back to top
HomeTamil1 சாமுவேல் அதிகாரம் - 30 - திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 30 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

அமலேக்கியரோடு போர்

1மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாகை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு; சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாகைத் தாக்கித் தீக்கிரையாக்கினர்.

2அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.

3தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது ,அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.

4அப்பொழுது தாவீதும் அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.

5தாவீதின் இருமனைவியராகிய இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.

6தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்; வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால், தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமை பெற்றிருந்தார்.

7பின்பு, தாவீது, அகிமலக்கின் மகன் குரு அபயத்தாரிடம், “ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்!” என்று கூறவே அபியத்தார் ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.

8அப்பொழுது தாவீது, “நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா?” என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர், ‘பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! சிறைப்பட்டோரை மீட்பதும் உறுதி” என்று பதிலளித்தார்.

9ஆதலால், தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தனர். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.

10எனவே, தாவீது நானூறு பேரோடு அவர்களைப் பின்தொடர்ந்தார்; களைப்படைந்த இருநூறு பேர், பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.

11வயல் வெளியில் ஓர் எகிப்தியனைக் கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்; உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுத்தனர்.

12மேலும், அவர்கள் அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்குக் கொடுத்தனர். அவன் இவற்றைச் சாப்பிட்டபின் புத்துயிர் பெற்றான். ஏனெனில், அவன் இரவு பகல் மூன்று நாளாய் அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

13தாவீது அவனை நோக்கி, “நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஒர் எகிப்திய இளைஞன்; ஓர் அமலேக்கிய மனிதரின் பணியாள்; நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு முன் என் தலைவர் என்னை விட்டுச் சென்றார்.

14நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாகைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம்” என்று பதிலளித்தான்.

15தாவீது அவனிடம், “அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?” என்று கேட்க, அவன், “என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்; அப்பொழுது அக்கூட்டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன்” என்றான்.

16அவ்வாறே, அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த மாபெரும் கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.

17தாவீது அன்று மாலை தொடங்கி மறுநாள் மாலை வரை அவர்களோடு போரிட்டார்; ஒட்டகங்கள் மீது ஏறி ஓடிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.

18அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.

19அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்களில் அனைத்தையும் தாவீது மீட்டுக் கொண்டு வந்தார்.

20ஆடு மாடுகள் எல்லாவற்றையும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்கு முன் ஓட்டிவந்த மக்கள், “இது தாவீதின் கொள்ளைப் பொருள்” என்றனர்.

21பின்பு, களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்; அப்போது அவர்கள் தாவீதையும் அவரோடு இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தனர். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.

22ஆனால், தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், “அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் ஒன்றும் அளிக்க மாட்டோம்; அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும்” என்றனர்.

23அதற்குத்தாவீது, “என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது; அவரே நம்மைக் காப்பாற்றி, நமக்கெதிராக வந்த கொள்ளைக் கூட்டத்தினரை நம் கையில் ஒப்படைத்தார்.

24இதன் பொருட்டு நீங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்? ஏனெனில், போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவுதான் நான் போர்ப் பொருள்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்; இருவரின் பங்கும் சமமாகவே இருக்கும்” என்றார்.

25இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமமும் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.

26தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: “இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன்” என்றார்.

27பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்; பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தோர்.

28அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்.

29இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனியரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்;

30ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்;

31எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களிலும் இருந்தோர்.


30:5 1 சாமு 25:42-43.
30:7 1 சாமு 22:22-25.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks