Home » 2 அரசர்கள் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 22 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

யூதா அரசர் யோசியா
(2 குறி 34:1-2)

1யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார்.

2பொட்சத்தைச் சார்ந்த அதாயாவின் மகள் எதிதா என்பவரே அவருடைய தாய். அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார்.

திருச்சட்ட நூல் கண்டெடுக்கப்படல்
(2 குறி 34:8-28)

3தமது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அரசர் யோசியா, மெசுல்லாமின் புதல்வன் அட்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனை ஆண்டவரின் இல்லத்துக்கு அனுப்பிக் கூறியது:

4“நீ தலைமைக் குரு இல்க்கியாவிடம் சென்று, ஆண்டவரின் இல்லத்திற்கென மக்களிடமிருந்து வாயிற் காப்போர் பெற்றுக்கொண்ட எல்லாப் பணத்தையும் மொத்தக் கணக்கெடுக்கச் சொல்.

5அவர்கள் அப்பணத்தை ஆண்டவரின் இல்லத்தில் பழுது பார்க்க நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கையில் ஒப்புவிக்கட்டும். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்க்கும் வேலைக்காரர்களுக்குக் கொடுக்கட்டும்.

6அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும்.

7பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில், அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்.”

8தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.

9பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, “அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்” என்று சொன்னான்.

10மேலும், அவன் அரசரிடம், “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்” என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.

11அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.

12பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, “அரசர் இட்ட கட்டளை இதுவே:

13நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில், இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே, ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றார்.

14குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சார்ந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.

15அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:

16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.

17ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே, இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது.

18ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,

19‘இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்’ என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.

20ஆதலால், இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்” என்றார். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.


22:1 எரே 3:6.
22:7 2 அர 12:15.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks