back to top
HomeTamil1 சாமுவேல் அதிகாரம் - 19 - திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 19 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

சவுல் தாவீதைத் துன்புறுத்துதல்

1தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால், சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது மிகுதியாக அன்பு கொண்டிருந்தார்.

2ஆதலால், தாவீதைப் பார்த்து யோனத்தான், “என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால், எச்சரிக்கையாய் இரு. காலையிலேயே புறப்பட்டு மறைவாக ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள்.

3நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.

4யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்லவிதமாகப் பேசி, “அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில், அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும். அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையவாய் இருந்தன.

5அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான்; ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” என்று கூறினார்.

6சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்” என்றார்.

7பின்பு, யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும், யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில்ஈடுபட்டார்.

8மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்களில் மிகுதியானோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினார்கள்.

9பின்னர், ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.

10அப்பொழுது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார். ஆனால், சவுலின் குறியிலிருந்து விலகினதால் சவுலின் ஈட்டி சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பியோடினார்.

11உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால், தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், “நீர் இன்றிரவே உம் உயிரைக் காப்பற்றிக் கொள்ளவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்!” என்றாள்.

12ஆதலால், மீக்கால் தாவீதை பலகலணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து ஓடித் தப்பித்துக்கொண்டார்.

13மீக்கால் குடும்பச் சிலையை எடுத்து அதைப் படுக்கையில் கிடத்தினாள். அதன் தலைப்பாகத்தில் ஒரு வெள்ளாட்டுத்தோலை வைத்து ஒரு போர்வையால் மூடினாள்.

14தாவீதைப் பிடித்து வரச் சவுல் தூதர்களை அனுப்பிய போது, அவள் “அவர் நோயுற்றிருக்கிறார்” என்றாள்.

15மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும் படி தூதர்களை அனுப்பி, “நான் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.

16அவர்கள் வந்தபோது, இதோ, படுக்கையின் மேல் குடும்பச் சிலையும் அதன் தலைமாட்டில் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டனர்.

17சவுல் மீக்காலிடம், “என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் என்னை வஞ்சித்தாய்?” என்று கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், “‘என்னைப் போகவிடு; இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவேன்;’ என்று அவர் மிரட்டினார்” என்று மறுமொழி கூறினாள்.

18அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியோடி இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு செய்த யாவற்றையும் கூறினார். பின்னர், அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.

19“இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார்” என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது.

20உடனே சவுல், தாவீதை பிடித்து வர ஆள்களை அனுப்பினார். அவர்கள் சென்ற போது இறைவாக்கினர் இறைவாக்குரைப்பதையும், சாமுவேல் அவர்களுக்குத் தலைமை தாங்கி நிற்பதையும் கண்டனர். அத்துடன் சவுலின் ஆள்கள் மேலும் கடவுளின் ஆவி இறங்கி வரவே அவர்களும் இறைவாக்குரைத்தனர்.

21சவுலுக்கு இது தெரிவிக்கப்பட்டபோது அவர் வேறு ஆள்களை அனுப்ப, அவர்களும் இறைவாக்குரைத்தார். பின்பு, அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப அவர்களும் இறைவாக்குரைத்தார்.

22அடுத்து அவரே இராமாவுக்குச் சென்று, சேக்குவிலிருக்கம் பெரிய கிணற்றருகே வந்து, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டார். அதற்கு ஒருவன் “இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம்” என்றான்.

23ஆதலால், அவர் அங்கிருந்து இராமாவிலிருந்த நாவோத்துக்குப் புறப்பட்டார். கடவுளின் ஆவி அவர் மேலும் இறங்கி வரவே, ராமாவின் நாவோத்துக்குச் சென்றடையும் வரை அவரும் இறைவாக்குரைத்தார்.

24அவரும் தம் மேலுடையைக் களைந்துவிட்டு சாமுவேலின் முன் அவரும் இறைவாக்குரைத்தார். அன்று பகல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்து கிடந்தார். அதனால் தான், ‘சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?’ என்ற சொல் வழங்கலாயிற்று!


19:24 1 சாமு 10:11-12.


19:11 திபா 59 தலைப்பு.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks