Home » எசேக்கியல் அதிகாரம் – 44 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரம் – 44 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கிழக்கு வாயிலின் சிறப்பு

1பின்னர் அம்மனிதர் என்னைத் தூயகத்தின் வெளிவாயிலுக்குத் திரும்பவும் கூட்டிவந்தார். அது கிழக்கு முகமாய் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

2ஆண்டவர் என்னிடம் கூறியது: இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்; இது மூடியே இருக்க வேண்டும்.

3தலைவன் மட்டுமே வாயிலுக்கு உட்புறம் ஆண்டவரின் முன்னிலையில் உண்பதற்காக அமரலாம். அவன் வாயிலின் புகுமுகமண்டபம் வழியாய் உள் நுழைந்து, அதே வழியில் வெளிவர வேண்டும்.

கோவிலுக்குள் செல்வதற்கான நெறிமுறைகள்

4பின்னர் அம்மனிதர் என்னை வடக்கு வாயிலின் வழி கோவிலுக்கு முன்னால் அழைத்து வந்தார். அப்போது ஆண்டவரின் மாட்சி அவர்தம் கோவிலை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, முகங்குப்புற விழுந்தேன்.

5ஆண்டவர் என்னிடம் சொன்னது: மானிடா! ஆண்டவரின் கோவிலைப் பற்றி நான் சொல்லும் எல்லா நியமங்களையும் சட்டங்களையும் கவனமாய்க் காதால் உற்றுக்கேட்டு இதயத்தில் பதித்துவை. அவ்வில்லத்தின் எல்லா வாயில்களிலும் நுழைவது பற்றியும் தூயகத்தின் வாயில்களினின்று வெளிச்செல்வது பற்றியும் கவனமாய்க் கேள்.

6கலக வீட்டாராகிய இஸ்ரயேலுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் அருவருப்பான செயல்களை விட்டுவிடுங்கள்.

7நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும், இரத்தமும் கொண்டுவரும்போதே உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத அந்நியரை என் தூயகத்திற்குக் கூட்டிவந்து என் இல்லத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள். உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும் உடன்படிக்கையை முறித்தீர்கள்.

8நீங்கள் என் தூய பொருள்களைப் பாதுகாக்காமல் உங்களுக்குப் பதிலாக அந்நியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தீர்கள்.

9தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத எந்த அந்நியரும் இஸ்ரயேலரிடையே வாழும் அந்நியரும்கூட என் தூயகத்தில் நுழையக்கூடாது.

குருத்துவப் பணியிலிருந்து லேவியர் நீக்கம்

10இஸ்ரயேலர் என்னைவிட்டு விலகிச்சென்று அவர்கள் தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரிந்தபோது, அவர்களுடன் என்னைவிட்டு விலகிவிட்ட லேவியரும்கூடத் தங்கள் குற்றப்பழியைச் சுமக்க வேண்டும்.

11அவர்கள் கோவிலின் வாயில்களைக் காக்கும் பொறுப்பேற்று என் தூயகத்தில் பணிபுரியலாம்; எரிபலிகள் மற்றும் மக்கள் பலிகளுக்கான விலங்குகளை வெட்டலாம்; மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத் திருப்பணி புரியலாம்.

12அவர்கள் அவர்களின் தெய்வச் சிலைகளுக்கு முன்னால் பணிபுரிந்து இஸ்ரயேல் வீட்டாரைப் பாவத்தில் விழ வைத்ததால், நான் என் கையை அவர்களுக்கு எதிராய் ஓங்கியுள்ளேன். அவர்கள் தங்கள் குற்றப்பழியைத் தாங்களே சுமப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

13அவர்கள் குருக்களைப்போல என் அருகில் வந்து திருப்பணிபுரியவோ, என் தூய பொருள்கள் எதன் அருகிலாவது வரவோ கூடாது. அவர்கள் தங்கள் வெட்கக்கேட்டையும் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களின் விளைவையும் சுமப்பர்.

14ஆயினும் நான் அவர்களுக்கு கோவிலைக் கண்காணிக்கும் பொறுப்பையும் அதில் ஆற்றவேண்டிய அனைத்துப் பணிகளைச் செய்யும் பொறுப்பையும் கொடுப்பேன்.

குருக்கள்

15ஆனால், லேவியர்களில் சாதோக்கின் வழியினரான குருக்கள், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிப்போனபோது என் தூயகத்தைக் கண்காணித்து வந்தனர். எனவே அவர்கள் என் அருகில் வந்து திருப்பணிபுரியவேண்டும். அவர்கள் கொழுப்பு, மற்றும் இரத்தப் பலிகளை எனக்குச் செலுத்த என் முன்னிலையில் நிற்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

16அவர்கள் மட்டுமே என் தூயகத்தினுள் நுழையலாம். அவர்கள் மட்டுமே என் மேசையருகில் வந்து என் முன்னிலையில் திருப்பணி புரிந்து சடங்குகளை நிறைவேற்றலாம்.

17அவர்கள் உள்முற்றத்தின் வாயில் வழி நுழைகையில் நார்ப்பட்டு ஆடை அணிய வேண்டும். அவர்கள் உள் முற்றத்தின் வாயிலிலோ கோவிலிலோ திருப்பணிபுரிகையில் கம்பளி ஆடைகளை அணியலாகாது.

18அவர்கள் தலையில் நார்ப்பட்டுத் தலைப்பாகையும், இடையில் நார்ப்பட்டு உள்ளாடைகளும் அணிய வேண்டும். வியர்வை வருவிக்கும் எதையும் அணியலாகாது.

19அவர்கள் வெளிமுற்றத்தில் மக்களிடம் செல்கையில் திருப்பணி புரிகையில் அணிந்த ஆடைகளைக் கழற்றி, அவற்றைத் தூயக அறைகளில் வைத்து விட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆடைகள் வழியாகத் தூய்மை மக்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யவேண்டும்.

20அவர்கள் தலையை மழிக்கவோ நீள்முடி வளர்க்கவோ வேண்டாம். தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளட்டும்.

21உள்முற்றத்தில் நுழைகையில் எக்குருவும் திராட்சை மது அருந்தலாகாது.

22எந்தக் குருவும் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்ற மங்கையையோ மணமுடித்தலாகாது. ஆனால் இஸ்ரயேல் இனத்துக் கன்னிப்பெண்ணையோ குருவின் கைம்பெண்ணையோ மட்டுமே மணமுடிக்கலாம்.

23தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறியவும், தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும் அவர்கள் என் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

24வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும் என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் கொள்ள வேண்டும்.

25இறந்த உடலின் அருகில் குரு சென்று தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ, திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம்.

26அதன்பின் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும்.

27அவர் தூயகத்தில் பணியாற்ற அதன் உள்முற்றத்தில் நுழையும் நாளில் பாவம் போக்கும் பலியைத் தமக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

28குருக்களுக்கு நானே உரிமைச் சொத்து; அவர்களுக்கு இஸ்ரயேலில் யாதொரு சொத்தும் தரவேண்டாம். நானே அவர்களின் உடைமை.

29அவர்கள் தானியப் படையல், பாவம் போக்கும் பலி இறைச்சி, குற்ற நீக்கப்பலி இறைச்சி ஆகியவற்றை உண்பர். இஸ்ரயேலில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் குருக்களுக்குச் சொந்தமாகும்.

30உங்கள் முதற்கனிகளில் சிறந்தவையும் உங்கள் சிறப்புக் காணிக்கைகளில் உன்னதமானவை யாவும் குருக்களுக்கே சொந்தம். நீங்கள் உங்கள் வீட்டு உணவில் முதல் பாகத்தைக் குருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் வீட்டில் இறையாசி தங்கும்.

31குருக்கள், பறவைகளிலோ, விலங்குகளிலோ, தானாய் இறந்தவற்றையும் காட்டு விலங்குகளால் பீறப்பட்டவற்றையும் உண்ணலாகாது.


44:17-18 விப 28:39-43; லேவி 16:4.
44:19 லேவி 16:23.
44:20 லேவி 21:5.
44:21 லேவி 10:9.
44:22 லேவி 21:7,13-14.
44:23 லேவி 10:10.
44:25 லேவி 21:1-4.
44:28 எண் 18:20.
44:29-30 எண் 18:8-19.
44:31 லேவி 22:8.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks