Home » எசாயா அதிகாரம் – 24 – திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 24 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

அனைத்து உலகிற்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு

1இதோ, ஆண்டவர் பூவுலகை

வெறுமையாக்கிப் பாழடையச்

செய்து, அதன் நிலப்பரப்பை

உருக்குலையச் செய்து,

அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்.

2அப்பொழுது மக்களுக்கு எப்படியோ

அப்படியே குருக்களுக்கும்,

பணியாளனுக்கு எவ்வாறோ

அவ்வாறே அவன் தலைவனுக்கும்,

பணிப்பெண்ணுக்கு எப்படியோ

அப்படியே அவள் தலைவிக்கும்,

வாங்குபவனுக்கு எவ்வாறோ

அவ்வாறே விற்பவனுக்கும்,

கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ

அப்படியே கடன் வாங்குபவனுக்கும்,

வட்டிக்குக் கொடுத்தவனுக்கு எவ்வாறோ

அவ்வாறே வட்டிக்கு

வாங்கினவனுக்கும் நேரிடும்.

3நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;

முழுவதும் சூறையாடப்படும்.

ஏனெனில், இது

ஆண்டவர் கூறிய வார்த்தை.

4நிலம் புலம்பி வாடுகின்றது.

மண்ணுலகம் தளர்ந்து வாடுகின்றது,

மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர்

தளர்ச்சியுறுவர்.

5நாடு அதில் குடியிருப்போரால்

தீட்டுப்பட்டுள்ளது; ஏனெனில்

அவர்கள் சட்டங்களை மீறினார்கள்;

நியமங்களைச் சீர்குலைத்தார்கள்;

என்றுமுள உடன்படிக்கையை

முறித்தார்கள்.

6ஆதலால், சாபம்

நாட்டை விழுங்குகிறது.

அதில் குடியிருப்போர்

குற்றப்பழியில் சிக்கியுள்ளனர்.

அதில் வாழ்வோர்

நெருப்பில் எரிந்து போகின்றனர்;

சிலரே எஞ்சியிருப்பர்.

7திராட்சை இரசம் அழுகின்றது;

திராட்சைக் கொடி தளர்கின்றது;

அக்களிக்கும் இதயங்களெல்லாம்

பெருமூச்சு விடுகின்றன.

8மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது.

அக்களித்திருந்தோரின்

ஆரவாரம் அடங்கிவிட்டது;

யாழின் இன்னிசை நின்றுவிட்டது.

9பாடலுடன் அவர்கள்

திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்;

மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.

10குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது;

யாரும் நுழையாதபடி

வீடெல்லாம் பூட்டப்பட்டது.

11திராட்சை இரசத்திற்காகத்

தெருக்களில் கூச்சல் எழுகின்றது;

மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது;

விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.

12பாழடைந்த நிலையே

நகரில் எஞ்சியிருக்கின்றது;

நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும்

பாழாய்க் கிடக்கின்றன.

13நாட்டில் மக்களுக்கு நேரிடுவது

ஒலிவமரத்தை உலுக்குவது போலவும்,

அறுவடைக்குத் தப்பிய

திராட்சைப் பழங்களைப்

பறிப்பது போலவும் உள்ளது.

14எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி

மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்;

ஆண்டவரின் மாட்சி பற்றி

மேற்கிலிருந்து

ஆரவாரம் செய்கின்றார்கள்.

15ஆதலால் கீழ்த்திசையில்

ஆண்டவரைப் பெருமைப் படுத்துங்கள்;

கடற்கரை நாடுகளில்

இஸ்ரயேலின் கடவுளாகிய

ஆண்டவரைப் போற்றுங்கள்.

16மண்ணுலகின் எல்லையிலிருந்து

‘நீதியுள்ளவருக்கு மாட்சி’ என்ற

புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்;

நானோ, “இளைத்துப் போனேன்,

இளைத்துப் போனேன்,

எனக்கு ஐயோ, கேடு;

எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்;

துரோகிகள்

நம்பிக்கைத் துரோகம்

செய்கின்றார்கள்” என்றேன்.

17உலகில் குடியிருப்போரே,

திகில், படுகுழி, கண்ணி,

உங்களுக்கெதிரில் இருக்கின்றன.

18திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர்

படுகுழியில் வீழ்வார்;

படுகுழியிலிருந்து ஏறுகின்றவர்

கண்ணியில் சிக்கிக் கொள்வார்;

ஏனெனில், விண்ணின் மடைகள்

திறக்கப்படுகின்றன;

நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.

19பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது;

நிலவுலகம் பிளந்து விரிகின்றது;

மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.

20குடிவெறியரைப் போல்

மண்ணுலகம் தள்ளாடுகின்றது;

குடிசைபோல் அது

இடம் பெயர்ந்து செல்கின்றது;

அதன் குற்றப்பழி பாரச்சுமையாய்

அதை அழுத்துகின்றது;

அது வீழ்ச்சியடையும்;

இனி ஒருபோதும் எழாது.

21அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும் நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.

22கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்; சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள். நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்கள்.

23நிலா நாணமுறுவாள்; கதிரவன் வெட்கமடைவான்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் அரசாள்வார். அவர்களின் பெரியோர் முன்னிலையில் அவர்தம் மாட்சி வெளிப்படும்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks