Home » 2 சாமுவேல் அதிகாரம் – 23 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 23 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தாவீதின் இறுதி மொழிகள்

1மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடம் திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதி மொழிகளாவன:

2ஆண்டவரின் ஆவி என் மூலம்

பேசினார்; அவரது வார்த்தை

என் நாவில் ஒலித்தது.

3இஸ்ரயேலின் கடவுள் என்னோடு

பேசினார்; ‘இஸ்ரயேலின் பாறை’

எனக்குக் கூறினார். ‘மானிடரை

நீதியோடு ஆள்பவன்,

இறை அச்சத்துடன் ஆள்பவன்.

4விடியற்கால ஒளியெனத்

திகழ்கின்றான்;

முகிலற்ற காலை கதிரவனென

ஒளிர்கின்றான்;

மண்ணின்று புல் முளைக்கச்

செய்யும் மழையென

விளங்குகின்றான்’.

5என் குடும்பம் இறைவனோடு

இணைந்துள்ளது அன்றோ?

அனைத்திலும் திட்டமிடப்பட்டு,

உறுதியாக்கப்பட்டு, என்றும்

நிலைக்கும் உடன்படிக்கையை அவர்

என்னோடு செய்து கொண்டார்.

என் அனைத்து மீட்பும் விருப்பும்’

அவரால் உயர்வு பெறாதோ?

6-7இழிமக்கள் அனைவரும் இரும்புத்

தடியும் ஈட்டிக்கோலும் கொண்டு,

நெருப்பால் முற்றிலும்

சுட்டெரிக்கப்படுவனவும்

கையால் தொடத்தகாதவனவுமான

காட்டு முட்களைப் போன்றவர்.

தாவீதின் புகழ்மிகு வீரர்கள்
(1 குறி 11:10-41)

8தாவீதோடிருந்த வீரர்களின் பெயர்கள்: தக்கமோனியன் யோசப்பாசெபத்து, மூவருள் முதல்வனாக இருந்த அவன், ‘எஸ்னீயன் அதினோ’ என்று அழைக்கப்பட்டான். ஏனெனில், அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தாக்கிக் கொன்றான்.

9அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர். போரிடுமாறு ஒன்று திரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்றபோது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின்வாங்கினர்.

10அப்பொழுது அவன் தனித்து நின்று, கை சோர்வுற்று வாளோடு ஒட்டிக்கொள்ளும் அளவுக்குப் பெலிஸ்தியரைத் தாக்கினான். ஆண்டவர் அன்று பெரும் வெற்றியைத் தந்தார். அவன் வீரர்கள் அவனை கொள்ளையடிப்பதற்காக அவனிடம் திரும்பினர்.

11அடுத்தவன் ஆராரியன் ஆகேயின் மகன் சம்பா. பயறு நிறைந்த வயல் ஒன்றில் பெலிஸ்தியர் கூட்டமாகத் திரள, மக்கள் புறமுதுகு காட்டி அவர்கள்முன் ஓடினார்கள்.

12அப்போது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்; பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தார்.

13முப்பது படைத்தலைவருள் மூவர் அறுவடைக் காலத்தில் தாவீது தங்கியிருந்த அதுல்லாம் குகைக்கு வந்தனர். அரக்கர்களின் கணவாயில் பெலிஸ்தியர் கூட்டம் பாளையமிறங்கி இருந்தது.

14அப்போது தாவீது பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியர் பெத்லகேமில் இருந்தனர்.

15தாவீது ஏக்கத்துடன், “பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தருபவன் யார்?” என்று கேட்டார்.

16அம்மூன்று வலிமைமிகு வீரரும் பெலிஸ்தியரின் அணிகளுக்குள் புகுந்து சென்று பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து நீர் மொண்டு, அதைத் தாவீதிடம் எடுத்து வந்தனர். தாவீதோ அதைக் குடிக்க விரும்பாமல் ஆண்டவருக்காக வெளியே ஊற்றினார்.

17“தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்?” என்று சொல்லி, அவர் அதைக் குடிக்க விரும்பவில்லை. இம் மூன்று வீரரும் ஆற்றிய செயல்கள் இவையே!

18யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறு பேருக்கு எதிராகத் தன் ஈட்டியைச் சுழற்றி அவர்களைக் கொன்றான். மூவருக்கு* இணையாக அவன் பெயர் பெற்றவன்.

19அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிகப் புகழ் பெற்றிருந்தான்? அவர்களின் தலைவனும் அவனே, ஆயினும், முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.

20கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.

21உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று, ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான்.

22யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாகப் பெயர் பெற்றுத் திகழ்ந்தான்.

23முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால், முதல் மூவருக்கு அவன் சமமாக இல்லை. ஆயினும், அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.

24யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்.

25அரோதியன் சம்மா, அரோதியன் எலிக்கா,

26பல்தியன் ஏலேசு, தெக்கோவைச்சார்ந்த இக்கேசின் மகன் ஈரா,

27அனத்தோத்தியன் அபியேசர், ஊசாத்தியன் மெபுன்னாய்,

28அகோகியன் சல்மோன், நெற்றோபாயன் மகராய்,

29நெற்றோபாயன் பானாவின் மகன் ஏலேபு, பென்யமினியரின் கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்,

30பிரத்தோனியன் பெனாயா, காகசு நீரோடைகளின் இதாய்,

31அர்பாத்தியன் அபிஅல்போன், பர்குமியன் அஸ்மவேத்து,

32சால்போனியன் எலியகுபா, யாசேனின் மகன் யோனத்தான்,

33அராரியன் சம்மா, அராரியன் சாராரின் மகன் அகீயாம்,

34மாகாத்தியன் அகஸ்பாயியின் மகன் எலிபலேற்று, கிலோனியன் அகித்தோபலின் மகன் எலியாம்,

35கர்மேலியன் எட்சரோ, அர்பியன் பாராய்,

36சோபாவைச் சார்ந்த நாத்தானின் மகன் இகால், காத்தியன்பானி,

37அம்மோனியனின் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாக்குவோனுமான பெயரோத்தியன் நகராய்,

38இத்ரியன் ஈரா, இத்ரியன் காரேபு,

39இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.


23:18 சில எபிரேய ஏடுகளில் ‘முப்பது’ என்பது பாடம். (காண் 1 குறி 11:25).
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks