Home » திருப்பாடல்கள் அதிகாரம் – 50 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 50 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

உண்மை வழிபாடு
(ஆசாபின் புகழ்ப்பா)

1தெய்வங்களுக்கெல்லாம்

இறைவனாம்

ஆண்டவர் பேசினார்;

கதிரவன் எழும் முனையினின்று

மறையும் முனைவரை பரந்துள்ள

உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.

2எழிலின் நிறைவாம் சீயோனின்று,

ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.

3நம் கடவுள் வருகின்றார்;

மௌனமாய் இருக்கமாட்டார்;

அவருக்கு முன்னே,

சுட்டெரிக்கும் தழல் நெருப்பு!

அவரைச் சுற்றிலும்,

கடுமையான புயற்காற்று!

4உயர் வானங்களையும் பூவுலகையும்

அவர் அழைத்து,

தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.

5‛பலியிட்டு என்னோடு

உடன்படிக்கை செய்துகொண்ட

என் அடியார்களை

என்முன் ஒன்று கூட்டுங்கள்.’

6வான்வெளி அவரது நீதியை

எடுத்தியம்பும்;

ஏனெனில், கடவுள்தாமே

நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)

7என் மக்களே, கேளுங்கள்;

நான் பேசுகின்றேன்;

இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச்

சான்றுகூறப் போகின்றேன்;

கடவுளாகிய நானே உன் இறைவன்;

8நீங்கள் கொண்டுவரும்

பலிகளை முன்னிட்டு

நான் உங்களைக் கண்டிக்கவில்லை;

உங்கள் எரிபலிகள் எப்போதும்

என் முன்னிலையில் உள்ளன.

9உங்கள் வீட்டின் காளைகளையோ,

உங்கள் தொழுவத்தின்

ஆட்டுக்கிடாய்களையோ,

நான் ஏற்றுக்கொள்வதில்லை.

10ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம்

என் உடைமைகள்;

ஓராயிரம் குன்றுகளில் மேயும்

கால்நடைகளும் என்னுடையவை.

11குன்றத்துப் பறவை அனைத்தையும்

நான் அறிவேன்;

சமவெளியில் நடமாடும் யாவும்

என்னுடையவை.

12எனக்குப் பசியெடுத்தால்

நான் உங்களைக் கேட்கப் போவதில்லை;

ஏனெனில், உலகும்

அதில் நிறைந்துள்ள யாவும்

என்னுடையவையே.

13எருதுகளின் இறைச்சியை

நான் உண்பேனோ?

ஆட்டுக்கிடாய்களின்

குருதியைக் குடிப்பேனோ?

14கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்;

உன்னதர்க்கு உங்கள்

நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.

15துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;

உங்களைக் காத்திடுவேன்;

அப்போது, நீங்கள் என்னை

மேன்மைப்படுத்துவீர்கள்.

16ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து

இவ்வாறு கூறுகின்றார்;

‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு

உங்களுக்கு என்ன தகுதி?

என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு

உங்களுக்கு என்ன அருகதை?

17நீங்களோ ஒழுங்குமுறையை

வெறுக்கின்றீர்கள்;

என் கட்டளைகளைத்

தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.

18திருடர்களைக் கண்டால்

அவர்களோடு விருப்புடன்

சேர்ந்து கொள்கின்றீர்கள்;

கற்பு நெறி தவறியவர்களோடும்

உங்களுக்கு உறவு உண்டு.

19உங்கள் வாய் உரைப்பது தீமையே;
உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.

20உங்கள் சகோதரரைப் பற்றி

இழிவாகப் பேசுகின்றீர்கள்;

உங்கள் தாயின் மக்களைப்பற்றி

அவதூறு பேசுகின்றீர்கள்.

21இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,

நான் மௌனமாய் இருந்தேன்;

நானும் உங்களைப் போன்றவர் என

எண்ணிக் கொண்டீர்கள்;

ஆனால், இப்பொழுது

உங்களைக் கண்டிக்கின்றேன்;

உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்

ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.

22கடவுளை மறந்தோரே!

இதைக் கண்டுணருங்கள்;

இல்லையேல், நான் உங்களைப்

பீறிப் போடுவேன்;

உங்களை விடுவிக்க யாரும் இரார்.

23நன்றிப்பலி செலுத்துவோர்

என்னை மேன்மைப்படுத்துவர்.

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்

கடவுளாம் நான் அருளும்

மீட்பைக் கண்டடைவர்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks