Home » 1 அரசர்கள் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

எலியா காலத்துப் பஞ்சம்

1கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், “நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்றார்.

2பின்னர், ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது;

3“இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள்.

4அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக் கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”.

5அவ்வாறே, அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார்.

6காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

7நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது.

சாரிபாத்துக் கைம்பெண்

8அப்பொழுது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது;

9“நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”.

10எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார்.

11அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார்.

12அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்றார்.

13எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள்.

14இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார்.

15அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர்.

16எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

17இதற்குப் பின் ஒருநாள், வீட்டுத் தலைவியான அந்தப் பெண்ணின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது.

18அவர் எலியாவிடம், “கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?” என்றார்.

19எலியா அவரிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச்சென்று தம் படுக்கையில் கிடத்தினார்.

20அவர் ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?” என்று கதறினார்.

21அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப்படுத்து ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்” என்று மன்றாடினார்.

22ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான்.

23எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, “இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்” என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார்.

24அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்” என்றார்.


17:1 யாக் 5:17.
17:9 லூக் 4:25-26.
17:21 2 அர 4:34-35.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks