Home » சாலமோனின் ஞானம் அதிகாரம் – 14 – திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரம் – 14 – திருவிவிலியம்

சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1 மேலும், கடற்பயணம் செய்யும்

நோக்குடன்

கொந்தளிக்கும் அலை கடலைக்

கடக்கவிருக்கும் ஒருவர்

தம்மைத் தாங்கிச் செல்லும்

மரக்கலத்தைவிட

எளிதில் உடைபடும்

மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.

2செல்வம் சேர்க்கும் ஆவல்

அந்த மரக்கலத்தைக் கட்டத்

திட்டமிட்டது.

ஞானம் கைவினைஞராகச்

செயல்பட்டு

அதைக் கட்டி முடித்தது.

3ஆனால், தந்தையே

உமது பாதுகாப்பு

அதை இயக்கி வருகிறது;

ஏனெனில் கடலில்

அதற்கு ஒரு வழி அமைத்தீர்;

அலைகள் நடுவே

பாதுகாப்பான பாதை வகுத்தீர்.

4இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும்

நீர் காப்பாற்ற முடியும்

எனக் காட்டினீர்.

இதனால், திறமையற்றோர் கூடக்

கடலில் பயணம் செய்யமுடியும்.

5உமது ஞானத்தின் செயல்கள்

பயனற்றவை ஆகக்கூடா என்பது

உமது திருவுளம்.

எனவே மனிதர்கள்

மிகச் சிறிய மரக்கட்டையிடம்

தங்கள் உயிரையே ஒப்படைத்து,

கொந்தளிக்கும் கடலில்

அதைத் தெப்பமாகச் செலுத்தி,

பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.

6ஏனெனில் தொடக்க காலத்தில் கூட,

செருக்குற்ற அரக்கர்கள்

அழிந்தபோது,

உலகின் நம்பிக்கை

ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது.

உமது கை வழிகாட்ட,

அந்நம்பிக்கை

புதிய தலைமுறைக்கு வித்திட்டது.

7நீதியை உருவாக்கும் மரம்

வாழ்த்துக்குரியது.

8ஆனால் கைவேலைப்பாடாகிய

சிலை சபிக்கப்பட்டது.

அதைச் செய்தவரும்

அவ்வாறே சபிக்கப்பட்டவர்.

ஏனெனில் அவரே அதைச் செய்தார்.

அது அழியக்கூடியதாயிருந்தும்,

தெய்வம் என்று அழைக்கப்பட்டது.

9இறைப்பற்றில்லாதோரையும்

அவர்களது இறைப்பற்றின்மையையும்

கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.

10ஏனெனில் செய்தவரோடு

அவர் செய்த வேலையும்

ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.

11எனவே வேற்றினத்தாரின்

சிலைகளும்

தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்;

ஏனெனில்,

கடவுளின் படைப்புகளேயாயினும்,

அவை மிக அருவருப்பானவையாக

மாறிவிட்டன;

அவை மனிதரின்

ஆன்மாக்களுக்கு இடறல்கள்;

அறிவிலிகளின்

கால்களுக்குக் கண்ணிகள்.

சிலைவழிபாட்டின் தொடக்கம்

12சிலைகள் செய்யத் திட்டமிட்டதே

விபசாரத்தின்* தொடக்கம்.

அவற்றைக் கண்டுபிடித்ததே

வாழ்வின் அழிவு.

13அவை தொடக்கமுதல்

இருந்ததில்லை;

என்றென்றும் இருக்கப்

போவதுமில்லை.

14மனிதரின் வீண்பெருமையினால்

அவை உலகில் நுழைந்தன;

எனவே அவை விரைவில் முடியும்

எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

15இளமையில் தம் மகன் இறந்ததால்,

ஆறாத்துயரில் மூழ்கியிருந்த

தந்தை ஒருவர் விரைவில்

தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட

அவனது சிலையைச் செய்தார்.

முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப்

பின்பு தெய்வப் பிறவியாகக்

கொண்டாடினார்.

மறைவான சமயச் சடங்குகளையும்

வழிபாடுகளையும் வழிவழியாகச்

செய்யுமாறு தம் பணியாளரைப்

பணித்தார்.

16இந்தத் தீய பழக்கம்

காலப் போக்கில் வேரூன்றி

சட்டம்போலப்

பின்பற்றப்படலாயிற்று.

17மன்னர்களின் ஆணைப்படி

மக்கள் சிலைகளை

வணங்கலானார்கள்.

தாங்கள்

தொலையில் வாழ்ந்துவந்த

காரணத்தால்,

தங்கள் மன்னரை

நேரில் பெருமைப்படுத்த

முடியாத மக்கள்

தொலையிலிருந்தே

அவருடைய உருவத்தைக்

கற்பனை செய்தார்கள்;

அதைக் காணக்கூடிய

சிலையாக வடித்து அதற்கு

வணக்கம் செலுத்தினார்கள்;

இவ்வாறு, தொலைவில் இருந்தவரை

எதிரில் இருந்தவர் போலக் கருதி,

தங்கள் ஆர்வத்தில் அவரை

மிகைப்படப் புகழ்ந்தார்கள்.

18மன்னரை அறியாதவர்கள்

நடுவிலும்

‘மன்னர் வழிபாட்டைப்’ பரப்ப,

சிற்பியின் புகழார்வம்

அவர்களைத் தூண்டிற்று.

19ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை

மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன்

தம் திறமையெல்லாம் கூட்டி,

அச்சிலையை மிக அழகாகச்

செய்திருக்கலாம்.

20அவருடைய வேலைப்பாட்டின்

அழகில் மயங்கிய மக்கள்திரள்

சற்றுமுன்பு வெறும் மனிதராகப்

போற்றிய ஒருவரைப்

பின்னர் வழிபாட்டுக்குரியவராகக்

கருதியிருக்கலாம்.

21இது மன்பதையே வீழ்த்தும்

ஒரு சூழ்ச்சி ஆயிற்று.

ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ

கொடுங்கோன்மைக்கோ ஆளாகி,

கடவுளுக்கே உரிய பெயரைக்

கற்களுக்கும் மரங்களுக்கும்

கொடுத்தனர்.

சிலைவழிபாட்டின் விளைவுகள்

22கடவுளைப்பற்றிய அறிவில்

மனிதர்கள் தவறியது மட்டுமன்றி,

அறியாமையால் பெரும்

போராட்டத்தில் வாழ்கிறார்கள்;

இத்தகைய தீமைகளை

‘அமைதி’ என்று அழைக்கிறார்கள்.

23புகுமுகச் சடங்குகளில்

அவர்கள் குழந்தைகளைப்

பலியிட்டாலும்,

மறைவான சமயச் சடங்குகளைக்

கொண்டாடினாலும்,

வேற்றினப் பழக்கவழக்கங்கள்

கொண்ட வெறியூட்டும்

களியாட்டங்களை நடத்தினாலும்,

24தங்கள் வாழ்வையும்

திருமணத்தையும்

மாசுபடாமல் காப்பதில்லை.

அவர்கள் நயவஞ்சமாக

ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்;

அல்லது விபசாரத்தால்

ஒருவர் மற்றவருக்குத்

துயர் விளைவிக்கிறார்கள்.

25இதன் விளைவாக எங்கும்

ஒரே குழப்பம்,

குருதி, கொலை, களவு, வஞ்சகம்,

ஊழல், பற்றுறுதியின்மை, கிளர்ச்சி, பொய்யாணை.

26நல்லவைப் பற்றிய குழப்பம்,

செய்நன்றி மறத்தல்,

ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல்,

இயல்புக்கு மாறான

காமவேட்கை,

மணவாழ்வில் முறைகேடு,

விபசாரம், வரம்புமீறிய

ஒழுக்கக்கேடு!

27பெயரைக்கூடச் சொல்லத் தகாத

சிலைகளின் வழிபாடே

எல்லாத் தீமைகளுக்கும் முதலும்

காரணமும் முடிவும் ஆகும்.

28அவற்றை வணங்குவோர்

மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர்

ஆகின்றனர்;

அல்லது பொய்யை

இறை வாக்காக உரைக்கின்றனர்.

அல்லது நேர்மையாக வாழ்வதில்லை;

அல்லது எளிதாகப்

பொய்யாணையிடுகின்றனர்.

29உயிரற்ற சிலைகள் மீது

நம்பிக்கை வைப்பதால்,

அவர்களை பொய்யாணையிட்டாலும்

தங்களுக்குத் தீங்கு நேரிடும் என

எதிர்பார்ப்பதில்லை.

30இரு காரணங்களுக்காக அவர்கள்

நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்;

சிலைகளுக்குத் தங்களை

அர்ப்பணித்ததன்மூலம்

கடவுளைப்பற்றிய தவறான எண்ணம்

கொண்டிருந்தார்கள்;

தூய்மையை இகழ்ந்து,

வஞ்சகத்தோடு நீதிக்கு

முரணாக ஆணையிட்டார்கள்.

31ஏனெனில் எவற்றைக் கொண்டு

மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ

அவற்றின் ஆற்றல்

அவர்களைத் தண்டிப்பதில்லை.

மாறாக, பாவிகளுக்குரிய

நீதித் தீர்ப்பே

நெறிகெட்டோரின் குற்றங்களை

எப்பொழுதும் தண்டிக்கிறது.


13:10-14:31 எசா 44:9-20; எரே 10:1-16; பாரூ 6:3-72.


14:12 உடன்படிக்கை வழியாக இறைவனுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே மணமகன் – மணமகள் உறவு மலர்ந்தது. இதனால் இஸ்ரயேல் தன் இறைவனைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை நாடிச் சென்றது விபசாரமாகக் கருதப்பட்டது.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks