Home » யோபு அதிகாரம் – 21 – திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 21 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

நிகழ்வன எதிர்மாறாய் இருத்தல்

1அதற்கு யோபு கூறிய மறுமொழி:

2நான் கூறுவதைக் கவனமாய்க்

கேளுங்கள்; இதுவே நீங்கள்

எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.

3பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்;

நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.

4என்னைப் பொறுத்த மட்டில்,

நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?

இல்லையேல் நான் ஏன்

பொறுமை இழக்கக்கூடாது?

5என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்;

கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.

6இதை நான் நினைக்கும்பொழுது

திகிலடைகிறேன்;

நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.

7தீயோர் வாழ்வதேன்?

நீண்ட ஆயுள் பெறுவதேன்?

. வலியோராய் வளர்வதேன்?

8அவர்களின் வழிமரபினர்

அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்;

அவர்களின் வழித்தோன்றல்கள்

அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.

9அவர்களின் இல்லங்களில்

அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.

கடவுளின் தண்டனை

அவர்கள்மேல் விழவில்லை.

10அவர்களின் காளைகள் பொலிகின்றன.

ஆனால் பிசகுவதில்லை;

அவர்களின் பசுக்கள் கருவுறும்;

ஆனால் கரு கலைவதில்லை.

11மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை

வெளியனுப்புகின்றனர்; அவர்களின்

குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.

12அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப்

பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.

13அவர்கள் மகிழ்வில்

தம் நாள்களைக் கழிக்கின்றனர்;

அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.

14அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்;

‘எம்மை விட்டு அகலும்; ஏனெனில்,

உமது வழிகளை அறிந்து கொள்ள

நாங்கள் விரும்பவில்லை;’

15எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய?

அவரை நோக்கி நாங்கள்

மன்றாடுவதால் என்ன பயன்?

16இதோ! அவர்களின் வளமை

அவர்களின் கையில் இல்லை;

எனவே, தீயோரின் ஆலோசனை

எனக்குத் தொலையிலிருப்பதாக!

17எத்தனைமுறை தீயோரின் ஒளி

அணைகின்றது? அழிவு

அவர்கள்மேல் வருகின்றது?

கடவுள் தம் சீற்றத்தில்

வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.

18அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்;

சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.

19அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின்

பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்?

அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்;

அவர்களும் அதை உணர்வர்.

20அவர்களின் அழிவை அவர்களின்

கண்களே காணட்டும்;

எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை

அவர்கள் குடிக்கட்டும்.

21அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,

அவர்களது இல்லத்தில்

அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?

22இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்?

ஏனெனில், அவரே

உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.

23சிலர் வளமையோடும் வலிமையோடும்

நிறைவோடும் முழு அமைதியோடும்

சாகின்றனர்.

24அவர்களின் தொடைகள்

கொழுப்பேறி உள்ளன; அவர்களின்

எலும்புகளின் சோறு உலரவில்லை.

25வேறு சிலர், கசந்த உள்ளத்துடன்

இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;

26புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்;

புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.

27இதோ! உம் எண்ணங்களையும்

எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும்

நான் அறிவேன்.

28ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்;

‘கொடுங்கோலனின் இல்லம் எங்கே?

கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?’

29வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா?

அவர்கள் அறிவித்ததை

நீங்கள் கேட்கவில்லையா?

30தீயோர் அழிவின் நாளுக்கென

விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில்

அவர்கள் விடுவிக்கப்படுவாரா?

31யார் அவர்களின் முகத்துக்கு எதிரே

அவர்களின் போக்கை உரைப்பார்?

யார் அவர்களின் செயலுக்கேற்ப கொடுப்பார்?

32இருப்பினும், கல்லறைக்கு

அவர்கள் கொண்டுவரப்படுவர்;

அவர்களின் சமாதிக்குக்

காவல் வைக்கப்படும்.

33பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு

இனிமையாய் இருக்கும்;

மாந்தர் அனைவரும் அவர்களைப்

பின்தொடர்வர்; அவர்களின்

முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.

34அப்படியிருக்க, வெற்றுமொழியால்

நீர் என்னைத் தேற்றுவதெப்படி?

உமது மறுமொழி முற்றிலும் பொய்யே!

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks