back to top
HomeTamilஓசேயா அதிகாரம் - 2 - திருவிவிலியம்

ஓசேயா அதிகாரம் – 2 – திருவிவிலியம்

ஓசேயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1‘அம்மீ’* என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். ‘ருகாமா’ என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.

இஸ்ரயேல் ஓர் உண்மையற்ற மனைவி

2“வழக்காடுங்கள், உங்கள்

அன்னையோடு வழக்காடுங்கள்;

அவள் எனக்கு மனைவியுமல்ல;

நான் அவளுக்குக் கணவனுமல்ல;

அவள் வேசித்தனத்தின் குறிகளைத்

தன் முகத்தி னின்றும்,

விபசார குறிகளைத்

தன் மார்பினின்றும் அகற்றட்டும்.

3இல்லாவிடில், நான் அவளைத்

துகிலுரித்து திறந்தமேனியாக்குவேன்;

பிறந்த நாளில் இருந்த கோலமாய்

அவளை ஆக்குவேன்;

பாலைநிலம்போல் ஆக்கி,

வறண்ட நிலமாகச்செய்து

தாகத்தினால் அவளைச் சாகடிப்பேன்.

4அவள் பிள்ளைகளுக்கும்

நான் கருணை காட்டமாட்டேன்;

ஏனெனில், அவர்கள்

வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.

5அவர்களின் தாய்

வேசியாய் வாழ்ந்தாள்;

அவர்களைக் கருத்தாங்கியவள்

ஒழுக்கம் கெட்டு நடந்தாள்;

‘எனக்கு உணவும் தண்ணீரும்,

ஆட்டு மயிரும் சணலும்,

எண்ணெயும் பானமும் தருகின்ற

என் காதலரைப்

பின் செல்வேன்’ என்றாள்.

6ஆதலால், நான் அவள்*

வழியை முள்ளால் அடைப்பேன்;

அவள் எதிரில்

சுவர் ஒன்றை எழுப்புவேன்;

அவளால் வழி கண்டுபிடித்துப்

போக இயலாது.

7அவள் தன் காதலர்களைப்

பின்தொடர்ந்து ஓடுவாள்;

ஆனால் அவர்களிடம்

போய்ச் சேரமாட்டாள்.

அவர்களைத் தேடித் திரிவாள்;

ஆனால், அவர்களைக் காணமாட்டாள்.

அப்போது அவள், ‘என் முதல்

கணவனிடமே நான்

திரும்பிப் போவேன்;

இப்போது இருப்பதைவிட,

அப்போது எனக்கு

நன்றாயிருந்தது’ என்பாள்.

8கோதுமையும் திராட்சை இரசமும்

எண்ணெயும் அவளுக்குக்

கொடுத்தது நானே என்பதை

அவள் அறியவில்லை.

நான் வாரி வழங்கிய

பொன், வெள்ளியைக் கொண்டே

பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.

9ஆதலால், நான் எனது கோதுமையை

அதன் காலத்திலும்,

எனது திராட்சை இரசத்தை

அதன் பருவத்திலும்

திரும்ப எடுத்துக்கொள்வேன்;

அவள் திறந்த மேனியை மறைக்க

நான் கொடுத்திருந்த

கம்பளி ஆடையையும் சணலாடையையும்

பறித்துக் கொள்வேன்.

10இப்பொழுதே அவளுடைய

காதலர் கண்முன்

அவளது வெட்கக் கேட்டை

வெளிப்படுத்துவேன்;

என்னுடைய கையிலிருந்து

அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.

11அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும்

விழாக்களையும் அமாவாசைகளையும்

ஓய்வு நாளையும் அவளுடைய

திருநாள்கள் அனைத்தையுமே

ஒழித்துவிடுவேன்.

12‘இவை என் காதலர் எனக்குக்

கூலியாகக் கொடுத்தவை’ என்று

அவள் சொல்லிக் கொண்ட

அவளுடைய

திராட்சைத் தோட்டங்களையும்,

அத்தி மரங்களையும் பாழாக்குவேன்;

அவற்றைக் காடாக்கிவிடுவேன்;

காட்டு விலங்குகளுக்கு

அவை இரையாகும்.

13பாகால்களின் விழாக்களைக்

கொண்டாடிய நாள்களில்

அவள் அவற்றுக்கு

நறுமணப்புகை எழுப்பினாள்;

வளையல்களாலும் நகைகளாலும்

தன்னை அணி செய்து,

தன் காதலர்பின் போய்

என்னை மறந்தாள்;

இவற்றுக்காக அவளை

நான் தண்டிப்பேன்”

என்கிறார் ஆண்டவர்.

தம் மக்கள்மேல் ஆண்டவரின் அன்பு

14“ஆதலால் நான் அவளை

நயமாகக் கவர்ந்திழுப்பேன்;

பாலைநிலத்துக்கு அவளைக்

கூட்டிப்போவேன்;

நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.

15அவளுடைய திராட்சைத் தோட்டங்களை

அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்;

ஆகோர் பள்ளத்தாக்கை

நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்;

அப்போது அவள் அங்கே

தன் இளமையின் நாள்களிலும்,

எகிப்து நாட்டினின்று

வெளியேறிய காலத்திலும்

பாடியதுபோல் பாடுவாள்.

16அந்நாளில், ‘என் கணவன்’ என

என்னை அவள் அழைப்பாள்;

‘என் பாகாலே’* என இனிமேல்

என்னிடம் சொல்லமாட்டாள்”

என்கிறார் ஆண்டவர்.

17அவளுடைய நாவினின்று

பாகால்களின் பெயர்களை

நீக்கிவிடுவேன்;

இனிமேல் அவர்களைப்

பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.

18அந்நாளில், காட்டு விலங்குகளோடும்,

வானத்துப் பறவைகளோடும்,

நிலத்தில் ஊர்வனவற்றோடும்

அவர்களுக்காக நான்

ஓர் உடன்படிக்கை செய்வேன்;

வில்லையும் வாளையும் போரையும்

நாட்டினின்று அகற்றிவிடுவேன்;

அச்சமின்றி அவர்கள்

படுத்திருக்கச் செய்வேன்.

19“இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும்

உன்னோடு நான்

மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்;

நேர்மையிலும் நீதியிலும்

பேரன்பிலும் உன்னோடு

மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.

20மாறாத அன்புடன் உன்னோடு

மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்;

ஆண்டவராம் என்னை

நீயும் அறிந்துகொள்வாய்.

21மேலும் அந்நாளில் நான்

மறுமொழி அளிப்பேன்”

என்கிறார் ஆண்டவர்.

“நான் வானத்தின் வழியாய்

மறுமொழி அளிப்பேன்;

அது நிலத்தின் வழியாய்

மறுமொழி தரும்.

22நிலம், கோதுமை, திராட்சை இரசம்,

எண்ணெய் வழியாய்

மறுமொழி தரும்.

அவை இஸ்ரியேல்வழியாய்

மறுமொழி தரும்”

என்கிறார் ஆண்டவர்.

23நான் அவனை* எனக்கென்று

நிலத்தில் விதைப்பேன்,

**‘லோருகாமா’வுக்குக்

கருணை காட்டுவேன்;

‘லோ அம்மீ’யை நோக்கி,

‘நீங்கள் என் மக்கள்’ என்பேன்;

அவனும் ‘நீரே என் கடவுள்’ என்பான்.


2:15 யோசு 7:24-26.


2:1 “அம்மீ” என்பதற்கு “என் மக்கள்” என்பது பொருள்.
2:1 “ருகாமா” என்பதற்கு “கருணை பெற்றவர்” என்பது பொருள்.
2:6 “உன்” என்பது எபிரேய பாடம்.
2:16 “என் தலைவரே” என்பது பொருள்.
2:22 “இஸ்ரியேல்” என்பதற்கு “இறைவன் விதைக்கிறார்” என்பது பொருள்.
2:23 “அவளை” என்பது எபிரேய பாடம்.
2:23 “லோ ருகாமா” என்பது எபிரேயத்தில் “என் கருணை பெறாதவன்” என்று பொருள்படும்.
2:23 “லோ அம்மீ” என்பது எபிரேயத்தில் “என் மக்கள் அல்ல” என்று பொருள்படும்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks