Home » 1 சாமுவேல் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கோலியாத்து இஸ்ரயேலரை அச்சுறுத்தல்

1பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவிலில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர்.

2சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தனர்.

3பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேலர் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க, அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.

4அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம்.

5அவன் வெண்கலத் தலைக்கவசமும் ஐம்பத்தேழு கிலோ வெண்கலத்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான்.

6கால்களில் வெண்கலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான்.

7அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழுகிலோ இரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.

8அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில், “நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.

9அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும்” என்றான்.

10மேலும், அந்தப் பெலிஸ்தியன், “இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள்” என்றான்.

11சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.

சவுலின் பாளையத்தில் தாவீது

12தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர்; சவுலின் காலத்திலேயே

13இவருடைய மூத்த புதல்வர் மூவர் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில் மூத்தவர் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு.

14தாவீது எல்லாருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர்.

15ஆனால், தாவீது சவுலை விட்டுத் திரும்பிச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

16அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான்.

17ஈசாய் தம் மகன் தாவீதிடம் “உன் சகோதரர்களுக்காக இந்த இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவையும், பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரர்களிடம் உடனே விரைந்து செல்.

18இந்தப் பத்து பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம் அளித்து விட்டு உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களிடம் ஒரு அடையாளமொன்று பெற்றுவா” என்று கூறினார்.

19அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரயேலர் எல்லோரும் ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியருடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

20தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்; அப்பொழுது இஸ்ராயேலரின் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பினர்.

21இஸ்ரயேலரும் பெலிஸ்தியரும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றனர்.

22தாவீது தாம் கொண்டுவந்தவற்றைப் பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்களத்திற்குள் ஓடினார். அங்கே தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார்.

23அவர் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில், இதோ! காத்து நகரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகளினின்று தோன்றி தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்; தாவீது அதைக் கேட்டார்.

24அவனைக் கண்ட இஸ்ரயேல் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர்.

25“இதோ நிற்கிற இம்மனிதனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான்! இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மகளையும் மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலரிடையே அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார்” என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

26அப்பொழுது தாவீது தம்மருகிலிருந்தவர்களை நோக்கி, “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பதற்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்?” என்று கேட்டார்.

27அதற்கு மக்கள், “அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும்” என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தனர்.

28மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று “நீ இங்கு ஏன் வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைநில‌த்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்; ஏனெனில், போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய்” என்றான்.

29அதற்குத் தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன்? ஒரு கேள்வித்தானே கேட்டேன்?” என்று கூறி.

30அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவ்வாறே கேட்டார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தனர்.

31தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலிடம் தெரிவித்தனர். அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார்.

32தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார்.

33அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது. நீயோ இளைஞன். ஆனால், அவனோ தன் இளவயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார்.

34தாவீது சவுலை நோக்கி, “உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,

35நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்; அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.

36உம் அடியானாகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்; ஏனெனில், அவன் வாழும் கடவுளின் படைகளை இழிவுபடுத்தியுள்ளான்” என்றார்.

37மேலும், தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார்.

38பின்பு, சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து, மார்புக் கவசத்தையும் அவருக்கு அணிவித்தார்.

39தாவீது சவுலின் வாளைத் தம் உடை மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, “இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில், இதில் எனக்குப் பழக்கம் இல்லை” என்று கூறி அவற்றை களைந்து விட்டார்.

40தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.

தாவீது கோலியாத்தைத் தோற்கடித்தல்

41தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.

42பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில், அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றம் உடைய இளைஞனாய் இருந்தான்.

43அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா?” என்று சொல்லி தன் தெய்வங்களின் பெயரால் தாவீதை சபிக்கத் தொடங்கினான்.

44மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான்.

45அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்.

46இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர்.

47மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில், இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார்.

48பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீதும் அவனுடன் போரிட, பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார்.

49தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்; அதைக் கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.

50இவ்வாறு, தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன் மீது வெற்றி கொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

51உடனே தாவீது ஓடி, அந்தப் பெலிஸ்த்தியனின் மேல் ஏறிநின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தார்.

52யூதா மக்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயிமின் சாலையில் காத்து, எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.

53இஸ்ரயேலர் பெலிஸ்தியரைப் பின்தொடர்வதை நிறுத்தி விட்டு அவர்களது பாசறையைக் கொள்ளையடித்தனர்.

54தாவீது அப்பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால், தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.

தாவீது சவுலின் முன் நிறுத்தப்படல்

55பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம், “அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன்?” என்று கேட்டார்.அப்னேர் அதற்கு, “அரசே உம் உயிர் மேல் ஆணை! அதை நான் அறியேன்” என்றார்.

56மீண்டும் அரசர், “இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா” என்றார்.

57தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்; அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது.

58சவுல் அவரிடம் “இளைஞனே நீ யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்குத் தாவீது, “பெத்லகேம் ஊரைச் சார்ந்த உம் அடியான் ஈசாயின் மகன் நான்” என்று பதிலளித்தார்.


17:50 2 சாமு 21:19.
17:51 1 சாமு 21:29.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks