Home » 1 அரசர்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

யூதா அரசன் அபியாம்
(2 குறி 13:1-14:1)

1நெபாற்றின் மகன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.

2அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.

3அவனுக்குமுன் அரசனாயிருந்த அவன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் அவனும் செய்தான். அவன் உள்ளம் தம் மூதாதையான தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.

4ஆயினும், தாவீதின் பொருட்டு அவருடைய கடவுளாகிய ஆண்டவர் எருசலேமில் அவரது குலவிளக்கை ஒளிரச் செய்தார். அவருடைய மகனை அவருக்குப் பின் எழுப்பி, எருசலேமை நிலைபெறச் செய்தார்.

5ஏனெனில், தாவீது ஆண்டவரின் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார். இத்தியனான உரியாவிடம் நடந்து கொண்ட முறையைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் அவர் ஆண்டவரின் கட்டளைகளினின்று வழுவியதில்லை.

6அபியாம் ஆண்ட காலமெல்லாம் அவனுக்கும் எரொபவாமுக்குமிடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது.

7அபியாமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? அபியாமிற்கும் எரொபவாமுக்குமிடையே போர் நடந்தது.

8பிறகு, அபியாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரசன் ஆனான்.

யூதா அரசன் ஆசா
(2 குறி 15:16-16:6)

9இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், ஆசா யூதாவின் அரசன் ஆனான். அவன் நாற்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான்.

10அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.

11ஆசா தன் மூதாதை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.

12அவன் விலை ஆடவர்களை நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தன் மூதாதையர் செய்து வைத்திருந்த சிலைகளையெல்லாம் அகற்றினான்.

13மேலும், அவனுடைய தாய் மாக்கா அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றைச் செய்து வைத்திருந்தாள். எனவே, அவன் அவளை அரச அன்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவ்வுருவத்தைத் தகர்த்து கிதரோன் ஓடையருகே சுட்டெரித்தான்.

14ஆனால், தொழுகை மேடுகள் அப்படியே இருந்தன. எனினும், ஆசாவின் உள்ளம் அவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருந்தது.

15தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் தான் நேர்ந்து கொண்ட வெள்ளி, தங்கத்தால் ஆன பொருள்களையும் ஆசா ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.

16ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.

17இஸ்ரயேலின் அரசன் பாசா யூதாவின்மீது படையெடுத்து வந்து, அரசன் ஆசாவுடன் இருந்த போக்குவரத்தைத் தடுக்க இடையில் இராமா நகரைக் கட்டினான்.

18ஆசா ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களிலும் அரண்மனைச் செல்வங்களிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், பொன்னையும் தன் பணியாளர் மூலம், எசியோனின் மகனான தபரிம்மோனுக்குப் பிறந்து, தமஸ்குவில் வாழ்ந்த பெனதாது என்ற சிரியா மன்னனுக்கு அனுப்பிக் கூறியது:

19“என் தந்தையும் உம் தந்தையும் செய்தது போல், நீரும் நானும் உடன்படிக்கை செய்து கொள்வோம். இதற்கெனப் பொன், வெள்ளி முதலியவற்றை நான் உமக்கு அன்பளிப்பாய் அனுப்புகிறேன். இஸ்ரயேலின் அரசன் பாசாவோடு நீர் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து விடும். அப்பொழுது அவன் என்னைவிட்டு அகன்று போவான்”.

20பெனதாது அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத் தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களின் மேல் படை எடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஈயோன் தாண், ஆபேல், பெத்மாக்கா ஆகிய நகர்களையும் கினரோத்து முழுவதையும் நப்தலி நாடு அனைத்தையும் தாக்கி முறியடித்தார்கள்.

21பாசா இதைக் கேள்வியுற்று, இராமாவைக் கட்டுவதை நிறுத்தி விட்டு, தீர்சா நகருக்குத் திரும்பினான்.

22அப்பொழுது அரசன் ஆசா, யூதா முழுவதற்கும் விதி விலக்கின்றி அனைவருக்கும் ஆணையிட்டான். அதன்படி அவர்கள் பாசா இராமாவைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு அரசன் ஆசா பென்யமினைச் சார்ந்த கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.

23ஆசாவின் பிற செயல்களும் அவனுடைய எல்லா வீரச் செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் நகர்களைக் கட்டியதும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? முதியவயதில் அவன் கால்களில் நோய் கண்டது.

24ஆசா தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் மூதாதை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோசபாத்து அரசன் ஆனான்.

இஸ்ரயேல் அரசன் நாதாபு

25யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் நாதாபு இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் இஸ்ரயேலின் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

26அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலேயே நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்தான்.

27இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான்.

28இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

29அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான்.

30இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம்.

31நாதாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

32ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.

இஸ்ரயேல் அரசன் பாசா

33யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம்ஆண்டில் அகியாவின் மகன் பாசா இஸ்ரயேல் முழுவதின்மீதும் தீர்சாவில் இருந்து கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

34அவனும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். எரொபவாமின் வழியிலேயே நடந்து, அவனைப் போல் இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.


15:4 1 அர 11:36.
15:5 2 சாமு 11:27.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks