Home » லேவியர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

ஆரோன், அவர்தம் மகன்கள் ஆகியோரின் திருநிலைப்பாடு
(விப 29:1-37)

1ஆண்டவர் மோசேயிடம்,

2“நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து, உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும், பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய்.

3மக்கள் கூட்டமைப்பு முழுவதையும், சந்திப்புக்கூடார நுழைவாயிலின் முன் கூடிவரச்செய்” என்றார்.

4மோசே தமக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார். சந்திப்புக் கூடார நுழைவாயில்முன் கூட்டமைப்பு குழுமியபோது,

5மோசே கூட்டமைப்பிடம், “இக்காரியத்தைச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்” என்று கூறி,

6ஆரோனையும் அவர் புதல்வரையும் வரவழைத்துத் தண்ணீரில் குளிக்கச்செய்தார்.

7உள்ளங்கியை உடுக்கச் செய்து இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை அணிவித்து, ஏப்போதை அவர்மேல் போட்டு, ஏப்போதின் கைவண்ணப் பட்டையை அவருக்குக் கட்டி,

8மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,

9தலையில் பாகை அணிவித்து, பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார்.

10பின்னர், மோசே திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார்.

11திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழு முறை தெளித்து, பலிபீடத்தையும் அதன் அனைத்துக் கருவிகளையும் நீர்த்தொட்டியையும், அதன் தாங்கியையும் புனிதப்படுத்தும்படி திருப்பொழிவு செய்து,

12ஆரோனின் தலையின்மேல் திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் வார்த்து அவரைத் திருநிலைப்படுத்தும்படி அவருக்கு அருள்பொழிவு செய்தார்.

13ஆண்டவரது ஆணைப்படி, மோசே ஆரோனின் புதல்வரை வரவழைத்து, அவர்களுக்குக் கோடிட்ட உள்ளாடைகளை உடுத்துவித்து, இடைக்கச்சைகளைக் கட்டித் தலையில் பாகை அணிவித்தார்.

14பின்னர், பாவம் போக்கும் பலிக்கான காளையை அவர் கொண்டு வந்தார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வரும் தங்கள் கைகளை வைத்தனர்.

15அது வெட்டப்பட்டது, மோசே அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளைச் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றி, கறைநீக்கப்பலி செய்வதற்காக அதைப் புனிதப்படுத்தினார்.

16ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த சவ்வையும், இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் பலிபீடத்தில் மோசே எரித்தார்.

17காளையின் தோலையும் இறைச்சியையும் சாணத்தையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிட்டுக் கொளுத்தினார்.

18பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.

19அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்தார்.

20ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது. மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து,

21குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.

22பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.

23அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆரோனின் வலக்காதுமடலிலும், வலக்கைப் பெருவிரலிலும், வலக்கால் பெருவிரலிலும் பூசினார்.

24பின்னர், அவர் ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் சிறிது இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

25கொழுப்பையும், கொழுப்பு வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது முன்னந்தொடையையும் எடுத்து,

26ஆண்டவர் திருமுன் வைத்திருக்கும் புளிப்பற்ற அப்பக்கூடையிலுள்ள புளிப்பற்ற நெய்யப்பம் ஒன்றும், எண்ணெயில் தோய்த்த அப்பம் ஒன்றும் அடை ஒன்றும் எடுத்து, அந்தக் கொழுப்பின் மேலும் வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து,

27அவற்றையெல்லாம் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவர் புதல்வருடைய உள்ளங்கைகளிலும் வைத்து ஆரத்திப் பலியாக ஆண்டவர் திருமுன் அசைத்து,

28அவற்றை அவர்கள் உள்ளங் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின் மேல் இருந்த எரிபலியோடு எரித்தார். இது திருநிலைப்பாட்டுப்பலி. இதுவே ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.

29பின்னர், மோசே நெஞ்சுக்கறியை எடுத்து, அதை ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறு, திருநிலைப்பாட்டுக்கான ஆட்டுக்கிடாயில் அது மோசேயின் பங்காயிற்று.

30மோசே திருப்பொழிவு எண்ணெயிலும் பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும் ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்; இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும் அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார்.

31பின்னர், மோசே ஆரோனையும் அவர் புதல்வரையும் நோக்கி, “நான் கட்டளையிட்டவாறு அந்த இறைச்சியைச் சந்திப்புக் கூடார நுழைவாயில் முன்பாகச் சமைத்து, அத்துடன் திருநிலைப்பாட்டுக் காணிக்கைக் கூடையிலிருக்கும் அப்பத்தையும் உண்பீர்கள்.

32இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள்.

33திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை ஏழு நாள்கள் சந்தப்புக்கூடார நுழைவாயிலைவிட்டு நீங்காதீர்கள் ஏழு நாள்கள் நீங்கள் புனிதப்படுத்தப்படுவீர்கள்.

34இன்று செய்யப்பட்டது உங்கள் கறையை நீக்குவதற்காக ஆண்டவர் கட்டளையிட்டதாகும்.

35நீங்கள் சாகாதபடி ஏழு நாள்கள் இரவும் பகலும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் ஆண்டவருக்காகக் காவல் காப்பீர்கள். இதுவே நான் பெற்ற கட்டளை” என்றார்.

36மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks