Home » திருப்பாடல்கள் அதிகாரம் – 104 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 104 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

படைப்பின் மேன்மை

1என் உயிரே!

ஆண்டவரைப் போற்றிடு!

என் கடவுளாகிய ஆண்டவரே!

நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!

நீர் மாண்பையும் மாட்சியையும்

அணிந்துள்ளவர்.

2பேரொளியை

ஆடையென அணிந்துள்ளவர்;

வான்வெளியைக்

கூடாரமென விரித்துள்ளவர்;

3நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்

அடித்தளத்தை அமைத்துள்ளவர்;

கார் முகில்களைத்

தேராகக் கொண்டுள்ளவர்;

காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!

4காற்றுகளை உம்

தூதராய் நியமித்துள்ளவர்;

தீப்பிழம்புகளை உம்

பணியாளராய்க் கொண்டுள்ளவர்.

5நீவீர் பூவுலகை அதன்

அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;

அது என்றென்றும் அசைவுறாது.

6அதனை ஆழ்கடல்

ஆடையென மூடியிருந்தது;

மலைகளுக்கும் மேலாக

நீர்த்திரள் நின்றது;

7நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது;

நீவீர் இடியென முழங்க,

அது திகைப்புற்று ஓடியது;

8அது மலைகள்மேல் ஏறி,

பள்ளத்தாக்குகளில் இறங்கி,

அதற்கெனக் குறித்த இடத்தை

அடைந்தது;

9அது மீறிச்செல்லாதவாறு

அதற்கு எல்லை வகுத்தீர்;

பூவுலகை அது மீண்டும்

மூடிவிடாதபடி செய்தீர்;

10பள்ளத்தாக்குகளில்

நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;

அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;

11அவை காட்டு விலங்குகள்

அனைத்திற்கும் குடிக்கத் தரும்;

காட்டுக் கழுதைகள்

தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;

12நீருற்றுகளின் அருகில்

வானத்துப் பறவைகள்

கூடுகட்டிக் கொள்கின்றன;

அவை மரக்கிளைகளினின்று

இன்னிசை இசைக்கின்றன;

13உம் மேலறைகளினின்று

மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;

உம் செயல்களின் பணியால்

பூவுலகம் நிறைவடைகின்றது.

14கால்நடைகளுக்கெனப்

புல்லை முளைக்கச் செய்கின்றீர்;

மானிடருக்கெனப் பயிர்வகைகளை

வளரச் செய்கின்றர்;

இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு

உணவு கிடைக்கச் செய்கின்றீர்;

15மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத்

திராட்சை இரசமும்,

முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும்

மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட

அப்பமும் அளிக்கின்றீர்.

16ஆண்டவரின் மரங்களுக்கு —

லெபனோனில் அவர் நட்ட

கேதுரு மரங்களுக்கு —

நிறைய நீர் கிடைக்கின்றது.

17அங்கே பறவைகள்

கூடுகள் கட்டுகின்றன;

தேவதாரு மரங்களில்

கொக்குகள் குடியிருக்கின்றன.

18உயர்ந்த மலைகள்

வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;

கற்பாறைகள்

குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.

19காலங்களைக் கணிக்க

நிலவை நீர் அமைத்தீர்;

ஆதவன் தான் மறையும்

நேரத்தை அறிவான்.

20இருளை நீர் தோன்றச் செய்யவே,

இரவு வருகின்றது;

அப்போது, காட்டு விலங்குகள்

அனைத்தும் நடமாடும்.

21இளஞ்சிங்கங்கள் இரைக்காகக்

கர்ச்சிக்கின்றன;

அவை இறைவனிடமிருந்து

தங்கள் உணவைத் தேடுகின்றன.

22கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று

தம் குகைகளுக்குள்

படுத்துக்கொள்கின்றன.

23அப்பொழுது மானிடர்

வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;

அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.

24ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்

எத்தனை எத்தனை!

நீர் அனைத்தையும்

ஞானத்தோடு செய்துள்ளீர்!

பூவுலகம்

உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

25இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;

அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக

வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.

26அங்கே கப்பல்கள் செல்கின்றன;

அங்கே துள்ளிவிளையாட

லிவியத்தானைப் படைத்தீர்!

27தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று

இவையெல்லாம்

உம்மையே நம்பியிருக்கின்றன.

28நீர் கொடுக்க,

அவை சேகரித்துக் கொள்கின்றன;

நீர் உமது கையைத் திறக்க,

அவை நலன்களால் நிறைவுறுகின்றன.

29நீர் உமது முகத்தை மறைக்க,

அவை திகிலடையும்;

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,

அவை மாண்டு மறுபடியும்

புழுதிக்கே திரும்பும்.

30உமது ஆவியை நீர் அனுப்ப,

அவை படைக்கப்பெறுகின்றன;

மண்ணகத்தின் முகத்தைப்

புதுப்பிக்கின்றீர்.

31ஆண்டவரின் மாட்சி

என்றென்றும் நிலைத்திருப்பதாக!

அவர் தம் செயல்களைக் குறித்து

மகிழ்வாராக!

32மண்ணுலகின்மீது

அவர் தம் பார்வையைத் திருப்ப,

அது நடுங்கும்; மலைகளை அவர் தொட,

அவை புகை கக்கும்.

33நான் வாழும் நாளெல்லாம்

ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;

என்னுயிர் உள்ளவரையிலும்

என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.

34என் தியானப் பாடல்

அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!

நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.

35பாவிகள் பூவுலகினின்று

ஒழிந்து போவார்களாக!

தீயோர்கள் இனி

இல்லாது போவார்களாக!

என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!

அல்லேலூயா!


104:4 எபி 1:7.
104:26 யோபு 41:1; திபா 74:14; எசா 27:1.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks