back to top
HomeTamilவிடுதலைப் பயணம் அதிகாரம் - 37 - திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 37 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

உடன்படிக்கைப் பேழை செய்தல்
(விப 25:10-22)

1பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.

2அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்; அதைச்சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார்.

3அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும், இரு வளையங்களை மறு பக்கத்திற்குமாக, அதன் நான்கு கால்களுக்காகவும் நான்கு பொன் வளையங்களை வார்த்தார்.

4அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

5அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி, தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் செருகிவிட்டார்.

6அவர் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கையைச் செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.

7அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.

8ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக, அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.

9கெருபுகள் தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன. கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.

அப்ப மேசை செய்தல்
(விப 25:23-30)

10அவர் சித்திம் மரத்தால் மேசையொன்று செய்தார். அதன் நீளம் இரண்டு முழம்; அகலம் ஒரு முழம்; உயரம் ஒன்றரை முழம்.

11அவர் அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைத்தார்.

12அவர் கையகல அளவில் அதற்குச் சுற்றுச் சட்டம் அமைத்து அச்சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைத்தார்.

13அவர் அதற்கு நான்கு பொன்வளையங்கள் செய்து அவ்வளையங்களை நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் பொருத்தினார்.

14மேசையைத் தூக்கிச்செல்லும் தண்டுகள் தாங்கும் இவ்வளையங்கள் சட்டத்தின் அருகில் இருந்தன.

15மேசையைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

16மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள் ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.

விளக்குத் தண்டு செய்தல்
(விப 25:31-40)

17பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார். அதை அடிப்பு வேலையாகச் செய்தார். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.

18விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.

19ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.

20விளக்குத் தண்டுக்கு நேர் மேலே, வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.

21முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இருகிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று அதிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.

22அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தனவாயும், பசும்பொன் அடிப்பு வேலையுடன் செய்யப்பட்டனவாயும் இருந்தன.

23அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.

24அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.

தூபபீடம் செய்தல்
(விப 30: 1-5)

25அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார். அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ இரண்டு முழம். அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.

26அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.

27அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.

28சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

திருப்பொழிவு எண்ணெயும் நறுமணத் தூபமும் தயாரித்தல்
(விப 30:22-38)

29அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும் திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும் கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks