back to top
HomeTamilநீதித் தலைவர்கள் அதிகாரம் - 2 - திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரம் – 2 – திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பொக்கிமில் ஆண்டவரின் தூதர்

1ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்.

2நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள்” என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?

3ஆகவே, இப்பொழுது கூறுகின்றேன்; நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன். அவர்கள் உங்களுக்கு முள்ளாக இருப்பார்கள். அவர்கள் தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருப்பார்கள்”.

4ஆண்டவரின் தூதர் இவ்வார்த்தைகளை எல்லா இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும், மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர்.

5அவ்விடத்தின் பெயரைப் ‘பொக்கிம்’ என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

யோசுவாவின் இறப்பு

6யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர்.

7யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர்.

8நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து.

9காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர்.

10அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.

இஸ்ரயேல் ஆண்டவரை விட்டு விலகுதல்

11இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.

12அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.

13அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.

14இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருக்க எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால், அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று.

15ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.

16ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர்.

17ஆயினும், அவர்கள் தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை; ஏனெனில், அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர்.

18ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில், துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.

19ஆனால், அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை.

20எனவே, இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. அவர், “இம்மக்களின் மூதாதையர் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை இவர்கள் மீறிவிட்டனர். என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.

21ஆகவே, நானும் யோசுவா இறக்கும்பொழுதுவிட்டு வைத்த வேற்றினத்தாரை இவர்கள் முன்னிருந்து இனியும் விரட்டமாட்டேன்.

22ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன்” என்றார்.

23எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.


2:2 விப 34:12-13; இச 7:2-5.
2:9 யோசு 19:49-50.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks