Home » Tamil » 1 சாமுவேல் அதிகாரம் – 29 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 29 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

பெலிஸ்தியர் தாவீதைப் புறக்கணித்தல்

1பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுதிரட்டினர்; இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினர்.

2பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் ஆயிரத்தவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றனர். தாவீதும் அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றனர்.

3அப்பொழுது பெலிஸ்தியப் படைத்தலைவர்கள், “இந்த எபிரேயர் இங்கு என்ன செய்கின்றனர்?” என்று கேட்க, அதற்கு ஆக்கிசு அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் அரசர் சவுலின் பணியாளராய் இருந்த இந்தத் தாவீது பல நாள்களாக, ஆண்டுகளாக என்னோடு இருக்கவில்லையா? அவர் என்னிடம் வந்ததுமுதல் இந்நாள் வரை அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்றார்.

4ஆனால், பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, “நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதைத் திருப்பி அனுப்பும்; நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ? இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான்? இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா?

5‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; ஆனால், தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்து அன்றோ?” என்றனர்.

6அப்பொழுது ஆக்கிசு தாவீதை அழைத்து அவரிடம், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்; நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ,நீர் என்னிடம் வந்தநாள் முதல் இன்று வரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை. இருப்பினும் நீர் வருவதை தலைவர்கள் விரும்பவில்லை.

7ஆதலால், இப்பொழுது திரும்பிச் செல்லும்; பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர்.சமாதானமாய்ச் செல்லும்” என்றார்.

8ஆனால், தாவீது அவரிடம், “நான் செய்தது என்ன? நான் மன்னராகிய என் தலைவரின் எதிரிகளுடன் போரிடச் செல்லாதவாறு நான் உம்மிடம் வந்தநாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன?” என்று கேட்டார்.

9அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, “கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்பது எனக்குத் தெரியும்; இருப்பினும், ‘இவன் எங்களோடு போருக்கு வரலாகாது’ என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.

10ஆதலால், உம்முடன் பிரிந்துவந்த உம் தலைவர் சவுலின் பணியாளர்களுடன் நீர் அதிகாலையில் எழுந்து விடிவதற்குள் புறப்பட்டுச் செல்லும்” என்றார்.

11ஆதலால், தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டு பெலிஸ்திய நாட்டிற்குத் திரும்பினார்; ஆனால், பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.


29:5 1 சாமு 18:7; 21:11.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.