back to top
HomeTamilநீதித் தலைவர்கள் அதிகாரம் - 9 - திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரம் – 9 – திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

அபிமெலக்கு

1எருபாகாலின் மகன் அபிமெலக்கு செக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான். அவர்களிடமும் தன் தந்தை, தாய் குடும்பத்தைச் சார்ந்த தன் இனத்தார் அனைவரிடமும் கூறியது:

2செக்கேமிலுள்ள எல்லாக் குடிமக்களும் கேட்குமாறு கூறுங்கள்: எது உங்களுக்கு நல்லது? எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா? அல்லது ஒருவன் உங்களை ஆள்வதா? நான் உங்கள் எலும்பும் சதையுமாக இருக்கின்றேன் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்” .

3அவன் தாயின் சகோதரர் அவனுக்காக, செக்கேமின் எல்லா மக்களும் கேட்குமாறு, இந்த வார்த்தைகள் அனைத்தையும் கூறினர். அவர்களது இதயம் அபிமெலக்கின் பக்கம் திரும்பியது. ஏனெனில், அவர்கள் “அவன் நம் சகோதரன்” என்றனர்.

4பாகால் பெரித்தின் கோவிலிருந்து அவனுக்கு எழுபது வெள்ளிக் காசுகள் கொடுத்தனர். அபிமெலக்கு அவற்றைக் கொண்டு வீணரும் முரடருமான ஆள்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டான். அவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.

5ஒபிராவிலிருந்த தன்தந்தை வீட்டுக்கு வந்து எருபாகாலின் மக்களும் தன் சகோதரர்களுமாகிய எழுபது பேரை ஒரே கல் மீது வைத்துக் கொன்றான். எருபாகாலின் கடைசி மகன் யோத்தாம் மட்டும் ஒளிந்து கொண்டதால் தப்பித்துக்கொண்டான்.

6செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் “சிலைத்தூண் கருவாலி” மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.

7இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்று கொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: “செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவி கொடுப்பார்.

8மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத்

திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன.

அவை ஒலிவ மரத்திடம், “எங்களை

அரசாளும்” என்று கூறின.

9ஒலிவ மரம் அவற்றிடம், “எனது

எண்ணெயால் தெய்வங்களும்

மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர்.

அப்படியிருக்க அதை உற்பத்தி

செய்வதை நான் விட்டுக்கொடுத்து

மரங்களுக்கு மேல் அசைந்தாட

வருவேனா?” என்றது.

10மரங்கள் அத்தி மரத்திடம், “வாரும்,

எங்களை அரசாளும்” என்றன.

11அத்தி மரம் அவற்றிடம், “எனது

இனிமையையும் நல்ல பழத்தையும்

விட்டுவிட்டு, மரங்கள் மீது

அசைந்தாட வருவேனா?” என்றது.

12மரங்கள் திராட்சைக் கொடியிடம்,

“வாரும், எங்களை அரசாளும்”

என்றன.

13திராட்சைக் கொடி அவற்றிடம்,

“தெய்வங்களையும் மானிடரையும்

மகிழ்விக்கும் எனது திராட்சை

இரசத்தை விட்டுவிட்டு

மரங்கள்மேல் அசைந்தாட

வருவேனா?” என்றது.

14மரங்கள் எல்லாம் முட்புதரிடம், “வாரும்,

எங்களை அரசாளும்” என்றன.

15முட்புதர் மரங்களிடம், “உண்மையில்,

உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள்

என்னைத் திருப்பொழிவு செய்தால்,

வாருங்கள்; என் நிழலில்

அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல்,

முட்புதரான என்னிடமிருந்து

நெருப்பு கிளர்ந்தெழுந்து

லெபனோனின் கேதுரு மரங்களை

அழித்துவிடும்” என்றது.

16இப்பொழுது நீங்கள் அபிமெலக்கை அரசனாக்கியிருக்கிறீர்களே! உண்மையுடனும் நேர்மையுடனுமா இதைச் செய்தீர்கள்? நீங்கள் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதா செய்திருக்கிறீர்கள்? அவரது செயலுக்கேற்பவா நீங்கள் அவருக்குக் கைம்மாறு செய்திருக்கிறீர்கள்?

17என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்; தம் உயிரைப் பணயம் வைத்தார்; உங்களை மிதியானியர் கையிலிருந்து விடுவித்தார்.

18இன்று நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராக எழுந்து, அவருடைய புதல்வர் எழுபது பேரை ஒரே கல்லின் மேல் வைத்துக் கொன்றீர்கள். அவருடைய வேலைக்காரியின் மகன் அபிமெலக்கைச் செக்கேமின் குடிமக்களுக்கு அரசனாக்கினீர்கள்.

19இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான்.

20இல்லையேல், அபிமெலக்கிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து, செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களை எரித்தழிக்கட்டும்! செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து அபிமெலக்கை எரித்தழிக்கட்டும்!” என்றார்.

21பின்னர், யோத்தாம் தம் சகோதரன் அபிமெலக்கிற்கு அஞ்சிப் பெயேருக்குத் தப்பி ஓடிச் சென்று, அங்கே வாழ்ந்து வந்தார்.

22அபிமெலக்கு இஸ்ரயேல் மக்கள் மீது மூன்றாண்டுகள் ஆட்சி செய்தான்.

23கடவுள் அபிமெலக்கிற்கும் செக்கேம் குடிமக்களுக்கும் இடையே கடும் பகையை மூட்ட, அவர்கள் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.

24எருபாகாலின் எழுபது புதல்வர்களது இரத்தத்தை வன்முறையில் சிந்திய அபிமெலக்கின் மீதும் அவன் அவர்களைக் கொல்லத் துணைநின்ற செக்கேமின் குடிமக்கள் மீதும் அத்தீமை திரும்பி விழுமாறு இவ்வாறு நடந்தது.

25செக்கேமின் குடிமக்கள் அவனுக்கு எதிராக மலைகளின் உச்சிகளில் ஆள்களைப் பதுங்கி இருக்க வைத்து அவ்வழியே கடந்து செல்வோரை எல்லாம் கொள்ளையடிக்கச் செய்தனர். இது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.

26தன் சகோதரர்களுடன் செக்கேமுக்கு வந்திருந்த எபேதின் மகன் ககால், செக்கேம் குடிமக்களின் நம்பிக்கைக்குரியவனானான்.

27அவர்கள் அனைவரும் தம் விளைநிலங்களுக்குச் சென்று திராட்சையைப் பறித்து, பிழிந்து விழாக் கொண்டாடினர். அவர்கள் தம் தெய்வங்களின் கோவிலுக்குச் சென்று உண்டு குடித்து அபிமெலக்கைப் பழித்துப் பேசினர்.

28எபேதின் மகன் ககால், “அபிமெலக்கு என்பவன் யார்? செக்கேமின் மக்கள் யார்? நாம் ஏன் அவனுக்கு அடி பணிய வேண்டும்? எருபாகாலின் மகனும் செபூல் என்ற அவனுடைய அதிகாரியும் செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் ஆள்களுக்கு அடிபணிந்திருந்தார்களே? அப்படியிருக்க, நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும்?

29இம்மக்களை யார் என் கையில் ஒப்படைப்பர்? அப்பொழுது நான் அபிமெலக்கை ஒழித்துவிடுவேன். நான் அபிமெலக்கிடம் ‘உன் படையைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டு வா’ என்று கூறுவேன்” என்றான்.

30நகரின் அதிகாரி செபூல், எபேதின் மகன் ககாலின் வார்த்தைகளைக் கேட்டுச் சினமுற்றான்.

31அவன் அபிமெலக்கிற்கு மறைவாகத் தூதரை அனுப்பித் தெரிவித்தது; “இதோ! எபேதின் மகன் ககாலும் அவன் சகோதரர்களும் செக்கேமுக்கு, வந்துள்ளனர். அவர்கள் உனக்கெதிராக நகரைத் தூண்டிவிடுகின்றனர்.

32இப்பொழுது இரவோடு இரவாக எழுந்து நீயும் உன்னோடு உள்ள மக்களும் விளைநிலங்களில் பதுங்கியிருங்கள்.

33காலையில் கதிரவன் உதிக்கும் பொழுது நீ புறப்பட்டு நகருக்குள் பாய்ந்து செல்; அவனும் அவனோடு இருக்கும் மக்களும் உன்னை நோக்கி வெளியே வருவார்கள். உனக்குத் தோன்றுவது போல் அவனுக்குச் செய்”.

34அபிமெலக்கும் அவனோடு இருந்த மக்களும் இரவில் எழுந்து நான்கு பிரிவுகளாகச் செக்கேமுக்கு அருகில் பதுங்கியிருந்தனர்.

35எபேதின் மகன் ககால் வெளியே சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான். அபிமெலக்கும் அவனுடன் இருந்த மக்களும் பதுங்கியிருந்த இடத்திலிருந்து எழுந்தனர்.

36ககால் அவர்களைப் பார்த்துச் செபூலிடம், “இதோ! மக்கள் மலைகளின் உச்சிகளிலிருந்து இறங்குகின்றனர்” என்றான். அதற்குச் செபூல், “மலைகளின் நிழலை நீ மனிதர்களாகக் காண்கிறாய்” என்றான்.

37ககால் மீண்டும் இவ்வாறு கூறினான்; “இதோ! மக்கள் நாட்டின் மிக உயர்ந்த பகுதியிலிருந்து வருகின்றார்கள். ஒரு பிரிவு, குறி சொல்வோர் கருவாலி மரப்பாதையிலிருந்து வருகின்றது”.

38செபூல் அவனிடம், “அபிமெலக்கு என்பவன் யார்? நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறிய உன்வாய் எங்கே? இம்மக்களையன்றோ நீ இழித்துரைத்தாய்? இப்பொழுது புறப்பட்டுச் சென்று அவனோடு போரிடு என்றான்.

39ககால் செக்கேம் மக்களின் முன்னே சென்று அபிமெலக்குடன் போரிட்டான்.

40அபிமெலக்கு அவனைத் துரத்த, அவனிடமிருந்து தப்பி ஓடினான். நுழைவாயில் வரை பலர் காயமுற்று விழுந்தனர்.

41அபிமெலக்கு அருமாவில் தங்கினான். ககாலையும் அவன் சகோதரர்களையும் செக்கோமில் வாழாதபடி செபூல் துரத்திவிட்டான்.

42மறுநாள் வெளியே விளைநிலத்திற்கு மக்கள் செல்லவிருந்தது அபிமெலக்கிற்கு அறிவிக்கப்பட்டது.

43அவன் தன் ஆள்களைக் கூட்டி, அவர்களை மூன்று பிரிவாகப் பிரித்து, விளைநிலங்களில் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். இதோ! மக்கள் நகரிலிருந்து வெளியே வந்தனர். அவன் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொன்றான்.

44அபிமெலக்கும் அவனோடு இருந்த பிரிவும் விரைந்து சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டனர். மற்ற இரண்டு பிரிவுகள் விளைநிலங்களில் இருந்த அனைவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றன.

45அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்; அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்; நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.

46செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று, ஏல்பெரித்துக் கோவிலின் அரணுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.

47செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.

48அபிமெலக்கும் அவனுடன் இருந்த ஆள்கள் அனைவரும் சால்மோன் மலைக்கு ஏறிச்சென்றனர். அபிமெலக்கு கோடரியைத் தன் கையிலெடுத்து மரங்களின் கிளைகளை வெட்டித் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். அவன் தன்னோட இருந்தவர்களிடம், நான் செய்வதைக் கண்டீர்கள். விரைந்து அவ்வாறே செய்யுங்கள்” என்றான்.

49அவர்களுள் ஒவ்வொருவனும் கிளையை வெட்டினான். அவர்கள் அபிமெலக்கின் பின் சென்று, மதிலோடு சேர்த்து அடுக்கி, அதற்குத் தீ வைத்தனர். செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் ஆணும் பெண்ணுமாக ஆயிரம் பேர் இறந்தனர்.

50அபிமெலக்கு தெபேசுக்குச் சென்று அந்நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.

51நகரின் நடுவே உறுதியான மலைக்கோட்டை ஒன்று இருந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய நகரக் குடி மக்கள் அனைவரும் மலைக் கோட்டைக்குள் தப்பி ஓடி அதைப் பூட்டிக் கொண்டு அதன் உச்சிக்குச் சென்றனர்.

52அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான்; அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான்.

53அப்பொழுது ஒரு பெண் ஓர் அரைக்கும் கல்லை அபிமெலக்கின் தலைமீது போட்டு அவன் மண்டையைப் பிளந்தாள்.

54உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், “உன் வாளை உருவு; ஒரு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் பற்றிச் சொல்லாதபடி என்னைக் கொன்றுவிடு” என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான்.

55இஸ்ரயேல் மக்கள் அபிமெலக்கு மடிந்ததைக் கண்டனர். ஒவ்வொருவரும் தம் இடத்திற்குத் திரும்பினர்.

56இவ்வாறு, அபிமெலக்கு தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்கு எதிராகச் செய்த தீச்செயலுக்கு உரிய தண்டனையை கடவுள் அவனுக்கு வழங்கினார்.

57ஆண்டவர் செக்கேமின் மக்கள் செய்த எல்லாத் தீய செயலுக்குரிய தண்டனையையும் அவர்கள் தலைமீதே விழச்செய்தார். எருபாகாலின் மகன் யோத்தாமின் சாபம் அவர்கள்மீது விழுந்தது


9:53 2 சாமு 11:21.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks