யோபு அதிகாரம் – 40 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1பின்பு யோபைப் பார்த்து

ஆண்டவர் கூறினார்:

2குற்றம் காண்பவன்,

எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?

கடவுளோடுவாதாடுபவன்

விடையளிக்கட்டும்.

3யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:

4இதோ! எளியேன் யான்

இயம்புதற்குண்டோ? என் வாயைக்

கையால் பொத்திக் கொள்வேன்.

5ஒருமுறை பேசினேன்;

மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;

இனிப் பேசவேமாட்டேன்.

கடவுளின் இரண்டாம் சொற்பொழிவு

6ஆண்டவர் சூறாவளியினின்று

யோபுக்கு அருளிய பதில்:

7வீரனைப்போல்

இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;

வினவுவேன் உன்னிடம்;

விடையெனக்கு அளிப்பாய்.

8என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?

உன்னைச் சரியெனக் காட்ட

என்மீது குற்றம் சாட்டுவாயா?

9இறைவனுக்கு உள்ளதுபோல்

உனக்குக் கையுண்டோ?

அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?

10சீர் சிறப்பினால்

உன்னை அணி செய்துகொள்;

மேன்மையையும், மாண்பினையும்

உடுத்திக்கொள்.

11கொட்டு உன் கோபப் பெருக்கை!

செருக்குற்ற ஒவ்வொருவரையும்

நோக்கிடு; தாழ்த்திடு!

12செருக்குற்ற எல்லாரையும்

நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை

அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!

13புழுதியில் அவர்களை

ஒன்றாய்ப் புதைத்திடு!

காரிருளில் அவர் முகங்களை மூடிடு.

14அப்பொழுது, உனது வலக்கை

உன்னைக் காக்குமென்று

நானே ஒத்துக்கொள்வேன்.

பெகிமோத்து

15இதோ பார், உன்னைப் படைத்ததுபோல்

நான் உண்டாக்கிய பெகிமோத்து

காளைபோல் புல்லைத் தின்கின்றது.

16இதோ காண்,

அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;

அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.

17அது தன் வாலைக்

கேதுருமரம்போல் விரைக்கும்;

அதன் தொடை நரம்புகள்

கயிறுபோல் இறுகியிருக்கும்;

18அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;

அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.

19இறைவனின் படைப்புகளில்

தலையாயது அதுவே! படைத்தவரே

அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.

20மலைகள் அதற்குப்

புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;

விலங்குகள் எல்லாம்

விளையாடுவதும் அங்கேதான்.

21அது நிழற்செடிக்கு அடியிலும்

நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும்

படுத்துக் கிடக்கும்.

22அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;

ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.

23ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;

அதன் முகத்தே யோர்தான் மோதினும்

அசைவுறாது.

24அதன் கண்காண அதனைக்

கட்டமுடியுமோ? கொக்கியால்

அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?

Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post