Home » 2 சாமுவேல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தாவீது யூதா, இஸ்ரயேலின் அரசராதல்
(1 குறி 11:1-9; 14:1-7)

1இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.

2சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்”.

3இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

4முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

5எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.

6அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, “நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள்” — அதாவது “இங்கே தாவீது வர முடியாது” என்றனர்.

7இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர்.

8அன்று தாவீது, “எபூசியரைத் தாக்குகின்றவர்கள், குடைகால்வாய் வழியே சென்று தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும்”, என்று கூறினார். ஆகவே, “பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது” என்று கூறப்பட்டது.

9தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு, ‘தாவீது நகர்’ என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.

10தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.

11தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.

12ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.

13எபிரோனைவிட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார்; மேலும், பல புதல்வரும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர்.

14எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,

15இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா,

16எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று.

பெலிஸ்தியர்மீது வெற்றி
(1 குறி 14:8-17)

17தாவீது இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் எல்லாரும் தாவீதைப் பிடிப்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர்; தாவீது அதைக் கேள்வியுற்றுக் கோட்டைக்குள் புகுந்துகொண்டார்.

18பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.

19“பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா? நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா?” என்று தாவீது ஆண்டவரிடம் கேட்டார். “செல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன்” என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார்.

20தாவீது பாகால்-பெராட்சிம்வரை வந்து அங்கே அவர்களைத் தோற்கடித்தார். “தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை என் கண்முன்னே தகர்த்தெறிந்தார்” என்று தாவீது கூறினார். ஆகவேதான், அந்த இடம் ‘பாகால்-பெராட்சிம்’* என்று அழைக்கப்படுகிறது.

21பெலிஸ்தியர் தங்கள் தெய்வச்சிலைகளை விட்டுச் செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.

22பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.

23தாவீது ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, “நீ எதிர்த்துச் செல்லவேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரிலிருந்து அவர்களை அணுகவேண்டும்.

24முசுக்கொட்டை மரங்களுக்கு மேல் அணி வகுப்புப் பேரொலி ஒலிக்கும்போது நீ தயாராக இருக்கவேண்டும்; ஏனெனில், அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படைகளைத் தாக்குவதற்காக உனக்கு முன்பாக செல்கிறார்” என்று ஆண்டவர் கூறினார்.

25ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டவாறே தாவீது சென்று, பெலிஸ்தியரைக் கெபா முதல் கெசேர் வரை தாக்கினார்.


5:4-5 1 அர 2:11; 1 குறி 3:4; 29:27.
5:6 யோசு 15:63; நீத 1:21.


5:20 எபிரேயத்தில், ‘தகர்க்கும் தலைவர்’ என்பது பொருள்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks