Home » 2 அரசர்கள் அதிகாரம் – 12 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 12 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

யூதா அரசன் யோவாசு
(2 குறி 24:1-16)

1ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.

2யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.

3ஆயினும், தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் தூபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.

4யோவாசு குருக்களை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம் — கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள்.

5ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும்” என்றான்.

6ஆயினும், யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, குருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை.

7எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள்” என்றான்.

8அவ்வாறே, குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.

9குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.

10அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.

11இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களுக்கும், கொத்தர்களுக்கும்,

12சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும், அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.

13ஆயினும், ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.

14ஏனெனில், ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.

15வேலையாள்களுக்குக் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.

16குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில், அவை குருக்களுக்கு உரியவை.

17அப்பொழுது, சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு, அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான்.

18எனவே, யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவூலங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே, அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.

19யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

20யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.

21அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.


12:4 விப 30:11-16.
12:15 2 அர 22:7.
12:16 லேவி 7:7.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks