லேவியர் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

2தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ,

3காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ — இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால்,

4அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ

5பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ — இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு, அதன் ஐந்தில் ஒருபங்கைசச் சேர்த்துக் குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.

6குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.

7அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்; இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும்.

எரிபலிகள்

8ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

9ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது; எரிபலி பற்றிய சட்டம் இதுவே; இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

10குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்; பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப் பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்;

11பின்னர், தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.

12பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்;

13பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.

தானியப் படையல்கள்

14உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே; ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.

15அவர்கள் உணவுப்படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப்படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப்படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.

16எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.

17அதைப் புளிப்பேற்றாது சுடவேண்டும். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.

18ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.

19ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது;

20ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி* அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப்படையலாக அளிக்க வேண்டும்.

21தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும். சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.

22அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும். இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.

23குருவின் எந்த உணவுப்படையலும் முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.

குற்ற நீக்கக் காணிக்கைகள்

24ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

25நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது; பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே; எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும் பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும். அது மிகத் தூயது.

26பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார். சந்திப்புக்கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.

27அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே. அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால், இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.

28அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.

29குருக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.

30கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது; நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.


6:1-7 எண் 5:5-8.

6:20 * ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post