back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 9 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 9 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: ‛மகனுக்காக உயிரைக்கொடு’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, என் முழு இதயத்தாலும்

உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம்

செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

2உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;

உன்னதரே, உமது பெயரைப்

போற்றிப் பாடுவேன்.

3என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;

உமது முன்னிலையில்

இடறிவிழுந்து அழிவார்கள்.

4நீர் நீதியுள்ள நடுவராய்

அரியணையில் வீற்றிருக்கின்றீர்;

என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.

5வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;

பொல்லாரை அழித்தீர்;

அவர்களது பெயர் இனி இராதபடி

அடியோடு ஒழித்துவிட்டீர்.

6எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்

தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.

7அவர்களின் நகர்களை

நீர் தரைமட்டம் ஆக்கினீர்;

அவர்களைப்பற்றிய நினைவு

அற்றுப் போயிற்று.

ஆண்டவர் அரியணையில்

என்றென்றும் வீற்றிருக்கின்றார்;

நீதி வழங்குவதற்கென்று

அவர் தம் அரியணையை

அமைத்திருக்கின்றார்.

8உலகிற்கு அவர்

நீதியான தீர்ப்பு வழங்குவார்;

மக்களினத்தார்க்கு

நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.

9ஒடுக்கப்படுவோருக்கு

ஆண்டவரே அடைக்கலம்;

நெருக்கடியான வேளைகளில்

புகலிடம் அவரே.

10உமது பெயரை அறிந்தோர்

உம்மில் நம்பிக்கை கொள்வர்;

ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை

நீர் கைவிடுவதில்லை.

11சீயோனில் தங்கியிருக்கும்

ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

அவருடைய செயல்களை

மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;

12ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்

எளியோரை நினைவில் கொள்கின்றார்;

அவர்களின் கதறலை

அவர் கேட்க மறவார்.

13ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;

என்னைப் பகைப்போரால்

எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;

சாவின் வாயினின்று என்னை விடுவியும்.

14அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்

உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;

நீர் அளிக்கும் விடுதலைகுறித்து

அகமகிழ்வேன்.

15வேற்றினத்தார் வெட்டின குழியில்

அவர்களே விழுந்தனர்;

அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்

அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.

16ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்

தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;

பொல்லார் செய்த செயலில்

அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)

17பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;

கடவுளை மறந்திருக்கும்

வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.

18மாறாக, வறியவர் என்றுமே

மறக்கப்படுவதில்லை;

எளியோரின் நம்பிக்கை

ஒருபோதும் வீண்போகாது.

19ஆண்டவரே, எழுந்தருளும்;

மனிதரின் கை ஓங்க விடாதேயும்;

வேற்றினத்தார் உமது முன்னிலையில்

தீர்ப்புப் பெறுவார்களாக!

20ஆண்டவரே, அவர்களைத்

திகிலடையச் செய்யும்;

தாம் வெறும் மனிதரே என்பதை

வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Your Faith. Your Way.
Get the Catholic Gallery app for offline Mass readings, prayers, audio Bibles, and yearly Bible Reading plans.
No Thanks