Home » 2 சாமுவேல் அதிகாரம் – 18 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 18 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

அப்சலோமின் தோல்வியும் சாவும்

1தாவீது தம்மோடிருந்த வீரர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர், நூற்றுவர், தலைவர்களை நியமித்தார்.

2வீரர்களுள் மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரைக் கித்தியன் இத்தாயின் தலைமையிலும் தாவீது அனுப்பினார். தாமும் அவர்களோடு புறப்படுவதாக அரசர் வீரர்களிடம் கூறினார்.

3“நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில், நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எங்களுள் பாதிப்பேர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது எங்களுக்கு நகரிலிருந்தே நீர் உதவி செய்வது நல்லது” என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.

4“உங்களுக்கு எது நல்லதெனப்படுகிறதோ அதையே நான் செய்வேன்” என்று அரசர் அவர்களிடம் கூறி, வாயிலருகே நின்றார். வீரர்கள் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுச் சென்றனர்.

5“என் பொருட்டு அந்த இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்” என்று யோவாபு, அபிசாய், இத்தாய் ஆகியோருக்கு அரசர் கட்டளையிட்டார். எல்லாப் படைத்தலைவருக்கும் அரசர் கட்டளையிட்டதை வீரர்கள் அனைவரும் கேட்டார்கள்.

6இஸ்ரயேலரை எதிர்கொள்ள வீரர்கள் புறப்பட்டுத் திறந்த வெளிக்குச் சென்றனர். போர் எப்ராயிம் காட்டில் நடந்தது.

7இஸ்ரயேலர் தாவீதின் பணியாளரால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று மாபெரும் அழிவு ஏற்பட்டது. இருபதாயிரம்பேர் கொல்லப்பட்டனர்.

8நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.

9அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது.

10இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று, “இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன்” என்று கூறினான்.

11யோவாபு அதைச் சொன்னவனை நோக்கி, “என்ன? நீ கண்டாயா? அவனை ஏன் நீ அங்கேயே வெட்டித் தரையில் வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசுகளையும் ஒரு கச்சையையும் தந்திருப்பேனே!” என்று கூறினார்.

12அதற்கு அம்மனிதன் யோவாபிடம் கூறியது: “என் கையில் ஆயிரம் வெள்ளிக் காசுகளை நீர் நிறுத்துக் கொடுத்தாலும் அரசரின் மகனுக்கு எதிராக நான் கையோங்க மாட்டேன். ‘இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்’ என்று உமக்கும், அபிசாய்க்கும், இத்தாய்க்கும் அரசர் கட்டளையிட்டதை நாங்கள் கேட்டோமே!

13மாறாக, நான் என் மனச்சான்றுக்கு எதிராக நடந்திருந்தால் — அது அரசருக்குத் தெரியாமல் போகாது — நீர் என்னைக் கைவிட்டிருப்பீர்.”

14“உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.

15மேலும், யோவாபின் படைக் கலன் தாங்கிய பத்துப்பேர் அப்சலோமைச் சூழ்ந்து வெட்டிக் கொன்றனர்.

16யோவாபு எக்காளம் ஊத, வீரர்களை நிறுத்தி அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடர்வதை விட்டனர்.

17அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்று காட்டில் ஒரு பெருங்குழியில் தள்ளி, அவன்மேல் பெரும் கற்குவியலை எழுப்பினர். அச்சமயம் இஸ்ரயேலர் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடி விட்டனர்.

18அப்சலோம் தனக்கு ஒரு மகன் இல்லாத காரணத்தால் தன் பெயரை நினைவுகூறுவதற்காக, தன் வாழ்நாளிலேயே தனக்கென்று அரசக் கணவாயில் ஒரு தூண் நிறுவியிருந்தான். அதற்கு அவன் தன் பெயரையே வைத்தான். இந்நாள்வரை அது அப்சலோமின் நினைவுச் சின்னமாக இருக்கிறது.

தாவீது அப்சலோமின் இறப்பை அறிதல்

19சாதோக்கின் மகனாகிய அகிமாசு, “நான் ஓடி அரசரிடம் சென்று, ஆண்டவர் அவரைத் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும்” என்று சொன்னான்.

20அதற்கு யோவாபு, “இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்; இளவரசர் இறந்துவிட்டதால் இன்று வேண்டாம். வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம்” என்று சொன்னார்.

21ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் “நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல்” என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிவிட்டு ஓடிச் சென்றான்.

22சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம் “என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும்’ என்று கேட்டான். “மகனே! இச்செய்தியைச் சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்?” என்று யோவாபு பதில் கூறினார்.

23“நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன்” என்று அவன் மீண்டும் சொல்ல, “சரி, ஓடு” என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.

24அப்போது தாவீது இரு வாயில்களுக்குமிடையே அமர்ந்துக்கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச்சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடிவருவதைக் கண்டான்.

25காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், “தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது” என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துக்கொண்டிருந்தான்.

26காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு, அவன் குரலெழுப்பி வாயில்காப்போனிடம், “இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான்” என்று கூற அரசர், “இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான்” என்றார்.

27“முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது” என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர், “இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான்” என்றார்.

28அப்போது அகிமாசு குரலெழுப்பி, “நலம் உண்டாகுக!” என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி, “என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!’ என்றான்.

29“இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, அகிமாசு, “அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும்போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால், அது என்னவென்று எனக்கு தெரியாது” என்றான்.

30அரசர் அவனை நோக்கி, “விலகி, அங்கே நில்” என்று கூற, அவனும் விலகி நின்றான்.

31அப்போது கூசியனும் வந்து, “என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்” என்று கூறினான்.

32“இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, கூசியன், “என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உனக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக!” என்றான்.

33அப்போது அவர் அதிர்ச்சியுற்று, “என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!” என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks