Home » எசேக்கியல் அதிகாரம் – 30 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரம் – 30 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

‘எகிப்தை ஆண்டவர் தண்டிப்பார்’

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2“மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

‘ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது’

என்று அலறுங்கள்;

3ஏனெனில், அருகில் உள்ளது அந்த நாள்;

ஆண்டவருக்குரிய அந்நாள்

அண்மையில் உள்ளது;

அது மேகத்தின் நாள்;

வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.

4எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்;

கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்;

எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில்

அதன் செல்வங்கள்

வாரிக்கொண்டு செல்லப்படும்;

அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.

5எகிப்துடன் கூசு, பூத்து, லூது,

அனைத்து அரேபியா, லிபியா மற்றும்

நான் உடன்படிக்கை செய்து கொண்ட

நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.

6ஆண்டவர் கூறுவது இதுவே;

எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்;

அதன் பெருமைக்குரிய வலிமை

தோல்வியுறும்;

மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள

பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர்,

என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

7அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள்

பாழாகிக் கிடப்பர்;

அவர்களின் நகரங்கள்,

அழிந்த நகரங்கள் நடுவே

அழிந்து கிடக்கும்.

8நான் எகிப்துக்குத் தீ வைத்து

அதற்குத் துணையாயிருந்தோரை

நொறுக்கும்போது ‘நானே ஆண்டவர்’என்பதை

அறிந்து கொள்வர்.

9அந்நாளில் கூசு மக்களின்

மனவுறுதியைக் குலைத்த நான்

கப்பலில் தூதரை அனுப்புவேன்;

எகிப்தின் அழிவு நாளில்

திகில் அவர்களை ஆட்கொள்ளும்;

ஏனெனில், அந்நாள் உண்மையிலேயே

வரப்போகின்றது.

10தலைவராகிய ஆண்டவர்

கூறுவது இதுவே;

பாபிலோனின் மன்னன்

நெபுகத்னேசரின் கையால்

எகிப்தின் செல்வத்தை

அழிக்கப்போகின்றேன்.

11மக்களினங்களில் மிகவும்

வலிமை வாய்ந்த அவன் படைகளும்

நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்;

எகிப்திற்கு எதிராய்

அவர்கள் வாளை உருவி,

கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.

12ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து

தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன்.

அந்நியர் துணையால்

நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும்

வெறுமையாக்குவேன்.

ஆண்டவராகிய நானே

இதை உரைத்தேன்.

13தலைவராகிய ஆண்டவர்

கூறுவது இதுவே:

நான் சிலைகளை அழிப்பேன்;

நோபில் இருக்கும் உருவங்களுக்கு

முடிவுகட்டுவேன்;

எகிப்தில் இனி மன்னன் இரான்;

நாடு முழுவதும்

அச்சத்தைப் பரப்புவேன்.

14பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்;

சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்;

நோ நகரின்மீது

தண்டனை வரச் செய்வேன்.

15எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது

என் சினத்தைக் கொட்டுவேன்;

நோ நகரின் எண்ணற்ற மக்களை

வெட்டி வீழ்த்துவேன்.

16எகிப்துக்கு நெருப்பிடுவேன்;

சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்;

புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்;

தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.

17ஆவேன் மற்றும் பீபசேத்து

நகர இளைஞர் வாளால் வீழ்வர்;

அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.

18எகிப்தின் கொழுவை

நான் முறிக்கையில்,

தெகபனகேசு நகரில் பகல் இரவாகும்;

இறுமாப்புக்குரிய அதன் வலிமை

அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்;

மேகங்களால் அது மூடப்படும்;

சிறையிருப்புக்கு

அதன் சிற்றூர்கள் செல்லும்.

19இவ்வாறு நான் எகிப்தின் மீது

தண்டனை வரச்செய்வேன்.

அப்போது ‘நானே ஆண்டவர்’

என்பதை அறிந்து கொள்வர்.

‘எகிப்திய மன்னனின் வலிமை முறிந்தது’

20பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

21“மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை.

22எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும் — நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும் — முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன்.

23மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.

24பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.

25நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

26எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.”

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks