எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி; “நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது.
2 உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்” என்றார்.
3 நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, “அவனுக்கு ‘மகேர்சாலால் கஸ்பாசு’ என்று பெயரிடு.
4 ஏனெனில் இச்சிறுவன் “அப்பா, அம்மா” என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
5 மீண்டும்; ஆண்டவர் என்னோடு உரையாடி,
6 “அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்; இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள்.
7 ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்வார்; கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்; எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்;
8 எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்; யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்; இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்;
9 மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்; ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்; தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்; போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்; ஆயினும் கலக்கமுறுவீர்கள். போர்க்கோலம் கொள்ளுங்கள்; ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள்.
10 ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்; அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்; கூடிப்பேசி முடிவெடுங்கள்; அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.
11 தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்;
12 “இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்;
13 படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்; அவருக்கே அஞ்சுங்கள்; அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்,
14 அவரே திருத்தூயகமாய் இருப்பார்; இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்; எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.
15 அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்; இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.
16 இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாய்க் கட்டிவை; என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை;
17 யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.
18 படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடி கொண்டிருக்கிறார்; நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும் இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும் அறிகுறிகளாகவும் இருக்கிறோம்.
19 “மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்;களை ஓதிக் குறி சொல்;;வோரையும் அணுகிக் குறி கேளுங்கள்; என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?” என்பார்கள்.
20 “இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்” என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி.
21 பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்; பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்; முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள்.
22 தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்; எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்; காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.
இனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்
Visit Catholic Gallery Main Site
Related Articles