Home » 1 அரசர்கள் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1பாசாவுக்கு எதிராக அனானியின் மகனான ஏகூவுக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது:

2“தூசிக்கு நிகரான உன்னை நான் உயர்த்தி என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன். நீயோ எரொபவாமின் வழி நடந்து என் மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய்.

3எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும் அழிக்கப்போகிறேன். நெபாற்றின் மகனான எரொபவாமின் வீட்டுக்குச் செய்ததைப் போல, உன் வீட்டுக்கும் செய்வேன்.

4பாசாவைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர் நாய்களுக்கு இரையாவர்; வயல்வெளியில் இறப்பவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்.”

5பாசாவின் பிறசெயல்களும் அவன் செய்தவை யாவும் அவனுடைய வீரச் செயல்களும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

6பாசா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின் திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஏலா அரசன் ஆனான்.

7ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால், அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.

இஸ்ரயேல் அரசன் ஏலா

8யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தாறாம் ஆண்டில், பாசாவின் மகனான ஏலா இஸ்ரயேலின் அரசனாகித் திர்சாவில் இருந்து கொண்டு ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.

9அவனது தேர்ப்படையின் பாதிக்குத் தலைவனாய் இருந்த சிம்ரி என்ற அவனுடைய பணியாளன் அவனை ஒழித்து விடச் சூழ்ச்சி செய்தான். திர்சாவில் அரண்மனை மேற்பார்வையாளன் அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்துபோது,

10சிம்ரி உட்புகுந்து அவனை வெட்டிக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக அரசனானான். இது யூதா அரசன் ஆசாவினது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் நிகழ்ந்தது.

11அவன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை.

12இவ்வாறு, இறைவாக்கினர் ஏகூவின்மூலம் ஆண்டவர் பாசாவுக்கு எதிராக உரைத்த வாக்கின்படி, பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் சிம்ரி ஒழித்துக் கட்டினான்.

13பாசாவும் அவன் மகன் ஏலாவும் பல்வேறு பாவங்கள் செய்ததாலும், இஸ்ரயேல் பாவம் செய்யக் காரணமாய் இருந்து சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டியதாலும், இது நேர்ந்தது.

14ஏலாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

இஸ்ரயேல் அரசன் சிம்ரி

15யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டு, சிம்ரி திர்சாவில் இருந்துகொண்டு ஏழு நாள்கள் அரசாண்டான். அப்போது படைவீரர் பெலிஸ்தியருக்குச் சொந்தமான கிபத்தோனுக்கு எதிராகப் பாளையம் இறங்கியிருந்தனர்.

16சிம்ரி சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்றுவிட்டான் என்பதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டு, படைத்தலைவனாகிய ஓம்ரியை அன்றே பாளையத்திலிருந்து இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்கினர்.

17அப்போது ஓம்ரி கிபத்தோனிலிருந்து இஸ்ரயேலர் அனைவருடன் சேர்ந்து புறப்பட்டுப் போய்த் தீர்சாவை முற்றுகையிட்டான்.

18நகர் வீழ்ச்சியுற்றதைக் கண்டு, சிம்ரி அரண்மனையின் உட்கோட்டைக்குள் புகுந்தான். அந்த அரண்மனைக்குத் தீயிட்டு, தானும் அதில் மாண்டான்.

19ஏனெனில். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து, எரொபவாமின் வழியில் நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.

20சிம்ரியின் பிற செயல்களும் அவன் செய்த சூழ்ச்சியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

இஸ்ரயேல் அரசன் ஓம்ரி

21அப்போது இஸ்ரயேலின் மக்கள் இரு பகுதியாகப் பிரிந்தனர். ஒரு பகுதியினர் கீனத்தின் மகன் திப்னியையும் மறுபகுதியினர் ஓம்ரியையும் அரசனாக்க முயன்றனர்.

22கீனத்தின் மகன் திப்னியின் ஆள்களை விட ஓம்ரியின் ஆள்கள் வலிமை மிகுந்திருந்ததால், ஓம்ரி அரசனானான். திப்னி உயிரிழந்தான்.

23ஓம்ரி அரசனாகி இஸ்ரயேல்மீது பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதல் ஆறு ஆண்டுகள் அவன் திர்சாவில் இருந்து கொண்டு அரசாண்டான்.

24பின்னர், அவன் செமேர் என்பவனிடமிருந்து ‘சமாரியா’ என்ற மலையை ஏறத்தாழ எண்பது கிலோ எடையுள்ள வெள்ளிக்கு வாங்கினான். அம்மலையின் மீது நகர் ஒன்றைக் கட்டி முன்னாள் உரிமையாளனான செமேரின் பெயரையொட்டி அந்நகருக்குச் ‘சமாரியா’ என்று பெயரிட்டான்.

25ஓம்ரி ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் தனக்கு முன்பிருந்த எல்லாரையும் விட மிகவும் தீயவனாய் இருந்தான்.

26அவன் நெபாற்றின் மகன் எரொபவாமின் எல்லா வழிகளிலும் நடந்து, இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

27ஓம்ரியின் பிறசெயல்களும் அவனுடைய வீரச் செயல்களும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

28ஓம்ரி தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆகாபு அரசன் ஆனான்.

29யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

30ஓம்ரியின் மகன் ஆகாபு ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைத் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகுதியாய்ச் செய்தான்.

31நெபாற்றின் மகன் எரொபவாமின் வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னன் எத்பாகாலின் மகள் ஈசபேலை மணந்துகொண்டு பாகால் தெய்வத்தை வணங்கி வழிபடலானான்.

32மேலும், சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டி, அத்தெய்வத்துக்கு ஒரு பலிபீடமும் எழுப்பினான்.

33அதுவுமின்றி, ஆகாபு அசேராக் கம்பத்தை நிறுத்தி, தனக்கு முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்கள் எல்லாரையும்விட மிகுதியாக, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

34அவனது ஆட்சியில் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான் நூனின் மகன் யோசுவாமூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி ஈயேல் அதற்கு அடிக்கல் இட்டபோது தன் தலைமகன் அபிராமையும் அதன் வாயில்களை அமைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான்.


16:34 யோசு 6:26.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks