திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மாசற்றவனின் மன்றாட்டு
(தாவீதின் மன்றாட்டு)
1ஆண்டவரே, என் வழக்கின்
நியாயத்தைக் கேட்டருளும்;
என் வேண்டுதலை உற்றுக் கேளும்;
வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்
என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
2உம் முன்னிலையினின்று
எனக்கு நீதி கிடைக்கட்டும்;
உம் கண்கள் நேரியன காணட்டும்.
3என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;
இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;
என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;
தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;
என் வாய் பிழை செய்யக்கூடாதென
உறுதி கொண்டேன்.
4பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,
நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,
வன்முறையாளரின் வழிகளை விட்டு
விலகியுள்ளேன்.
5என் நடத்தை
உம் பாதைகளில் அமைந்துள்ளது;
என் காலடிகள்
உம் வழியினின்று பிறழவில்லை.
6இறைவா, நான் உம்மை நோக்கிக்
கூப்பிடுகின்றேன்; ஏனெனில்,
நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.
என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;
என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும்.
7உமது வியத்தகு பேரன்பைக்
காண்பித்தருளும்;
உம்மிடம் அடைக்கலம் புகுவோரை
அவர்களுடைய எதிரிகளிடமிருந்து
உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
8உமது கண்ணின் மணியென
என்னைக் காத்தருளும்;
உம்முடைய சிறகுகளின் நிழலில்
என்னை மூடிக்கொள்ளும்.
9என்னை ஒழிக்கத் தேடும்
பொல்லாரிடமிருந்தும்
என்னைச் சூழ்ந்து கொண்ட
எதிரிகளிடமிருந்தும்
என்னை மறைத்துக் கொள்ளும்.
10அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;
தங்கள் வாயினால்
இறுமாப்புடன் பேசுபவர்கள்.
11அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்;
இதோ! என்னை
வளைத்துக் கொண்டனர்;
அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,
வைத்த கண் வாங்காது
காத்திருக்கின்றனர்.
12பீறிப்போடத் துடிக்கும்
சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;
மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்
இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.
13ஆண்டவரே, எழுந்து வாரும்;
அவர்களை நேருக்குநேர்
எதிர்த்து முறியடையும்;
பொல்லாரிடமிருந்து உமது வாளால்
என்னைக் காத்தருளும்.
14ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –
இவ்வுலகமே தங்கள் கதியென
வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –
உமது கைவலிமையினால்
என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென
நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்
அவர்கள் வயிற்றை நிரப்பும்;
அவர்களின் மைந்தர்
வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;
எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு
விட்டுச்செல்லட்டும்;
15நானோ நேர்மையில் நிலைத்திருந்து
உமது முகம் காண்பேன்;
விழித்தெழும்போது,
உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.