Home » Tamil » விடுதலைப் பயணம் அதிகாரம் – 26 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 26 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

சந்திப்புக் கூடாரம்
(விப 36:8-38)

1மேலும், திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.

2மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம். ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.

3இவற்றுள் ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் ஏனைய ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் இணைத்து விட வேண்டும்.

4பின்னர், முதல் தொகுப்பின் கடை ஓரத்தில் நீல வண்ணத்துணி வளையங்களை அமைப்பாய், அவ்வாறே அடுத்த தொகுப்பின் கடை ஓரத்திலும் வளையங்களை அமைப்பாய்.

5முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது. வளையங்கள் எதிரெதிரே இருக்க வேண்டும்.

6பொன்னால் கொக்கிகள் ஐம்பது செய்து, அக்கொக்கிகளால் திரைத்தொகுப்புகளை ஒன்றாய் இணைத்துவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமையும்.

7திருஉறைவிடத்தின் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு உரோமத்தால் மூடுதிரைகள் செய்வாய். பதினொரு மூடுதிரைகள் செய்யப்பட வேண்டும்.

8ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழம். அகலம் நான்கு முழம். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றே.

9இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும் ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்துவிடு. ஆறு மூடுதிரைகளின் தொகுப்பு கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடக்கட்டும்.

10முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைப்பாய். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த திரைத்தொகுப்பின் ஓரத்திலும் அமைப்பாய்.

11வெண்கலத்தால் ஐம்பது கொக்கிகள் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டிவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து கூடார மூடுதிரை அமையும்.

12கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும். திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.

13கூடார மூடுதிரையின் பக்கங்களில் மீந்திருக்கும்பகுதி, திருஉறைவிடத்தின் ஒருபுறம் ஒரு முழமும், மறுபுறம் ஒரு முழமும் தொங்கி மறைக்கும்.

14செந்நிறப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும் கூடாரத்திற்கு ஒரு மேல்விரிப்பு செய்வாய்.

15திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச் சித்திம்மரத்தால் செய்வாய்.

16ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம். சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.

17சட்டம் ஒன்றுக்கு இரு கொளுத்துகள் வீதம் சட்டத்தோடு சட்டத்தை இணைத்து விடு. அவ்வாறே திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களும் இணைக்கப்பட வேண்டும்.

18திருஉறைவிடத்திற்காகச் சட்டங்கள் செய்யுங்கள்; தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி நிற்க வேண்டியவை இருபது சட்டங்கள்.

19ஒரு சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருத்துகள், அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருள்கள் என்று இருபது சட்டங்களுக்குக் கீழே நாற்பது வெள்ளிப் பொருத்துகள் வேண்டும்.

20திரு உறைவிடத்தின் இரண்டாவது பக்கமாகிய வடதிசையில் இருபது சட்டங்கள் நிற்கும்.

21ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு, மறுசட்டத்துக்குக் கீழே இரண்டு என்று அவற்றில் நாற்பது வெள்ளிபாதப் பொருத்துகள் இடம் பெறும்.

22திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்குப்பக்கத்திற்கான ஆறு சட்டங்கள் செய்வாய்.

23அதனுடன் திருஉறைவிடத்தின் மூலைகளுக்காக இரண்டு சட்டங்களும் செய்வாய்.

24அவை ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்படும். இவ்வாறே இரண்டு மூலைகளும் அமையும்.

25ஒரு சட்டத்தின் அடியில் இரு பாதப்பொருத்துகள், மறுசட்டத்தினடியில் இரு பாதப்பொருத்துகள் என்று எட்டுச் சட்டங்களுக்குப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகள் வேண்டும்.

26சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்கள் செய்வாய். திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும்,

27திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும், மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே ஐந்துமாகக் குறுக்குச் சட்டங்கள் பொருத்துவாய்.

28நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், பலகைகளுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செலுத்தப்படவேண்டும்.

29சட்டங்களைப் பொன்னால் பொதிவாய்; அவற்றில் குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்காக வளையங்களைப் பொன்னால் செய்; குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிவாய்.

30இவ்வாறு, மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட திட்டப்படி திருஉறைவிடத்தை நிறுவுவாய்.

31மேலும், ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.

32அதனை நான்கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய். இவை பொன் வளைவாணிகள் கொண்டவை; பசும்பொன்னால் மூடப்பட்டு நான்கு வெள்ளி பாதப்பொருள்களில் நிற்பவை.

33கொக்கிகளில் அந்தத் திரையைத் தொங்கவிடு; அதற்கு உட்புறமாக உடன்படிக்கைப் பேழையை வைப்பாய். இவ்வாறு தொங்குதிரை தூயகத்தையும் திருத்தூயகத்தையும் பிரிக்கும்.

34திருத்தூயகத்தில், உடன்படிக்கைப் பேழையின்மேல் இரக்கத்தின் இருக்கையை அமைப்பாய்.

35தொங்குதிரைக்கு முன்புறம் ஒரு மேசையையும், மேசைக்கு எதிரே, திருஉறைவிடத்தின் தென்புறம், விளக்குத்தண்டையும் வைப்பாய்; மேசையையோ வடபுறம் வைப்பாய்.

36கூடாரத்தின் நுழைவிடத்திற்காக ஒரு தொங்குதிரை செய்வாய். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், பின்னல்வேலை கொண்டதாகச் செய்யப்பட வேண்டும்.

37இத்திரையைத் தொங்கவிடுவதற்காக, ஐந்து சித்திம் மரத்தூண்களைச் செய்துவை. இவை பசும்பொன்னால் மூடப்பட்டனவாயும், பசும்பொன் வளைவாணிகள் கொண்டனவாயும், ஐந்து வெண்கலப் பாதப்பொருத்துகளில் நிற்பனவாயும் அமையட்டும்.


26:33 எபி 6:19; 9:3-5.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more