபெரும் பேயுருவங்கள்

அடிக்கடி தோன்றி

அவர்களை அச்சுறுத்தின;

மற்றும் சில வேளைகளில்

அவர்களது உள்ளம்

ஊக்கம் குன்றிச்

செயலற்றுப் போயிற்று.

ஏனெனில் எதிர்பாராத

திடீர் அச்சம் அவர்களைக்

கலங்கடித்தது.

16அங்கு இருந்த ஒவ்வொருவரும்

கீழே விழுந்தனர்;

கம்பிகள் இல்லாச் சிறையில்

அடைபட்டனர்.

17ஏனெனில் உழவர், இடையர்,

பாலை நிலத்தில் பாடுபடும்

தொழிலாளர் ஆகிய அனைவரும்

அதில் அகப்பட்டுத்

தவிர்க்கமுடியாத முடிவை

எதிர்கொண்டனர்;

ஏனெனில் அவர்கள் அனைவரும்

இருள் என்னும் ஒரே சங்கிலியால்

கட்டுண்டனர்.

18காற்றின் ஒலி,

படர்ந்த கிளைகளிலிருந்து வரும்

பறவைகளின் இனிய குரல்,

பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும்

வெள்ளத்தின் சீரான ஓசை,

பெயர்த்துக் கீழே தள்ளப்படும்

பாறைகளின் பேரொலி,

19கண்ணுக்குப் பலப்படாதவாறு

தாவி ஓடும்

விலங்குகளின் பாய்ச்சல்,

கொடிய காட்டு விலங்குகளின்

முழக்கம்,

மலைக் குடைவுகளிலிருந்து

கேட்கும் எதிரொலி

ஆகிய அனைத்தும் அவர்களை

அச்சத்தால் முடக்கிவிட்டன.

20உலகெல்லாம்

ஒளி வெள்ளத்தில் திளைத்து,

தன் வேலையில்

தடையின்றி ஈடுபட்டிருந்தது.

21இவ்வாறிருக்க,

எகிப்தியர்கள்மேல் மட்டும்

அடர்ந்த காரிருள்

கவிந்து படர்ந்தது.

அவர்களை விழுங்கக்

குறிக்கப்பட்ட இருளின்

சாயல் அது.

எனினும் அவர்களே இருளைவிடத்

தங்களுக்குத் தாங்கமுடியாத

சுமையாய் இருந்தார்கள்.


17:2 விப 10:21-23.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks