Home » 1 சாமுவேல் அதிகாரம் – 26 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 26 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தாவீது சவுலை மீண்டும் கொல்லாது விடல்

1பின்னர், சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறினார்.

2ஆதலால், சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

3சவுல், எசிமோனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால், தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து,

4தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

5உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்; சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்; சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.

6அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, “சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்?” என்று கேட்க “உம்முடன் நான் வருகிறேன்” என்று அபிசாய் பதிலளித்தான்.

7ஆதலால், தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தலையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர்.

8அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்றான்.

9ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.

10மேலும், தாவீது, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும்; அவர் காலம் நிறைவுற்றுத் தாமாக இறக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்!

11ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே, அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்” என்றார்.

12அவ்வாறே, தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டபின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவுமில்லை; அறியவுமில்லை; ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

13பின்பு, தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது.

14அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னேரையும் தாவீது கூப்பிட்டு, “அப்னேர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா?” என்று கேட்டார். அப்னேர் அதற்கு, “அரசரை நேராக அழைக்க நீ யார்?” என்று கேட்டான்.

15அப்போது தாவீது அப்னேரிடம், “நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் உன் தலைவராகிய அரசரை விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்ல அங்கு வந்தானே!

16நீ செய்த இச்செயல் சரியல்ல; ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று வாழும் ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியும் அவர் தலைமாட்டிலிருந்த தண்ணீர் குவளையும் இப்போது எங்கே உள்ளன என்று பார்” என்றார்.

17சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?” என்று கேட்க, அதற்குத் தாவீது,“என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான்” என்றார்.

18மீண்டும் அவர், “என் தலைவராகிய நீர் உம் அடியானைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம்தான் என்ன?

19ஆதலால், இப்பொழுது அரசராகிய என் தலைவர் தம் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்; மனிதர்கள் அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில், ‘நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிபடு’ என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெறுவதிலிருந்து என்னை இந்நாளில் துரத்திவிட்டனர்.

20ஆதலால், ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில், மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல், இஸ்ரயேலின் அரசர் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார்” என்றார்.

21அப்பொழுது சவுல், “நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி உனக்கு நான் எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்” என்றார்.

22தாவீது மறுமொழியாக, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும்.

23அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.

24இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக!” என்றார்.

25அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, “என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பல காரியங்களைச் செய்வாய்; அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர், தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.


26:11 1 சாமு 24:6.


26:1 திப 54 தலைப்பு.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks