யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு
1அதற்குச் சூகாவியனான பில்தாது
சொன்ன பதில்:
2எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள
சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?
சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.
3மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?
மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?
4சீற்றத்தில் உம்மையே நீர்
கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு
உலகம் கைவிடப்பட வேண்டுமா?
பாறையும் தன் இடம்விட்டு
நகர்த்தப்படவேண்டுமா?
5தீயவரின் ஒளி அணைந்துபோம்;
அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.
6அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;
அவர்கள்மீது ஒளிரும் விளக்கு
அணைந்துபோம்.
7அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;
அவர்களின் திட்டமே
அவர்களைக் கவிழ்க்கும்.
8அவர்களின் கால்களே
அவர்களை வலைக்குள் தள்ளும்;
அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.
9கண்ணி அவர்களின் குதிகாலைச்
சிக்கிப்பிடிக்கும்;
சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.
10மண்மீது அவர்களுக்குச் சுருக்கும்,
பாதையில் அவர்களுக்குப் பொறியும்
மறைந்துள்ளன.
11எப்பக்கமும் திகில்
அவர்களை நடுங்க வைக்கும்;
கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.
12பட்டினி அவர்களின் வலிமையை
விழுங்கிடும்; தீங்கு அவர்களின்
வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.
13நோய் அவர்களின் தோலைத் தின்னும்;
சாவின் தலைப்பேறு
அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.
14அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று
பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்
அரசன்முன் கொணரப்படுவர்.
15அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;
அவர்களின் உறைவிடங்களில்
கந்தகம் தூவப்படுகின்றது.
16கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;
மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.
17அவர்களின் நினைவே அவனியில்
இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே
அவனுக்குப் பெயரே இல்லாது போம்.
18ஒளியிலிருந்து இருளுக்குள்
அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே
அவர்கள் துரத்தப்படுவர்.
19அவர்களின் இனத்தாரிடையே
அவர்களுக்கு வழிமரபும்
வழித்தோன்றலுமில்லை;
அவர்கள் வாழ்ந்த இடத்தில்
அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.
20அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது
மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.
21கொடியவரின் குடியிருப்பெல்லாம்
இத்தகையதே; இறைவனை
அறியாதவரின் நிலையும் இதுவே.