Home » எசேக்கியல் அதிகாரம் – 46 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரம் – 46 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தலைவனும் விழாக்களும்

1தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில் ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.

2தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து வாயில் நிலையருகே நிற்க வேண்டும். அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் குருக்கள் நிறைவேற்ற வேண்டும். அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.

3ஓய்வு நாள்களிலும், அமாவாசை நாள்களிலும் நாட்டின் மக்கள் ஆண்டவர் திருமுன் நுழை வாயிலருகே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.

4ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரி பலி மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.

5வெள்ளாட்டுக் கிடாயுடன் தரும் தானியப் படையல் ஒரு மரக்கால் அளவு இருக்கவேண்டும். ஆட்டுக்குட்டிகளுடன் தரும் தானியப் படையல் அவன் விரும்பும் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தர வேண்டும்.

6அமாவாசை நாளில் அவன் மந்தையிலிருந்து ஓர் இளங்காளை, ஆறு ஆட்டுக்குட்டிகள், ஒரு வெள்ளாடு ஆகியவற்றைத் தர வேண்டும். அவை அனைத்தும் மாசுமறு அற்றவையாய் இருக்க வேண்டும்.

7காளையுடன் ஒரு மரக்கால் அளவு தானியப் படையலையும் வெள்ளாட்டுக் கிடாயுடன் ஒருமரக்கால் அளவு தானியப் படையலையும் ஆட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பும் அளவு தானியப் படையலையும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியப் படையலுடன் ஒரு கலயம் அளவு எண்ணெயும் கொடுக்க வேண்டும்.

8தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின் புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து, அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.

9குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.

10தலைவன் மக்களுடன் சேர்ந்து, அவர்கள் உள்நுழைகையில் அவனும் நுழைந்து, அவர்கள் வெளிச் செல்கையில் அவனும் வெளிச் செல்வான்.

11விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.

12தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில், கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ, நல்லுறவுப் பலியையோ செலுத்துவான். பின்னர் அவன் வெளியே செல்வான். அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.

தலைவனும் நிலமும்

13ஒவ்வொரு நாளும் ஒரு வயது மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை எரிபலியாய் ஆண்டவருக்குச் செலுத்தல் வேண்டும். காலை தோறும் அதைச் செலுத்த வேண்டும்.

14ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் தானியப் படையல் செய்தல் வேண்டும். அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும், கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில் மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல் என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.

15இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல், எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.

16தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.

17ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது “விடுதலை ஆண்டு” வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.

18தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அவன் தன் உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு உரிமைச் சொத்தை வழங்கவேண்டும். அதன்மூலம் என் மக்களில் எவனும் அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.

கோவில் சமையற் கூடங்கள்

19பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும் குருக்களுக்குரிய தூய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்; மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.

20அவர் என்னிடம் சொன்னது; குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல் ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே. அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம் தூய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.

21அவர் பின்னர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் இட்டுச் சென்றார். நான் ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றத்தைக் கண்டேன்.

22வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும் சுற்றிக் கட்டப்பட்ட முற்றங்கள் நாற்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமாய் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவானவை.

23நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது. அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.

24அவர் என்னிடம், “கோவிலில் பணிபுரிவோர் மக்களின் பலிப்பொருள்களைச் சமைக்கும் அடுப்புகள் இவையே” என்றார்.


46:17 லேவி 25:10.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks