Home » 1 சாமுவேல் அதிகாரம் – 31 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 31 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

சவுலின் இறப்பு
(1 குறி 10:1-12)

1பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடினர்; பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.

2பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.

3சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது; வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.

4அப்பொழுது சவுல் தம் படைக்கலன் தாங்குவோனை நோக்கி, “இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு,” என்றார். ஆனால், அவருடைய படைக்கலன் தாங்குவோன் மிகவும் அஞ்சியதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால், சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார்.

5சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்குவோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.

6இவ்வாறு, சவுலும் அவரின் மூன்று புதல்வரும், அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லாரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.

7இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் யோனத்தானுக்குக் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அதனால், பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.

8வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் கில்போவா மலைமேல் இறந்துகிடப்பதை அவர்கள் கண்டார்கள்.

9அவர்கள் சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் பொருட்டுப் பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர்.

10அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக் கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொங்கவிட்டனர்.

11பெலிஸ்தியர் சவுலக்குச் செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது,

12அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலங்களையும் பெத்சான் சுவரிலிருந்து இறக்கி யாபேசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரித்தனர்.

13பின்பு, அவர்களுடைய எலும்புகளை எடுத்து யாபேசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைத்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks