back to top
HomeTamilநீதித் தலைவர்கள் அதிகாரம் - 5 - திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தெபோரா, பாராக்கின் வெற்றிப்பாடல்

1அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:

2“இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை

தாங்கிச் செல்ல

மக்களும் தங்களை மனமுவந்து

அளிக்கின்றனர்.

ஆண்டவரைப் போற்றுங்கள்.!

3அரசர்களே, கேளுங்கள்!

இளவரசர்களே, செவிகொடுங்கள்.!

நான் ஆண்டவருக்குப் பண்

இசைப்பேன்.

இஸ்ரயேலின் கடவுளாகிய

ஆண்டவரின் புகழ்பாடுவேன்.

4ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து

வெளிவந்தபோது,

நீர் ஏதொமின் வயல்வெளியைக்

கடந்தபோது,

நிலம் நடுங்கியது, வானம்

பொழிந்தது,

கார்மேகம் நீரைச் சொரிந்தது.

5ஆண்டவரின் முன்னிலையில்

மலைகள் நடுங்கின.

சீனாய் மலையே! நீயும்

இஸ்ரயேலின் கடவுளாகிய

ஆண்டவர்முன் நடுங்கினாய்.

6அனாத்தின் மகன் சம்காரின்

நாள்களிலும் யாவேலின்

நாள்களிலும் நெடுஞ்சாலைகள்

வெறுமையாகிக் கிடந்தன.

பயணிகள் சுற்றுப் பாதைகளில்

சென்றனர்.

7தெபோரா! நீ எழும்பும் வரை,

இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும்

வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள்

வாழ்விழந்து கிடந்தன.

8வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து

கொள்ளப்பட்டதும்,

வாயில்களில் போர் வந்துற்றது.

இஸ்ரயேலின் நாற்பதாயிரம்

பேர்களுள் எவரிடம் கேடயமோ

ஈட்டியோ இருந்தது?

9என் இதயம் இஸ்ரயேலின்

படைத்தலைவர்களில் பெருமிதம்

கொள்கிறது. மக்கள் நடுவில்

தங்களை மனமுவந்து

அளித்தவர்கள் இவர்களே!

ஆண்டவரைப் போற்றுங்கள்!

10பெண் கழுதைகள் மீது

விரைந்து செல்வோரே!

விலைமிகு கம்பளத்தில்

வீற்றிருப்போரே!

பாதையில் பயணம் செய்வோரே!

பாடி மகிழுங்கள்!

11நீர்நிலைகளின் அருகிலிருந்து

எழும் பாடகர்குரல்

அங்கே ஆண்டவரின் வெற்றியைப்

பாடுகின்றது.

இஸ்ரயேல் ஊரக வாழ்வின்

பொலிவை முழங்குகின்றது.

அப்பொழுது, ஆண்டவரின் மக்கள்

நகர வாயில்களுக்கு

இறங்கிச் சென்றார்கள்.

12எழுந்திடு! தெபோரா! எழுந்திடு!

பாடல் ஒன்று பாடு!

எழுந்திடு! பாராக்கு! அபினோவாம்

புதல்வா! உன் கைதிகளை

இழுத்துச் சென்றிடு!

13அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்

பீடு நடைபோட்டனர்.

வலியோரை எதிர்த்து நிற்க

ஆண்டவரின் மக்கள் என்னிடம்

இறங்கி வந்தனர்.

14எப்ராயிமிலிருந்து அதன் மக்கள்

அமலேக்கிற்குப் போயினர்.

பென்யமின்! உன் பின்னால்

உன் மக்களும் மாக்கிரிலிருந்து

தலைவர்களும் செபுலோனிலிருந்து

தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

15இசக்காரின் இளவரசர்கள்

தெபோராவுடன் சென்றனர்.

இசக்காரின் மக்கள் பாராக்குடன்

சென்றனர்; அவர்கள்

கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு

விரைந்தனர். ரூபனின்

பிரிவுகளிடையே விளைந்தது

மாபெரும் இதய சோதனையே!

16மந்தைகளில் இரைச்சலைக்

கேட்கவோ

தொழுவங்களிடையே நீ

நின்று விட்டாய்? ரூபனின்

பிரிவுகளிடையே விளைந்தது

மாபெரும் இதய சோதனையே!

17கிலயாது யோர்தானுக்கு

அப்பால் தங்கியது.

தாண்! நீ ஏன் கப்பல்களில்

தங்கிவிட்டாய்? ஆசேர்

கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன்

துறைமுகத்தில் குடியிருந்தான்.

18செபுலோன் மக்களோ தங்கள்

உயிரைப் பணயம் வைத்தனர்.

உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!

19மன்னர்கள் வந்து போரிட்டனர்.

கானானிய மன்னர்கள் தானாக்கில்

மெகிதோ நீர் நிலைகளில்

போரிட்டனர். கொள்ளைப்

பொருளாக வெள்ளி எதுவும்

கிடைக்கவில்லை.

20வானிலிருந்து விண்மீன்கள்

போரிட்டன!

தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன்

போரிட்டன!

21கீசோன் ஆறு அவர்களை அடித்துச்

சென்றது.

பெருக்கெடுத்து வரும் ஆறே

கீசோன் ஆறு.

என் உயிரே! வலிமையுடன்

பீடு நடை போடு!

22குதிரைகளின் குளம்புகள் நிலத்தை

அதிரச் செய்தன.

குதிரைகள் பாய்ந்து ஓடின;

வேகமாக விரைந்து ஓடின.

23 ‘மேரோசைச் சபியுங்கள்’

என்கிறார் ஆண்டவரின் தூதர்.

அதில் வாழ்வோரைக் கடுமையாகச்

சபியுங்கள். ஏனெனில் அவர்கள்

ஆண்டவருக்கு உதவி செய்ய

வரவில்லை. வலிமை மிக்கோருக்கு

எதிராக ஆண்டவருக்கு

உதவி செய்ய வரவில்லை.

24கேனியனான கெபேரின் மனைவி

யாவேல்! நீ பெண்களுள் பேறு

பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள்

நீ பேறு பெற்றவள்!

25அவன் கேட்டதோ தண்ணீர்!

இவள் கொடுத்ததோ பால்!

அவள் உயர்தரக் கிண்ணத்தில்

தயிர் கொண்டு வந்தாள்.

26அவள் தன் கையைக் கூடார

முளையில் வைத்தாள்.

அவள் வலக்கை தொழிலாளர்

சுத்தியலைப் பிடித்தது.

சீசராவின் தலையில் அடித்தாள்;

சிதைத்தாள்; அவன் நெற்றிப்

பொட்டினை நொறுக்கினான்;

துளைத்தான்.

27அவன் சரிந்தான்; விழுந்தான்;

அவள் காலடியில் உயிரற்றுக்

கிடந்தான்; அவள் காலடியில் அவன்

சரிந்தான்; விழுந்தான்; அவன்

விழுந்த இடத்திலேயே

இறந்து கிடந்தான்.

28சீசராவின் தாய் சாளரம் வழியாக

எட்டிப்பார்த்தாள்.

சாளரத்தில் சாய்ந்துகொண்டு

அவள் கத்தினாள்;

“அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்?

அவன் தேர்க்குதிரைகளின் குளம்

பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?

29அவளுடைய அறிவார்ந்த பணிப்

பெண்கள் அவளுக்கு விடை

கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு

அவளே விடை கூறுகின்றாள்;

30அவர்கள் கொள்ளைப் பொருளைக்

கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ?

ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்;

சீசராவுக்குக் கொள்ளைப்

பொருளில் வண்ண ஆடைகள்;

என் தோளுக்குக் கொள்ளையடித்த

வண்ண ஆடைகள்;

இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.

31“ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள்

அழியட்டும்! உம்மீது அன்பு

கூர்வோர் பொலிவுடன், கதிரவன்

போல வாழட்டும்!”

பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.


5:5 விப 19:18.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks