Home » 1 சாமுவேல் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

குருக்களைச் சவுல் கொலை செய்தல்

1தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர்.

2ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு, அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.

3தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, “கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்,” என்று வேண்டினார்.

4பின்பு, அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில்* இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர்.

5பின்பு, இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு, “நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!” என்றார். எனவே, தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.

6தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

7சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, “பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா?

8பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்” என்றார்.

9அப்பொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்;

10அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்”, என்றான்.

11அதைக்கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர்.

12அப்பொழுது சவுல், “அகித்தூபின் மகனே கேள்”, என அவரும், “இதோ உள்ளேன் என் தலைவரே!” என்றார்.

13சவுல் அவரிடம், “நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து அவனுக்காக கடவுளின் திருவுளத்தைக் கேட்டறிந்தாய்?” என்று கேட்டார்.

14அதற்கு அகிமெலக்கு அரசரிடம், “உம் பணியாளர் அனைவரிலும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டாரிடையே மேன்மை பெற்றவன் அன்றோ?

15அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடவையா? இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில், உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார்.

16அரசர் அவரிடம் “அகிமெலக்கு, நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்” என்றார்.

17அரசர் தம்மைச் சூழ்ந்து நின்ற காவலர்களிடம், “நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில், அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்குத் தெரிவிக்கவில்லை” என்றார். ஆனால், அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வரவில்லை.

18அப்பொழுது அரசர் தோயேகிடம், “நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து”, என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.

19மேலும், அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.

20ஆனால், அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.

21ஆண்டவரின் குருக்களைச் சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.

22தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியன் தோயேகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!

23என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால், என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய்” என்றார்.


22:1 திபா 57 தலைப்பு; திபா 42 தலைப்பு.
22:4 ‘அரண்’ என்பது எபிரேய பாடம்.
22:9-10 1 சாமு 21:7-9; திபா 52 தலைப்பு.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks