Home » 2 சாமுவேல் அதிகாரம் – 2 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 2 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தாவீது யூதாவின் அரசராதல்

1இதன்பின் தாவீது, “நான் யூதாவின் நகர்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லட்டுமா?” என்று ஆண்டவரிடம் கேட்டார். “செல்” என்றார் ஆண்டவர். “எங்குச் செல்லலாம்?” என்று மீண்டும் தாவீது வினவ, “எபிரோன்” என்று ஆண்டவர் பதிலளித்தார்.

2ஆகவே, தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்குச் சென்றார்.

3தம்மோடு இருந்த ஆள்களையும் அவர்களின் குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர்.

4யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராகத் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். “யாபோசு-கிலயாதின் ஆள்கள் தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று அவர்கள் தாவீதிடம் கூறினர்.

5யாபேசு-கிலயாதின் ஆள்களுக்குத் தாவீது தூதனுப்பி, “நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!

6ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் உண்மையும் காட்டுவாராக! நீங்கள் இவ்வாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்.

7வலிமை பெற்று வீரர்களாகத் திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்; எனினும், யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர்” என்று கூறினார்.

இஸ்பொசேத்தை இஸ்ரயேலின் அரசராய் ஏற்படுத்தல்

8இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று

9கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப்ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.

10சவுலின் மகன் இஸ்பொசேத்து இஸ்ரயேல்மீது அரசாளத் தொடங்கியபோது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டுகள் அவன் அரசனாக இருந்தான். ஆனால், யூதா குலமோ தாவீதைப் பின்பற்றியது.

11தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சிபுரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.

யூதா, இஸ்ரயேலிடையே போர்

12நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசேத்தின் பணியாளர்களும் மகனயிமிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.

13செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்பட்டுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர்.

14“இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள்போர் செய்யட்டும்” என்று அப்னேர் யோவாபிடம் கூறினான். “அவர்கள் அவ்வாறே செய்யட்டும்” என்று யோவாபும் கூறினான்.

15பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளருள் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.

16ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம்* என்று அழைத்தனர்.

17போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது. அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.

18அங்கே செரூயாவின் புதல்வர் — யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான்போல் வேகமாக ஓடக் கூடியவன்.

19அசாவேல் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.

20அப்னேர் பின்னால் திரும்பி, “அசாவேல்! நீயா?’ என்று கேட்டான். “நானே தான்” என்று அவன் பதில் கூறினான்.

21“உன் வலமோ இடமோ விலகி இளைஞருள் ஒருவனைப் பிடித்து, அவன் உடைமைகளைப் பிடுங்கிக்கொள்” என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால், அசாவேலுக்கு அவனைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடமனம் இல்லை.

22“என்னைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடு. நான் ஏன் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு என் முகத்தைக் காட்டுவேன்?” என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.

23ஆனால், அசாவேல் அதைக் கேளாமல் தொடர்ந்தான். ஆகவே, அப்னேர் தன் ஈட்டி முனையால் அவனை வயிற்றில் குத்த, அது அவனைப் பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.

24பின் யோவாபும் அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக இருக்கும் அம்மா மலையை அவர்கள் வந்தடைந்தபோது கதிரவன் மறைந்துகொண்டிருந்தான்.

25அப்போது பென்யமினின் ஆள்கள் அப்னேருக்குப்பின் ஒரே படையாகத் திரண்டு ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.

26அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, “வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் என நீ அறியாயா? தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் திரும்பிச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ?”’ என்று கூறினான்.

27அதற்கு யோவாபு, “வாழும் கடவுள் மேல் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்” என்று கூறி,

28எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடரவில்லை. போரிடவுமில்லை.

29அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் பயணம் செய்து மகனயிமை அடைந்தனர்.

30யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின், தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திரட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளருள் பத்தொன்பது பேரைக் காணவில்லை.

31தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.

32அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.


2:2 1 சாமு 25:42-43.
2:4 1 சாமு 31:11-13.


2:16 ‘வாள்களின் வயல்கள்’ என்பது பொருள்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks