back to top
HomeTamil1 சாமுவேல் அதிகாரம் - 25 - திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 25 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

சாமுவேலின் இறப்பு

1சாமுவேல் இறந்தார்; இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு, அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.

தாவீதும் அபிகாயிலும்

2கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம்மனிதன் செல்வம் மிக்கவன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.

3அம் மனிதனின் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்; அவள் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலேபியன்.

4நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பதாகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.

5தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து, “நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்துக் கூறுங்கள்.

6அவனை நோக்கி, ‘உமக்கும், உம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!

7ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் எனக் கேள்வியுற்றேன்! உம் இடையர்கள் எம்மோடு இருந்தார்கள்; நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை; கர்மேலில் அவர்கள் இருந்த காலமெல்லாம் எதையும் இழக்கவுமில்லை.

8உம் பணியாளர்களைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆதலால், இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில், நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கும் உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க!’ எனக் கூறுங்கள்” என்று சொல்லியனுப்பினார்.

9தாவீதின் இளைஞர்கள் சென்று நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றையும் கூறிக் காத்திருந்தனர்.

10நாபால் தாவீதின் இளைஞர்களிடம், “தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் இந்நாளில் பலர் உள்ளனர்.

11என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா?” என்று பதிலளித்தான்.

12ஆதலால், தாவீதின் இளைஞர்கள் திரும்பிவந்து அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.

13தாவீது தம் ஆள்களை நோக்கி, “நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளைக் கட்டிக்கொண்டான்; தாவீதும் தம் வாளைக் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்துகொண்டனர்.

14நாபாலுடைய பணியாள்களில் ஒருவன் அவன் மனைவி அபிகாயிலிடம், “இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவமானப்படுத்திவிட்டார்.

15இருப்பினும், இந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தனர்; எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளிகளில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.

16நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்ந்த நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தனர்.

17எனவே, இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்; ஏனெனில், நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்குத் தீய குணமுடையவராய் இருக்கிறார்” என்றனர்.

18இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு, அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவற்றை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.

19அவர் தம் பணியாளர்களை நோக்கி, “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன்,” என்றார். ஆனால், இதைப்பற்றி தம் கணவர் நாபாலிடம் தெரிவிக்கவில்லை.

20அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீதும் அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களைச் சந்தித்தார்.

21அப்பொழுது தாவீது, “இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமையே செய்தான்.

22அவனுக்குச் சொந்தமானவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியுமட்டும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

23அபிகாயில் தாவீதைப் பார்த்தபோது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.

24அவர் தாவீதின் காலில் விழுந்து, “என் தலைவரே, பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் சொல்லப் போவதை நீர் செவி கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.

25என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில், அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர். நாபால் என்பது அவருடைய பெயர்; அதன் படி மூடத்தனமும் அவருக்குண்டு. என் தலைவராகிய நீர் அனுப்பிய இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை.

26இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறும், நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்குத் தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!

27இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பாராக!

28உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்; என் தலைவரே, நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய உமக்கு ஆண்டவர் ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டியெழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உம்மை அணுகாது!

29உம்மைத் தாக்கவும் உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர், உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கட்டும். உம் எதிரிகளின் உயிர்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல் எறியப்படும்.

30ஆண்டவர் தலைவராகிய உம்மைக் குறித்துத் தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார்.

31அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்!“ என்றார்.

32தாவீது அபிகாயிலை நோக்கி, “இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!

33இரத்தப் பழிக்குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப்பதிலிருந்தும் என்னை இன்று தடை செய்த நீ ஆசி பெறுவாய்! உன் நுண்ணறிவும் ஆசி பெறுவதாக!

34நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடிவதற்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்குத் தீங்கு செய்வதிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்!” என்றார்.

35பின்பு, அபிகாயில் தமக்குக் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, “சமாதானத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவி கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.

36அபிகாயில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றைத் தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்; அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது. அவன் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.

37காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தபின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் பெரிய‌ அதிர்ச்சிக்குள்ளாகிக் கல்லைப்போல் செயலற்றவன் ஆனான்.

38ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குப்பின் அவன் இறந்தான்.

39நாபால் இறந்து விட்டதைத் தாவீது கேள்வியுற்றபோது, “நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு நிகராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அவற்றைத் திருப்பிவிட்டார்” என்றார். பின்பு, அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காகத் தாவீது அவரிடம் தூதனுப்பினார்.

40தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார்” என்றனர்.

41அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, “இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!” என்றாள்.

42உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்து சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்; அவர் தாவீதின் தூதர்களைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு மனைவியானார்.

43இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்; அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.

44சவுல் தம் புதல்வியும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.


25:44 2 சாமு 3:14-16.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks