Home » எசாயா அதிகாரம் – 58 – திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 58 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

உண்மையான உண்ணா நோன்பு

1பேரொலி எழுப்பிக் கூப்பிடு,

நிறுத்திவிடாதே;

எக்காளம் முழங்குவது போல்

உன் குரலை உயர்த்து;

என் மக்களுக்கு

அவர்களின் வன்செயல்களையும்,

யாக்கோபின் குடும்பத்தாருக்கு

அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.

2அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும்

மக்களினம்போலும்,

தங்கள் கடவுளின் கட்டளையைக்

கடைப்பிடிப்போர் போலும்

நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்;

என் நெறிமுறைகள் பற்றிய

அறிவை நாடுகின்றார்கள்;

நேர்மையான நீதித்தீர்ப்புகளை

என்னிடம் வேண்டுகின்றார்கள்;

கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.

3‘நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது,

நீர் எங்களை நோக்காதது ஏன்?

நாங்கள் எங்களைத்

தாழ்த்திக் கொண்டபோது

நீர் எங்களைக் கவனியாதது ஏன்?

என்கிறார்கள்.

நீங்கள் நோன்பிருக்கும் நாளில்

உங்கள் ஆதாயத்தையே

நாடுகின்றீர்கள்;

உங்கள் வேலையாள்கள் அனைவரையும்

ஒடுக்குகின்றீர்கள்.

4இதோ, வழக்காடவும்,

வீண்சண்டையிடவும்,

கொடும் கையால் தாக்கவுமே

நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்!

இன்றுபோல் நீங்கள்

உண்ணா நோன்பிருந்தால்

உங்கள் குரல் உன்னதத்தில்

கேட்கப்படாது.

5ஒருவன் தன்னை

ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான்

உண்ணாநோன்பின் நாளாகத்

தெரிந்து கொள்வது?

ஒருவன் நாணலைப் போல்

தன் தலையைத் தாழ்த்திச்

சாக்கு உடையையும் சாம்பலையையும்

அணிந்து கொள்வதா

எனக்கு ஏற்ற நோன்பு?

இதையா நீங்கள் நோன்பு என்றும்

ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும்

அழைக்கின்றீர்கள்?

6கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்,

நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்

ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து

அனுப்புவதும், எவ்வகை

நுகத்தையும் உடைப்பதும் அன்றோ

நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

7பசித்தோர்க்கு உங்கள் உணவைப்

பகிர்ந்து கொடுப்பதும்

தங்க இடமில்லா வறியோரை

உங்கள் இல்லத்திற்கு

அழைத்து வருவதும்,

உடையற்றோரைக் காணும்போது

அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்

உங்கள் இனத்தாருக்கு உங்களை

மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ

நான் விரும்பும் நோன்பு!

8அப்பொழுது உன் ஒளி

விடியல் போல் எழும்;

விரைவில் உனக்கு

நலமான வாழ்வு துளிர்க்கும்;

உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;

ஆண்டவரின் மாட்சி

உனக்குப் பின்சென்று காக்கும்.

9அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்;

அவர் உனக்குப் பதிலளிப்பார்;

நீ கூக்குரல் இடுவாய்;

அவர் ‘இதோ! நான்’ என

மறுமொழி தருவார்.

உன்னிடையே இருக்கும்

நுகத்தை அகற்றிவிட்டு,

சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும்

பொல்லாதன பேசுவதையும்

நிறுத்திவிட்டு,

10பசித்திருப்போருக்காக

உன்னையே கையளித்து,

வறியோரின் தேவையை

நிறைவு செய்வாயானால்,

இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்;

இருண்ட உன் நிலை

நண்பகல் போல் ஆகும்.

11ஆண்டவர் தொடர்ந்து

உன்னை வழிநடத்துவார்;

வறண்ட சூழலில்

உனக்கு நிறைவளிப்பார்;

உன் எலும்புகளை வலிமையாக்குவார்;

நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும்,

ஒருபோதும் வற்றாத

நீரூற்றுபோலும் இருப்பாய்.

12உன் மக்கள் பண்டை நாளிலிருந்து

பாழடைந்து கிடப்பவற்றைக்

கட்டியெழுப்புவர்;

தலைமுறை தலைமுறையாக உள்ள

அடித்தளங்களின் மேல்

கட்டியெழுப்புவாய்;

தகர்ந்த மதிலைத்

திரும்பக் கட்டுபவன் என்றும்

குடியிருப்பதற்குத் தெருக்களைச்

சீர்படுத்துபவன் என்றும்

பெயர் பெறுவாய்.

ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதன் நற்பயன்

13ஓய்வுநாளின் முறைமைகளினின்று

விலகிச் செல்லாது,

என் புனித நாளில்

உன் விருப்பம் போல் செய்யாதிருந்து,

ஓய்வு நாள் ‘மகிழ்ச்சியின் நாள்’ என்றும்

‘ஆண்டவரின் மேன்மைமிகு

புனித நாள்’ எனவும் சொல்லி

அதற்கு மதிப்புத் தந்து,

உன் சொந்த வழிகளில் செல்லவோ

உன் சொந்த ஆதாயத்தை நாடவோ

வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ

செய்யாதிருந்தால்,

14அப்பொழுது, ஆண்டவருக்கு

ஊழியம் புரியும்

மகிழ்ச்சியைப் பெறுவாய்;

நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில்

உன்னை வலம்வரச் செய்வேன்;

உன் மூதாதையாகிய யாக்கோபின்

உரிமைச் சொத்தின் மூலம்

உனக்கு உணவளிப்பேன்;

ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.


58:7 மத் 25:35.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks