Home » எசேக்கியல் அதிகாரம் – 38 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரம் – 38 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கடவுளின் கருவியான கோகு

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2மானிடா! மெசேக்கு மற்றும் தூபால் இனத்தவர்களின் தலைவனும் மாகோகு நாட்டினனுமான கோகு என்பவனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு எதிராக இறைவாக்குரை.

3தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மெசேக்கு மற்றும் தூபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.

4நான் உன்னைத் திருப்பி உன் தாடைகளில் கடிவாளங்கள் பூட்டி, முழுப்போர்க்கவசம் அணிந்த உன்னையும், உன் குதிரைகளையும், குதிரைவீரர்களையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களுடன் கூரிய வாளேந்திய பெரும் படையின் வீரர் யாவரையும் வெளியேற்றுவேன்.

5அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த பாரசீகம், கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர்.

6கோமேர் மற்றும் அதன் அனைத்துப் படைகளும், தொலை வடக்குப் பெத்தொகர்மா மற்றும் அதன் படைகளும் — உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களும் வெளியேறுவர்.

7நீ தயாராயிரு; உன்னுடன் சேர்ந்திருக்கும் கூட்டத்தினரையும் தயாராய் இருக்கச் சொல். நீ அவர்களுக்குத் தலைமை தாங்குவாய்.

8பல நாள்களுக்குப்பின் நீ போரிட அழைக்கப்படுவாய். வாளினின்று விடுபட்டு நீண்ட காலம் பாழாய்க் கிடந்த, இஸ்ரயேல் மலைகளில் வேற்றினத்தாரினின்று பெருங்கூட்டமாய்க் கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களின் நாட்டை, வரப்போகும் ஆண்டுகளில் முற்றுகையிடுவாய். வேற்றினத்தாரிடமிருந்து கூட்டி வரப்பட்ட அவர்களோ இப்போது பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.

9நீ புயல்போல் முன்னேறி, மேகம்போல் நாட்டை மூடுவாய். நீயும் உன்னுடனுள்ள அனைத்து படைகளும் உன்னுடனுள்ள பல மக்களினங்களும் இவ்வாறு செய்வீர்கள்.

10தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அந்த நாளில் உன் மனத்தில் எண்ணங்கள் எழவே, நீ தீய திட்டத்தைத் தீட்டுவாய்.

11நான் அரணற்ற ஊர்கள் நிறைந்த நாடொன்றை முற்றுகையிடுவேன். அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் மக்கள் மீது பாய்வேன். அவர்களுக்கு அரண் இல்லை; அடைக்கும் தாழ் இல்லை; வாயில் கதவும் இல்லை.

12எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும் வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி, அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.

13சேபா நாட்டினரும் தெதான் நாட்டினரும், தர்சீசு நகர வணிகர்களும், அதன் எல்லா இளம் வீரரும் உன்னிடம் “உண்மையாகவே கொள்ளையிட வந்தாயோ, பெருந்திரளான மக்களைச் சேர்த்துக் கொண்டு சூறையாட வந்தாயோ, பொன்னையும் வெள்ளியையும் வாரிக்கொண்டு, கால்நடைகளைக் கவர்ந்துகொண்டு, மிகுதியான பொருள்களைக் கொள்ளையிடுமாறு இவ்வாறு செய்தாயோ?” எனக் கேட்பார்கள்.

14எனவே, மானிடா! நீ இறைவாக்குரைத்துக் கோகுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்கள் இஸ்ரயேலர் பாதுகாப்பாய் வாழும் நாளை நீ அறிவாயோ?

15தொலை வடக்குப் பகுதிகளிலிருந்து நீ உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களுடன் வருவாய். நீங்கள் யாவரும் குதிரையில் ஏறிய பெரிய வலிய படைகளாய் வருவீர்கள்.

16நீ என் மக்கள் இஸ்ரயேலருக்கு எதிராய்ப் புறப்பட்டு, நாட்டை மூடும் மேகம்போல் முற்றுகையிடுவாய். கோகே! இனிவரும் நாள்களில் நான் உன்னை என் நாட்டிற்கு எதிராய் எழும்பச் செய்வேன். நான் மக்களினங்களின் கண்முன்னே என்னை உன் வழியாய்த் தூயவர் என வெளிப்படுத்தும்போது அவர்கள் நான் யாரென அறிந்து கொள்வர்.

17தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் முற்காலத்தில் என் ஊழியர்களாம் இஸ்ரயேல் இறைவாக்கினர் வழியாய் எவனைக் குறித்துப் பேசினேனோ அவன் நீதானே! அக்காலத்தில் அவர்கள் நான் உன்னை அவர்களுக்கு எதிராய்க் கூட்டி வருவேன் எனப் பல்லாண்டு இறைவாக்குரைத்தனர்.

கோகுக்குக் கடவுளின் தண்டனை

18அந்நாளில் நடப்பது இதுவே: கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

19என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.

20கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்; முகடுகள் சாயும்; எல்லா அரண்களும் மண்ணில் விழும்.

21நான் கோகுக்கு எதிராய் என் எல்லா மலைகளிலும் வாளை வரச்செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். ஒவ்வொருவரின் வாளும் தம் தோழருக்கு எதிராய் இருக்கும்.

22நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.

23இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிப் பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.


38:2 திவெ 20:8.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks