Home » 2 சாமுவேல் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தாவீதுக்கு நாத்தானின் செய்தி
(1 குறி 17:1-15)

1அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.

2அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார்.

3அதற்கு நாத்தான், “நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார்.

4அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது:

5“நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா?

6இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது.

7இஸ்ரயேலர் அனைவரும் சென்றவிடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது ‘எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்?’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?

8எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.

9நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும், உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன்.

10-11எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

12உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.

13எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.

14நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.

15உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல, என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன்.

16என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!’

17மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.

தாவீதின் நன்றிப் பாடல்
(1 குறி 17:16-27)

18பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது?

19இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப்பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே!

20தாவீது உம்மிடம் மேலும் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.

21உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர்.

22ஆகவே, என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி, நீர் மகத்தானவர்; உம்மைப் போன்று வேறு எவரும் இலர்; உம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை.

23உம் மக்கள் இஸ்ரயேலரைப்போல் வேறு யார் உளர்? அவர்களை உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்றினங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!

24என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!

25ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப்பற்றியும் அவனது குடும்பத்தைப்பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!

26உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

27ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே, இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.

28தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே!

29உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!’


7:12 திபா 89:3-4; 132:11; யோவா 7:42; திப 2:30.
7:14 திபா 89:26-27; 2 கொரி 6:18; எபி 1:5.
7:16 திபா 89:36-37.
7:23 இச 4:34.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks