Home » எரேமியா அதிகாரம் – 48 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 48 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

மோவாபுக்கு எதிராக

1மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

நெபோவுக்கு ஐயோ கேடு!

அது பாழடைந்து கிடக்கிறது.

கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்

கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,

தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

2போவாபின் புகழ் மங்கிவிட்டது;

எஸ்போனில் அதற்குத்

தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:

‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்

இல்லாதவாறு சிதைப்போம்’.

மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;

வாள் உன்னைத் துரத்தி வரும்.

3ஓரொனாயிமினின்று

கூக்குரல் ஒலிக்கிறது.

‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது.

4மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;

அதன் குழந்தைகளின்

அழுகுரல் கேட்கின்றது.

5லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்

அவர்கள் அழுதுகொண்டே

போகிறார்கள்;

ஓரொனாயிமுக்கு

இறங்கிச் செல்லும் வழியில்

அழிவின் புலம்பல்* கேட்கிறது.

6தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்

பாதுகாத்துக்கொள்ளுங்கள்;

பாலை நிலத்துக்

காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.

7உன் கோட்டைகளையும்*

கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;

நீயும் கைப்பற்றப்படுவாய்.

கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;

அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்

அதனோடு செல்வார்கள்.

8‘அழிப்போன்’

ஒவ்வொரு நகருக்கும் வருவான்.

எந்த நகரும் தப்பாது.

ஆண்டவர் சொல்லியிருப்பது போல்

பள்ளத்தாக்குகள் பாழாகும்;

சமவெளிகள் அழிக்கப்படும்.

9மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;

அது பறந்தோடட்டும்;

அதன் நகர்கள் பாழாக்கப்படும்;

அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.

10ஆண்டவர்தம் அலுவலை

அக்கறையின்றிச் செய்பவன்

சபிக்கப்பட்டவன்;

குருதி சிந்தாமல்

தன் வாளை வைத்திருப்பவனும்

சபிக்கப்பட்டவனே.

11மோவாபு இளமைமுதல்

அமைதியில் வாழ்ந்துவருகிறது;

மண்டியை அடியில் கொண்ட

பழந் திராட்சை இரசம் அது

. அது கலத்தினின்று கலத்திற்கு

மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;

அதன் சுவை குன்றவில்லை;

அதன் நறுமணம் மாறவில்லை.

12எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.

13இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.

14‘நாங்கள் படைவீரர்கள்;

போரில் வல்லவர்கள்’ என்று

நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?

15“மோவாபையும் அதன் நகர்களையும்

அழிப்பவன் வந்துவிட்டான்;

அதன் சிறந்த இளைஞர்கள்

கொலைக் களத்திற்குப்

போய் விட்டார்கள்,” என்கிறார்

படைகளின் ஆண்டவர் என்னும்

பெயருடைய மன்னர்.

16மோவாபின் அழிவு

அண்மையில் உள்ளது;

தீங்கு அதை நோக்கி

விரைந்து வருகிறது.

17அதைச் சுற்றியிருப்போரே,

நீங்கள் அனைவரும் அதற்காகத்

துக்கம் கொண்டாடுங்கள்.

அதன் புகழை அறிந்திருப்போரே,

நீங்கள் அனைவரும்

‘வலிமைமிக்க செங்கோல்

முறிந்தது எங்ஙனம்?

மேன்மைமிக்க கோல்

உடைந்தது எவ்வாறு?’

என்று கேளுங்கள்.

18மகள் தீபோனின் குடிமகனே,

உன் மேன்மையை விட்டு இறங்கி வா;

வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.
மோவாபை அழிப்பவன்

உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;

உன் கோட்டைகளை

அவன் தகர்த்து விட்டான்.

19அரோயேரின் குடிமகனே!

நீ சாலை ஓரமாய் நின்று கவனி;

ஓட்டம்பிடிக்கிறவனையும்

தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,

‘என்ன நடந்தது?’ என்று கேள்.

20மோவாபு அழிக்கப்பட்டுச்

சிறுமைக்குள்ளானது;

அழுது புலம்புங்கள்;

கூக்குரலிடுங்கள்;

மோவாபு பாழடைந்துவிட்டது என

அர்னோனில் அறிவியுங்கள்.

21சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து,

22தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம்,

23கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,

24கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.

25மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.

26மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும்.

27இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?

28மோவாபின் குடிமக்களே,

நகர்களை விட்டு வெளியேறுங்கள்;

பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.

பாறையின் இடுக்குகளில்

கூடுகட்டி வாழும்

புறாவைப் போல் இருங்கள்.

29மோவாபின் செருக்கைப் பற்றி

நாங்கள் கேள்வியுற்றோம்;

பெரிதே அதன் இறுமாப்பு!

அதன் ஆணவம், செருக்கு,

அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்

கேள்வியுற்றோம்.

30அதன் திமிரை நான் அறிவேன்,

என்கிறார் ஆண்டவர்.

அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;

அதன் செயல்கள் யாவும் பொய்.

31மோவாபை முன்னிட்டு

நான் ஓலமிடுவேன்;

மோவாபு முழுவதையும் குறித்து

அலறியழுவேன்;

கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்

புலம்புவேன்.

32சிப்மாவின் திராட்சைக் கொடியே,

யாசேருக்காக அழுவதைவிட

அதிகமாய் உனக்காக அழுவேன்.

உன் கொடிகள்

கடல் வரை படர்ந்துள்ளன;

யாசேர் கடலை எட்டியுள்ளன.

கோடைப் பழங்கள்மீதும்

திராட்சைப் பழங்கள்மீதும்

‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான்.

33செழிப்பான மோவாபு நாட்டினின்று

மகிழ்ச்சியும், அக்களிப்பும்

அகற்றப்பட்டுவிட்டன;

திராட்சை ஆலைகளில்

இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;

மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்

எவனும் இலலை;

மகிழ்ச்சியின் ஆரவாரம்

அங்கு எழுவதில்லை.

34எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.

35மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.

36எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.

37அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.

38மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.

39இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.

40ஆண்டவர் கூறுவது இதுவே;

ஒருவன் கழுகைப்போல்

பாய்ந்து வருவான்;

மோவாபின்மீது

தன் இறக்கைகளை விரிப்பான்.

41நகர்கள் பிடிபடும்;

கோட்டைகள் கைப்பற்றப்படும்.

அந்நாளில் மோவாபிய

படைவீரர்களின் இதயம்

பேறுகாலப் பெண்ணின்

இதயத்தைப்போல் துடிக்கும்.

42மோவாபு அழிக்கப்படும்;

இனி அது ஒரு மக்களினமாய் இராது.

அது ஆண்டவருக்கு எதிராகப்

பெருமை அடித்துக் கொண்டது.

43மோவாபின் மகனே,

திகிலும் படுகுழியும் கண்ணியுமே

உன்முன் இருக்கின்றன,

என்கிறார் ஆண்டவர்.

44திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்

படுகுழியில் விழுவான்;

படுகுழியினின்று வெளியே வருபவன்

கண்ணியில் மாட்டிக்கொள்வான்.

அவர்களுடைய தண்டனைக் காலத்தில்

இவற்றை மோவாபின்மீது

வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.

45தப்பியோடுவோர்

எஸ்போனின் நிழலில்

வலுவிழந்து நிற்கின்றனர்;

எஸ்போனிலிருந்து

நெருப்பு கிளம்பிற்று;

சீகோனிலிருந்து

தீப்பிழம்பு புறப்பட்டது;

மோவாபின் நெற்றியை

அது விழுங்கிற்று;

கலக்காரரின் உச்சந்தலையை

அது பொசுக்கிற்று.

46மோவாபே, உனக்கு ஐயோ கேடு!

கெமோசின் மக்கள்

அழிந்துபோயினர்;

உன் புதல்வர்

நாடு கடத்தப்பட்டனர்;

உன் புதல்வியரும்

நாடுகடத்தப்பட்டனர்.

47ஆயினும், இறுதி நாள்களில்

அடிமைத்தனத்தினின்று

மோவாபை நான்

திரும்பக் கொணர்வேன்,

என்கிறார் ஆண்டவர்.

மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு

இத்துடன் முற்றிற்று.


48:1-47 எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.


48:5 ‘புலம்பலின் துயரம்’ என்பது எபிரேய பாடம்.
48:7 ‘செயல்கள்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks