back to top
HomeTamilவிடுதலைப் பயணம் அதிகாரம் - 16 - திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மன்னா, காடை

1இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.

2இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.

3இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.

4அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.

5ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

6மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, “நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.

7காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள். ஏனெனில், ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார். இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்” என்றனர்.

8பின் மோசே, “ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை” என்றார்.

9மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார்.

10அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.

11ஆண்டவர் மோசேயை நோக்கி,

12“இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.

13மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.

14பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.

15இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’* என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:

16மேலும், ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி* வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

17இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு; குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.

18ஆனால், இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.

19மோசே அவர்களைப் பார்த்து, “இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது” என்றார்.

20ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.

21மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில், வெயில் ஏறஏற அது உருகிவிடும்.

22ஆனால், ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.

23அப்போது அவர் அவர்களை நோக்கி, “கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான ‘சாபத்து’*. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

24மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம்வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை.

25மோசே அவர்களிடம், “இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்; இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.

26ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது” என்று அறிவித்தார்.

27ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.

28ஆண்டவர் மோசேயை நோக்கி, “எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?

29கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால், ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே, ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்; ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது” என்றார்.

30ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.

31இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை ‘மன்னா’ என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.

32ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்; நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.

33பின்பு மோசே ஆரோனை நோக்கி, “நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்” என்றார்.

34ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார்.

35இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.

36இரண்டு படி** என்பது ‘ஏப்பா’ என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.


16:4 யோவா 6:31.
16:15 1 கொரி 10:3.
16:18 2 கொரி 8:15.
16:23 விப 20:8-11.
16:31 எண் 11:7-8.
16:33 எபி 9:4.
16:35 யோசு 5:12.


16:15 * எபிரேயத்தில், ‘மான்-கூ’ என்பது பாடம்; அதற்கு ‘இது என்ன?’ என்பது பொருள்.
16:16 ‘ஓர் ஓமர்’ என்பது எபிரேய பாடம்.
16:23 * எபிரேயத்தில், ‘ஓய்வு’ என்பது பொருள்.
16:32 ‘ஓமர்’ என்பது எபிரேய பாடம்.
16:36 ‘ஓமர்’ என்பது எபிரேய பாடம்.
16:36 ‘ஏப்பா’ என்பது இருபது படி ஆகும்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks