back to top
HomeTamil1 சாமுவேல் அதிகாரம் - 16 - திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தாவீது அரசராய்த் திருப்பொழிவு செய்யப்படுதல்

1ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுடாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில், அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.

2அதற்குச் சாமுவேல், “எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே?” என்றார். மீண்டும் ஆண்டவர், “நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! ‘ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்’ என்று சொல்;

3ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்போது நீ செய்யவேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்றார்.

4ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, “உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே” என்று கேட்டனர்.

5அதற்கு அவர், “ஆம் சமாதானம்தான்; ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்; உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்” என்றார். மேலும், ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.

6அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.

7ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.

8அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக கடந்துபோகச் செய்தார். அவர் “இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார்.

9பிறகு, ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். “ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார்.

10இவ்வாறு, ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச்செய்தார். “இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல்.

11தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், “ஆளனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில், அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார்.

12ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.

13உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சவுலின் அரசவையில் தாவீது

14ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.

15அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், “ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே!

16உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! நீரும் நலமடைவீர்!” என்றனர்.

17எனவே, சவுல் தம் பணியாளரிடம், “யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்.

18பணியாளர்களில் ஒருவன், “இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும், ஆண்டவர் அவனோடு இருக்கிறார்” என்றான்.

19அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி “ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும்” என்று தெரிவித்தார்.

20அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.

21தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன் தாங்குவோனாக நியமித்தார்.

22“தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில், என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது” எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.

23அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks